பதிவு செய்த நாள்
14 மே2018
00:31
பங்குச் சந்தை நோக்கிச் செல்லும் சேமிப்புகளின் வேகம் சற்றும் குறையவில்லை. வைப்பு கணக்கில் மக்கள் நம்பிக்கை இழந்த சூழல் உருவாகி உள்ளது. இந்த சூழல், முதலீட்டாளர் நடத்தையை மாற்றி வருவது மறுக்க முடியாதது. கடந்த ஓராண்டாக, பலர் தங்கள் சேமிப்புகள் முழுவதையும் மாற்றி அமைப்பதில் தீவிரம் காட்டுகின்றனர். பங்குச் சந்தை பக்கமே வராதவர்கள்கூட மனம் மாறி சிந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது.
புதிய முதலீட்டாளர்கள் பங்குச் சந்தைக்கு தொடர்ந்து வருகை புரியும் இத்தருணத்தில், யாருக்கு என்ன பொறுப்பு? துறைசார் நெறிகளின் முக்கியத்துவம் என்ன? வருங்காலத்தில் முதலீட்டாளரின் நம்பிக்கையை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள அனைத்து தரப்பும் என்ன செய்ய வேண்டும்? இந்த கேள்விகள் மிக முக்கியமானவை.
முதலீட்டாளர்கள் ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்துகொள்வது அவசியம். முதலீட்டு முடிவுகளின் பொறுப்பு மிக தெளிவாக நெறிப்படுத்தப்பட வேண்டும். அந்த பொறுப்பு முதலீட்டாளரை மட்டுமே சார்ந்தது. அதை இன்னொருத்தருக்கு தருவதாக இருந்தால், அதற்கு முன் சில அடிப்படை விஷயங்களை தெளிவாக உணர வேண்டும்.
முதலீட்டாளர்களுக்கு ஆலோசனை வழங்க, ‘செபி’ தெளிவான அங்கீகாரம் கொடுத்து உள்ளது. அங்கீகரிக்கப்பட்டோரை அணுகி ஆலோசனை பெறலாம். அப்படி பெறும்போதும், முதலீட்டு முடிவின் பொறுப்பு முதலீட்டாளரையே சாரும். ஆலோசனையை தெளிவாக விளக்கும் பொறுப்பு மட்டுமே ஆலோசகரை சேரும்.
அமைப்புசாரா முறையில் ஆலோசனை கொடுப்பது சட்ட விரோதம். அப்படி மீறி பெறும் ஆலோசனை பொறுப்பும்கூட முதலீட்டாளரையே சேரும். இதை தெளிவாக உணர வேண்டும்.கொடுக்கப்பட்ட ஆலோசனையின் மீது முடிவெடுப்பது முதலீட்டாளரின் கடமை. பரஸ்பர நிதி வர்த்தகமும் அமைப்பு சார்ந்தது. வர்த்தகர்கள் விற்பனை செய்ய மட்டுமே அங்கீகரிக்கப்பட்டவர்கள். அவர்கள் செய்யும் விற்பனைக்கு சார்பான, உகந்த ஆலோசனைகளை கொடுக்கலாம். ஆனால், அவற்றின் மீது எடுக்கும்
முடிவுகளின் பொறுப்பு முதலீட்டாளரையே சேரும்.பங்கு வர்த்தகர்கள் ஆலோசனை வழங்கினால், அதன் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு முதலீட்டாளர் மட்டுமே பொறுப்பு. இதைக்கூட உணராமல், பலரின் ஆலோசனையில் தின வர்த்தகம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
பங்கு தரகர்கள் அமர்த்தியுள்ள டீலர்கள், முதலீட்டு ஆலோசகர்கள் அல்ல. அவர்கள் டீலிங் மட்டுமே செய்ய அங்கீகரிக்கப்பட்டவர்கள். நீங்கள் சொல்வதை நிறைவேற்றுவதே அவர்கள் பொறுப்பு. முடிவெடுக்கும் பொறுப்பும், ஆலோசனைகளை வழங்கும் பொறுப்பும் அவர்களை சாராது.
சந்தையில் நடக்கும் பெருவாரியான இழப்புகள், இந்த அடிப்படை புரிதலை அனைத்து தரப்பினரும் மதிக்காததால் தொடர்ந்து நடக்கின்றன.முதலீடுகளை பங்குச் சந்தையில் தொடர்ந்து செய்வதில் தவறில்லை. ஆனால், அவற்றை நல்ல வரைமுறைகளுக்குள் கட்டுப்படுத்தி செய்வது மிக அவசியம். முடிவெடுக்கும் பொறுப்பை முதலீட்டாளர்கள் ஏற்க வேண்டும். அந்த பொறுப்பை சிறக்கச் செய்ய ஆவன செய்ய வேண்டும். ஆலோசனைகளை உரிய அங்கீகாரம் பெற்றவர்களிடம் பெறலாம். பெற்ற ஆலோசனையை பரிசீலித்து, நன்கு யோசித்து முடிவெடுக்கும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
அவசர ஆலோசனை பெற்று, அவசர முடிவெடுக்கும் போக்கை அறவே கைவிட வேண்டும். பங்கு முதலீடு ஒரு நெடுங்கால பயணம். அந்த பயணம் இனிதே நடக்க, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்பது ஒவ்வொரு முதலீட்டாளரின் கடமை.
ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|