பதிவு செய்த நாள்
27 மார்2018
04:05
புதுடில்லி : வரும் மாதங்களில், ஊரகத் துறை சார்ந்த வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் பங்குகள் விலை உயர வாய்ப்புள்ளதாக, ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
இது குறித்து, உலகளவில், நிதிச் சேவைகளில் ஈடுபட்டுள்ள, ‘பேங்க் ஆப் அமெரிக்கா மெரில் லிஞ்ச்’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: உள்நாடு மற்றும் சர்வதேச நிலவரங்களால், இந்திய பங்குச் சந்தைகள், வரும் மாதங்களில் அதிக ஏற்ற, இறக்கமாக இருக்கும். மும்பை பங்குச் சந்தையின், ‘சென்செக்ஸ்’ குறியீடு, தற்போது உள்ளதை விட குறைந்து, டிசம்பரில், 32 ஆயிரம் புள்ளிகளாக சரியும்.
இந்த நிலையிலும், ஊரக வளர்ச்சி சார்ந்த, சிமென்ட், இருசக்கர வாகனம், நுகர்பொருட்கள் போன்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்குகளுக்கு, தேவை அதிகரிக்கும்; அதனால், பங்குகள் விலை உயரும். அடுத்த ஆண்டு வர உள்ள, பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு, மத்தியில் ஆளும், பா.ஜ., அரசு, ஊரக முன்னேற்றத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, ஊரக மக்களின் வாழ்க்கை தரம் மேம்படும். அவர்களின் செலவழிப்பு வருவாய் உயரும் என்பதால், நுகர்வு அதிகரிக்கும்.
மத்திய அரசு, 2022ல், ‘அனைவருக்கும் வீடு’ என்ற இலக்கை நோக்கி நடைபோட்டு வருகிறது. இதற்கு, ‘பிரதமர் வீட்டுவசதி திட்டம்,’ வீட்டுவசதி கடன், வட்டி ஆகியவற்றுக்கு வழங்கும் மானியம் ஆகியவை உதவும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், ஊரக பகுதிகளில் கட்டுமான பொருட்களின் தேவை அதிகரிக்கும். இது, சிமென்ட், உருக்கு உட்பட, அடிப்படை கட்டமைப்பு வசதிக்கு அத்தியாவசியமான பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவும்.
ஊரக மக்களின் செலவழிப்பு திறன் உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளதால், நுகர்ப்பொருட்களுக்கான தேவை பெருகும். இது, இத்துறை நிறுவன பங்குகள் விலை உயர்வுக்கு வழி வகுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|