பதிவு செய்த நாள்
14 மே2018
00:35
உலகின் மிகப்பெரிய சில்லரை வர்த்தக நிறுவனமான வால்மார்ட், இந்திய மின்னணு வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட்டின், 77 சதவீத பங்குகளை வாங்கப் போகிறது என்ற செய்தி வெளியானவுடனே, எண்ணற்ற ஹேஷ்யங்கள், எதிர்பார்ப்புகள், எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இதை எப்படி புரிந்துகொள்வது? வாடிக்கையாளர்களுக்கு இதனால் என்ன பலன்?
முதலில் இந்தச் செய்தி மிகுந்த பிரமிப்பையும், நம்பிக்கையையும், இளம் தொழில் துறையினர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. 11 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட இளைய தலைமுறை நிறுவனம் பிளிப்கார்ட். அதன் வளர்ச்சி அபாரமானது. இந்தியாவில் இணையமும், அலைபேசிகளும் தொழில்நுட்பமும் வளர்ந்த வேகத்தை ஒட்டி வளர்ந்த புதுமை இணைய சேவை இது.
இந்த நிறுவனத்தை, சர்வதேச மெகா நிறுவனமான வால்மார்ட் ஒரு பொருட்டாக கருதி, 16 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில், 1 லட்சத்து, 12 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய முன்வந்திருப்பது அரிய விஷயம்.இந்தியாவைச் சேர்ந்த இளைய தலைமுறை தொழில் துறையினருக்குக் கிடைத்துள்ள உலக அங்கீகாரமாகவே இந்த ஒப்பந்தம் பார்க்கப்படுகிறது.இதற்கு வேறு சில அர்த்தங்களும் உண்டு. இந்திய மின்னணு வர்த்தக சந்தை முதிர்ச்சியடைந்துள்ளது; இணைய சேவைகளின் தரம் உயர்ந்துள்ளது; இந்திய வாடிக்கையாளர்கள் இணையத்தில் பொருட்களை வாங்குவதில்,தொடர்ச்சியாக ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்திய உற்பத்தியாளர்களும் மேன்மேலும் இணைய வர்த்தகத்தில் கவனம் செலுத்துகின்றனர்; தரமான பொருட்கள், உரிய நேரத்தில் கொண்டு சேர்க்கப்படுகிறது; அதன் வாயிலாக, வாடிக்கையாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது என்றெல்லாம் இதற்கு அர்த்தம் கற்பித்துக் கொள்ளலாம்.
இது உண்மையும் கூட. அரசும், தனிநபர்களும் படிப்படியாக பலமுனைகளில் செய்துவரும் முயற்சிகளுக்கு கிடைத்துள்ள சர்வதேச கவனமாகவும், அங்கீகாரமாகவும் இதைக் கருதுவதில் தவறில்லை. சரி, தைரியமாக கொஞ்சம் காலரைத் துாக்கிவிட்டுக்கொள்ளுங்கள்! பெருமிதப்படலாம்.
பயன் என்ன?
வால்மார்ட், பிளிப்கார்ட் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தால், வாடிக்கையாளர்களுக்கு என்ன பயன்?
வால்மார்ட்டுக்கு சில திறமைகள் உண்டு. முக்கியமாக, அது உலக அளவில் உற்பத்தியாளர்களிடமே நேரடியாகக் கொள்முதல் செய்து, அதைத் தங்கள் கடைகள் வாயிலாக, சந்தை விலையை விடக் குறைந்த விலையில் விற்று வருகிறது. தங்களுக்கு என பிரத்யேக பிராண்டுகளை உருவாக்கியிருப்பதோடு, தரத்தை உறுதிப்படுத்தியும் வருகிறது.
தரமான பொருட்கள், மலிவான விலையில் கிடைப்பதற்கான எல்லா சாத்தியங்களும் உண்டு. அதுவும், சீன தயாரிப்புகள் இங்கே பெருமளவு வந்திறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.வால்மார்ட்டின் பலங்களில் ஒன்று, வீட்டுக்குத் தேவையான அரிசி, பருப்பு, பலசரக்குப் பொருட்களை விற்பனை செய்வது.
பிளிப்கார்ட் இந்த விஷயத்தில் சற்றே கோட்டை விட்டுவிட்டது. இருவரும் கைகோர்க்கும்போது, இந்தியசந்தையில் பலசரக்குப் பொருட்களையும், இணைய வழியில் கொண்டு சேர்க்கும் வர்த்தக முறையை அறிமுகப்படுத்த முடியும்.இதனால், பெரும்பாலான பொருட்களை நேரடியாக இணையத்தில் ஆர்டர் செய்து வீட்டுக்கே வரவழைத்து விடலாம்.
இதையெல்லாம் செய்ய வேண்டும் என்றால், வால்மார்ட் நேரடியாக உற்பத்தியாளர்களிடமிருந்தே பொருட்களை வாங்கத் துவங்கும். இதனால், இந்திய விவசாயிகளுக்கு இடைத்தரகர்கள் தொல்லையில்லாமல், சந்தையோடு நேரடித் தொடர்பு கிடைக்கும்.
விற்பனை அதிகரிக்க அதிகரிக்க, உற்பத்தியை உயர்த்தும் நடைமுறைகளும் இங்கே அமல்செய்யப்பட வேண்டி இருக்கும்.அதேபோல், வால்மார்ட்டின் இன்னொரு திறமை, பொருட்களை கடைசி வாடிக்கையாளருக்கும் கொண்டுசேர்க்கும் வலிமை. இந்தத் திறனை அந்நிறுவனம் இந்தியாவில் களமிறக்கும். அதுவும், மிகவும் வேகமாக.வால்மார்ட்டில் இருக்கும் இன்னொரு தொழில்நுட்பம், ‘ஆம்னிசேனல்’ என்பது. அதாவது, நீங்கள் எந்தக் கருவியிலிருந்தும் தேவைப்படும் சரக்குகளை ஆர்டர் செய்யலாம். அதை, அவர்களுடைய எந்தக் கடைகளிலும் போய் பெற்றுக்கொள்ளலாம் அல்லது வீட்டுக்கும் வரவழைக்கலாம்.வருங்காலத்தில் எண்ணற்ற கடைகளை இணைக்கும்போது, இந்தச் சேவையை வால்மார்ட் அறிமுகப்படுத்தும்.
தொழில்நுட்பம் இந்தச் சேவைகளின் அடிப்படையாக இருக்கப் போகிறது. இப்போது நீங்கள் ஒரு பொருளைத் தேர்வு செய்து ஆர்டர் செய்ய வேண்டும். வருங்காலத்தில் குரல்வழி உத்தரவுகளைப் பெற்றுக்கொள்ளும் வசதி வரும். கூகுள் அல்லது மைக்ரோ சாப்ட்டுடன் இணைந்து இந்தச் சேவையை வால்மார்ட் வழங்கலாம்.
வாடிக்கையாளரே ராஜா
வால்மார்ட் இங்கே வருவதற்கான முக்கிய காரணம், ஏற்கனவே இங்கே அமேசான் கால் பதித்துவிட்டது என்பது தான்.இந்திய சந்தையை தாம் கோட்டைவிட்டு விடுவோமோ என்ற எண்ணத்தில் தான், இவ்வளவு பெரிய தொகை கொடுத்து, பிளிப்கார்ட் நிறுவனத்தைக் கையகப்படுத்த முனைந்துள்ளது.அதனால், வருங்காலத்தில் அமேசான், வால்மார்ட் இடையேயான போட்டி கடுமையாக இருக்கும். இதனால், பயனடையப் போகிறவர்கள் வாடிக்கையாளர்கள். அவர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கும், மீண்டும் மீண்டும் ஷாப்பிங் செய்வதற்கும் துாண்டும் விதத்தில் எண்ணற்ற சலுகைகளையும், வசதிகளையும் செய்து தர இவ்விரு நிறுவனங்களுமே தயங்கப் போவதில்லை.
இவர்களோடு போட்டி போடவேண்டுமெனில், சில்லரை வர்த்தகத்தில் ஏற்கனவே ஈடுபட்டு இருக்கும் ரிலையன்ஸ், டாடா குழுமம், பியூச்சர் குழுமம் போன்றவையும், தங்கள் பொருட்களின் விலைகளைக் குறைப்பதோடு, சேவையின் தரத்தையும் உயர்த்திக்கொள்ள வேண்டும்.எதுவாக இருந்தாலும், இறுதி பலன் வாடிக்கையாளர்களுக்குத் தான்.
சிறு, குறு வணிகர்கள் காணாமல் போய்விடுவர் என்ற அச்சம் தேவை இல்லை. இந்தியாவில் உள்ள, 40 கோடி மத்தியமர்களை குறிவைத்து தான் இத்தகைய நிறுவனங்கள் வருகின்றன. இவர்களால் அண்டவே முடியாத சந்தை வெளியே இருக்கிறது. அதற்கு சிறு, குறு வணிகர்களின் சேவை எப்போதும் தேவை.தொழில் துறையினருக்கு இந்த ஒப்பந்தம் ஒரு செய்தியைச் சொல்கிறது. இந்திய சந்தை எத்தகைய புதிய சேவையையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறது.
இத்தனை ஆண்டுகளாக புதுமைகள் போதுமான அளவு இல்லை. போதிய பலத்தோடு புதுமைகளையும் புகுத்தும் நிறுவனங்கள் வருமேயானால், அதற்கான வாய்ப்பு இங்கே கொட்டிக் கிடக்கிறது என்பது தான் செய்தி. சந்தைக்கேற்ப தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்வது தொழில் துறையினருக்கு நல்லது.
வாய்ப்புகளின் வாசல்
அரசுக்குத் தான் இது முக்கியமான செய்தியை சொல்கிறது. அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையை எவ்வளவு பெரிய வாய்ப்பாக பார்க்கின்றனர் என்பது தெளிவு. உள்ளே வருகிறவர்களை நெறிப்படுத்தி, முறைப்படுத்தி, இந்திய உற்பத்தியாளர்களுக்கு சிக்கல் வராமல், அதேசமயம் இங்கே விரிந்துகிடக்கும் வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும்.சில்லரை வர்த்தகம் என்பது பொன் முட்டையிடும் வாத்து. அதை, நம்மை விட, வெளிநாட்டினர் நன்கு உணர்ந்து கொண்டுள்ளனர். வால்மார்ட் ஒப்பந்தம் அதைத்தான் சொல்கிறது.
ஆர்.வெங்கடேஷ், பத்திரிகையாளர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|