பதிவு செய்த நாள்
02 ஜூன்2018
00:28
புதுடில்லி:கடந்த மே மாதம், தயாரிப்பு துறையின் வளர்ச்சி வேகத்தில் தொய்வு ஏற்பட்டிருப்பது, ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
நாட்டின் தயாரிப்பு துறை குறித்து, நிக்கி – மார்க்கிட் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:கடந்த மே மாதம், தயாரிப்பு துறை நிறுவனங்களுக்கு புதிய, ‘ஆர்டர்’கள் வருவது குறைந்துள்ளன. இதன் காரணமாக, தயாரிப்பு துறையின் உற்பத்தியும் குறைவாகவே இருந்தது; வேலைவாய்ப்புகளும், புதிய வியாபாரங்களும் குறைந்துள்ளன. இது போன்ற காரணங்களால், ஒட்டுமொத்த தயாரிப்பு துறையின் வளர்ச்சி, மிதமாகவே இருந்தது.
அதனால், மே மாதம், தயாரிப்பு துறை வளர்ச்சியை குறிக்கும், என்.ஐ.எம்., – பி.எம்.ஐ., குறியீடு, 51.2 புள்ளியாக குறைந்துள்ளது. இது, ஏப்ரலில், 51.6 புள்ளியாக இருந்தது.இக்குறியீடு, 50 புள்ளி களை தாண்டினால், அது வளர்ச்சியை குறிக்கும். இதன்படி, தயாரிப்பு துறை, தொடர்ந்து, 10 மாதங்களாக வளர்ச்சி கண்டு வருகிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்வால், பிப்ரவரி முதல், தயாரிப்பு நிறுவனங்களின் மூலப்பொருட்கள் செலவினம் அதிகரித்துள்ளது; அதற்கேற்ப, தயாரிப்பு பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளன.நம் நாடு, கச்சா எண்ணெய் தேவையில், 80 சதவீதத்தை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்து கொள்கிறது.
இந்நிலையில், கச்சா எண்ணெய் விலை உயர்வால், நாட்டின் இறக்குமதி செலவினம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும் குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரித்தால், ரூபாய் மதிப்பு மேலும் சரிவடைந்து, நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கும் என, அஞ்சப்படுகிறது.
மேலும், மூலப்பொருட்கள், உற்பத்தி பொருட்கள் ஆகியவற்றின் விலை உயர்வால், நாட்டின் பணவீக்கமும் அதிகரிக்கும் எனலாம்.எனவே, பணவீக்கத்தை கட்டுக்குள் வைக்கவும், நிதிப் புழக்கத்தை ஸ்திரப்படுத்தவும், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டியை உயர்த்தக் கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கி, நடப்பு 2018- – 19ம் நிதியாண்டின், முதல் நிதிக் கொள்கையை, ஏப்ரலில் வெளியிட்டது. அதில், ரெப்போ வட்டி மாற்றமின்றி, 6 சதவீதமாகவே தொடரும் என, தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல், தொடர்ந்து நான்காவது முறையாக ரெப்போ வட்டியில், ரிசர்வ் வங்கி மாற்றம் ஏதும் செய்யவில்லை.
இந்நிலையில், வரும், 6ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிடவுள்ள நிதிக் கொள்கையில், ரெப்போ வட்டி உயர்த்தப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நிதி பற்றாக்குறை மறுமதிப்பீடு
நாட்டின் நிதிப் பற்றாக்குறை, 2017 – 18ம் நிதியாண்டில், 3.53 சதவீதமாக மறுமதிப்பீடு செய்யப்பட்டு உள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டில், நிதிப் பற்றாக்குறை இலக்கு, 3.2 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது, பிப்ரவரியில், 3.5 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த வகையில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நிதிப் பற்றாக்குறை, 5.90 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.நடப்பு, 2018- – 19ம் நிதியாண்டில், நிதிப் பற்றாக்குறையை, 3.3 சதவீதமாக குறைக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|