பதிவு செய்த நாள்
27 நவ2017
01:01
ஏப்ரல் _ ஜூன் காலாண்டின் முடிவில், ஜி.டி.பி., எனப்படும், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 5.7 சதவீத அளவுக்கே வளர்ந்தது என்ற செய்தி வெளியான போது, பங்குச் சந்தையில் மட்டுமல்ல, பொதுமக்கள் மத்தியிலும் லேசான அதிர்ச்சி. தற்போது, நவம்பர் 30ம் தேதி, ஜூலை – செப்டம்பர் காலாண்டுக்கான ஜி.டி.பி., விகிதம் வெளிவரப் போகிறது. இப்போது நிலைமை என்னவாக இருக்கும்?
வளர்ச்சி விகிதம், 6.2 – 6.3 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார், நிதி ஆயோக் துணைத் தலைவர், ராஜீவ் குமார். பொருளாதாரத் துறை செயலரான, சுபாஷ் சந்திர கார்க், ‘பொருளாதாரச் சரிவு முடிந்துவிட்டது; இனிமேல் உயர்வுதான்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இன்னொரு பக்கம், பல்வேறு சர்வதேச தர நிர்ணய நிறுவனங்கள், இந்தியாவின் ரேட்டிங்கை உயர்த்தவோ, அல்லது அப்படியே வைத்திருக்கவோ செய்திருக்கின்றன. எல்லோருமே பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., புதிய தி வால் சட்டம் ஆகியவை எதிர்காலத்தில் பலன் அளிக்கப் போகின்றன; அதனால், வளர்ச்சிக்குப் பாதிப்பு இருக்காது என, நம்பிக்கை வார்த்தை சொல்கின்றனர்.இவர்கள் சொல்வதைக் கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்ற காலாண்டில் ஏற்பட்ட சரிவுக்கு பல்வேறு காரணங்கள் அலசப் பட்டுவிட்டன. அவற்றிலிருந்து நாம் மீண்டுவிட்டோமா என்பதைத் தெரிந்து கொள் வதில் தான் சுவாரசியமே இருக்கிறது.
ஜி.எஸ்.டி., அமலாவதற்கு முன்பு, கையிலிருந்த சரக்குகளை விற்றுவிடும் பரபரப்பில், பல்வேறு நிறுவனங்கள் அப்போது இருந்தன. புதிய உற்பத்தி மேற்கொள்ளப்படவில்லை. ஜூலை முதல் ஜி.எஸ்.டி., அமலான பின், பல்வேறு துறைகளில் மீண்டும் உற்பத்தி துவங்கியது. இதனால் தான், தொழிற்சாலை உற்பத்தி குறியீடு, பர்சேஸிங் மேனேஜர்கள் குறியீடு, ஏற்றுமதிகள் ஆகியவை ஏறுமுகம் காட்டிஉள்ளன. மேலும், பண்டிகைக் காலம் கொஞ்சம் முன்னதாகவே துவங்கியதால், விற்பனைகளும், அதற்கான உற்பத்தியும் ஆரம்பித்தன. ஜி.டி.பி., கணக்கீட்டின் ஒரு அலகாக இருப்பது மொத்த மதிப்பு கூட்டல் (ஜி.வி.ஏ.).ஜூன், 2016ல், 7.6 சதவீதமாக இருந்த ஜி.வி.ஏ., செப்டம்பர், 2016ல், 6.8 சதவீதமாக சரிந்தது. இந்தக் குறைவான அடித்தளத்தில் இருந்து, ஜி.டி.பி.,யைக் கணக்கிடும்போது, ஜூலை – செப்., 2017 காலாண்டின் வளர்ச்சி விகிதம் உயர்வதற்கான வாய்ப்பு உண்டு.
கவனிக்க வேண்டிய இரண்டு மூன்று அம்சங்களும் உள்ளன. முக்கியமாக, இந்த காலாண்டில் அரசின் முதலீடுகள் ஏற்படுத்தியுள்ள முன்னேற்றம் என்ன? சென்ற ஆண்டு இதே காலாண்டில், இந்திய அரசு செலவழித்த தொகை, 5,15,896 கோடி ரூபாயோடு ஒப்பிடும்போது, இந்த ஆண்டு அது செலவழித்துள்ளதோ, 4,98,456 கோடி ரூபாய்தான். இதேபோல் மூலதனச் செலவுகளும் சென்ற ஆண்டைவிடக் குறைவே. கடந்த மூன்றரை ஆண்டுகளில் முதன்முறையாக, ஜூலை – செப்., 2017 காலாண்டில் தான் இத்தகைய செலவுச் சரிவு நடந்துள்ளது.செப்டம்பர், 2016ல் விவசாயத் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி, 4.1 சதவீதம். இந்த ஆண்டோ, கரீப் பருவ விவசாயம் தள்ளாட்டம் கண்டு உள்ளது. மேலும் பல மாநிலங்களில் நடந்த விவசாயிகளின் போராட்டங்கள் காரணமாக, விளைச்சல் எவ்வளவு தூரம் உயர்ந்துள்ளது என்று பார்க்க வேண்டும்.இதைவிட முக்கியம், தனியார் துறை முதலீடுகள். ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்ட போது தேங்கிப் போன முதலீடுகள் மீண்டும் தொழில்துறைக்குள் வந்திருக்கின்றனவா? உற்பத்தி பெருகினவா என்று தெரியவேண்டும். ஜி.எஸ்.டி.,யின் தாக்கத்திலிருந்து, பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மீண்டுவிட்டன.
அதேபோல், அவற்றின் நம்பிக்கையும் பெருகியுள்ளன. மிகச் சிறு, சிறு, குறுந்தொழில் செய்வோர் மத்தியில் இன்னும் நம்பிக்கை பெருகவில்லை.இந்தச் சூழ்நிலையில், செப்டம்பர் மாதம், தொழில்முறை கணிப்பாளர்கள் மத்தியில், ஆர்.பி.ஐ., நடத்திய ஆய்வில் தெரிய வரும் விபரங்கள் இவை: விவசாயம், 3 சதவீதம் உயர, தொழில்துறை, 4 சதவீதமாகவும், சேவைகள், 7.9 சதவீதமாகவும் வளரும். மொத்த மதிப்பு கூட்டல், 6.2 சதவீதமாக இருக்க, மொத்த உள்நாட்டு உற்பத்தி, 6.5 சதவீதமாக இருக்கலாம் என்பது கணிப்பு.உற்பத்தி பக்கம் மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறோம், நுகர்வோர் பக்கம் என்ன ஆகியிருக்கிறது என்றும் கணிக்கவேண்டும். நுகர்வோர் மத்தியில், சந்தையில் செலவு செய்து, புதிய பொருட்களையோ, சேவைகளையோ பெறுவதற்கான நம்பிக்கை உயர்ந்திருக்கிறதா? அதையும் உள்ளடக்கியதே ஜி.டி.பி., கணக்கீடு.
ஜூன் மாத காலாண்டில், ‘வர்த்தகம், ஓட்டல்கள், போக்குவரத்து, கிடங்கு மற்றும் தொலைதொடர்பு’ என்ற தொகுதி மட்டும், 11.1 சதவீத அளவுக்கு வளர்ந்திருந்தது. அதேபோன்ற வலுவான வளர்ச்சி மீண்டும் இந்தக் காலாண்டிலும் இருக்குமா? சரியுமா? செப்டம்பர் மாதம் எடுக்கப்பட்ட, ஆர்.பி.ஐ.,யின் நுகர்வோர் நம்பிக்கை குறியீடு சரிந்தே இருந்தது என்பதையும் தொழில்துறை எதிர்பார்ப்பில் தொய்வு இருந்தது என்பதையும் இதனோடு சேர்த்தே பார்க்கவேண்டும்.இதையெல்லாம் கணக்கில் எடுத்துகொண்டு பார்க்கும்போது, மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஜூலை – செம்டம்பர் காலாண்டில், 6 – 6.2 சதவீதம் வரை இருக்கலாம் என்பதே பொருளாதார நிபுணர்கள் கருத்து. இதே நிலை தொடருமானால், 2017 – 18 இரண்டாம் அரையாண்டில் ஜி.வி.ஏ., 7 சதவீதத்துக்கும் சற்றுக் கூடுதலாக இருக்கலாம் என்பதே எதிர்பார்ப்பு.
ஜி.டி.பி., வளர்ச்சி அனைத்துத் துறையிலும் பிரதிபலித்திருக்குமா? வேலைவாய்ப்புகள் பெருகியிருக்குமா என்றெல்லாம் கேள்விகள் எழலாம். ஒவ்வொரு முறையும், வேறு வேறு துறைகள் விழித்தெழுந்து, வளர்ச்சிக்கு உந்துசக்தியாக இருந்துள்ளன. இந்த முறை அந்தப் பாரத்தைத் தோளில் சுமக்கும் துறை எதுவோ? ஆனால், ஒரு விஷயம் உண்மை. ஜி.டி.பி., அளவு உயருமானால், மத்தியமர்கள், தொழில்செய்வோர், அரசு ஊழியர்கள் மத்தியில் கொஞ்சம் தைரியம் பிறக்கும். நாம் சரிவை நோக்கிப் போகவில்லை, தாக்குப் பிடித்துவிட்டோம் என்ற துணிச்சல் வரும். இந்த நம்பிக்கையே, அவர்களை மேன்மேலும் பொருட்களை வாங்கவும், அதன்மூலம் சந்தை விரிவடையவும் வாய்ப்பளிக்கும். தனியார் முதலீடுகள் பெருக, இதுவே அடிப்படை. சிக்கிக்கொண்டிருந்த ஜி.டி.பி., தேர், மீண்டும் ஓடத் தொடங்கி விட்டதா என்பது பற்றி நவம்பர், 30ம் தேதி தெரிந்துவிடும்.
-ஆர்.வெங்கடேஷ்பத்திரிகையாளர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|