பதிவு செய்த நாள்
03 ஜூன்2018
00:22
புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த சிறிய வங்கிகளின் வாராக் கடனை, பெரிய வங்கிகளுக்கு மாற்றுவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
வாராக் கடன் தொடர்பான விதிமுறைகளை, ரிசர்வ் வங்கி கடுமையாக்கியுள்ளது. இதன் விளைவாக, வங்கிகளின் வாராக் கடன் அதிகரித்து, அதற்கான நிதி ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது, வங்கிகளின் லாபத்தை பதம் பார்த்து, இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், வாராக் கடன் சுமை காரணமாக, பொதுத் துறையைச் சேர்ந்த, 12 வங்கிகளை, தீவிர ஒழுங்கு நடவடிக்கை பட்டியலில், ரிசர்வ் வங்கி சேர்த்துள்ளது.இது தவிர, பல சிறிய வங்கிகள், பலவீனமான நிறுவனங்களிடம் இருந்து வாராக் கடனை வசூலிக்க முடியாமல் விழி பிதுங்கி நிற்கின்றன. இது போன்ற வங்கிகளின் வாராக் கடன்களை, பெரிய வங்கிகளுக்கு மாற்றுவது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இது குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த, 2017 – -18ம் நிதியாண்டில், வங்கித் துறையின் வாராக் கடன், 8.50 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இதே காலத்தில், வங்கிகளின் மொத்த இழப்பு, 73 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.பல வங்கிகள், ரிசர்வ் வங்கியின் கடுமையான விதிமுறைகளால், வாராக் கடனுக்கு அதிக நிதி ஒதுக்கி, இழப்பை சந்தித்துள்ளன. இதன் காரணமாக, வங்கிகள், நிதியாதாரத்தை சமாளிக்க, மியூச்சுவல் பண்டு உள்ளிட்ட பிற துறைகளில் செய்துள்ள முதலீடுகளை திரும்பப் பெறத் துவங்கிஉள்ளன.
மத்திய நிதியமைச்சகமும், மறு பங்கு மூலதன திட்டத்தின் கீழ், வங்கிகளுக்கு, நடப்பு நிதியாண்டில், 65 ஆயிரம் கோடி ரூபாய் தான் ஒதுக்க முடியும் என, திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.வாராக் கடன் சுமை; பங்கு மூலதன தேவையை சமாளிக்க, பங்கு வெளியீடுகளை மேற்கொள்ள முடியாத நிலை; லாபத்தில் சரிவு, இழப்பு என, பல வகையில் வங்கிகள் திணறிக் கொண்டிருக்கின்றன.
அதனால், பொதுத் துறையைச் சேர்ந்த, 21 வங்கிகளில், சிறிய வங்கிகளை தேர்வு செய்து, அவற்றின் வாராக் கடன்களை, பெரிய வங்கிக்கு மாற்றும் திட்டம், பரிசீலனையில் உள்ளது.இதன் மூலம், வாராக் கடன் சுமையில் இருந்து சிறிய வங்கிகள் விடுபடும். அத்துடன், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை பின்பற்றத் துவங்கியுள்ளதால், எதிர்காலத்தில் வாராக் கடன் பிரச்னை தவிர்க்கப்படும்.
குறிப்பாக, ஆந்திரா வங்கி, தேனா வங்கி போன்ற சிறிய வங்கிகளின், வாராக் கடன்களை மாற்றலாம். கடன் மீட்பு வங்கி குழுவில் இந்த வங்கிகள் இடம் பெற்றுள்ள போதிலும், இவற்றின் வாராக் கடன், 5 சதவீத அளவிற்கே உள்ளது.அதனால், இவ்வங்கிகளின் வாராக் கடனை, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா போன்ற பெரிய வங்கிகளுக்கு மாற்றலாம். விரைவில், இத்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
ரிசர்வ் வங்கி, வாராக் கடன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடிப்படையில், ஐ.டி.பி.ஐ., சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, ஐ.ஓ.பி., அலகாபாத் வங்கி, பேங்க் ஆப் இந்தியா உட்பட, 12 வங்கிகளை, ஒழுங்கு நடவடிக்கை பட்டியலில் இணைத்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|