பதிவு செய்த நாள்
04 ஜூன்2018
02:05
கடந்த, 2017- – -18ம் நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகள் வெளியாகியுள்ளன. ஒரு பக்கம் மகிழ்ச்சியையும், மறு பக்கம் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள, ஜி.டி.பி., மதிப்பீடுகளை எப்படி புரிந்துகொள்ள வேண்டும்?
இந்தியாவின் மொத்த வளர்ச்சியைக் குறிப்பது, ஜி.டி.பி., எனப்படும், மொத்த உள்நாட்டு உற்பத்தி. உண்மையான வளர்ச்சியைக் குறிப்பது, ஜி.வி.ஏ., எனப்படும், மொத்த மதிப்புக் கூட்டல். 2017-- – -18ம் நிதியாண்டில் இந்தியாவின், ஜி.டி.பி., 6.7 சதவீதமும், ஜி.வி.ஏ., 6.5 சதவீதமும் உயர்ந்துள்ளன.
ஜி.டி.பி., 6.6 சதவீதமாக மட்டுமே வளரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 6.7 சதவீத வளர்ச்சி கொஞ்சம் தெம்பளிக்கிறது. இதற்கு காரணம், சென்ற நிதியாண்டின் கடைசி காலாண்டில், அதாவது ஜனவரி – மார்ச், 2017ல் ஏற்பட்ட அபரிமிதமான வளர்ச்சி.அந்த காலாண்டில், ஜி.டி.பி., 7.7 சதவீதமாக வளர்ந்து, மொத்த ஆண்டின் வளர்ச்சி மதிப்பீட்டை உயர்த்தியுள்ளது. இந்த மதிப்பீடுகள் சொல்லும் செய்திகள் என்ன?
முதலில் ஜனவரி – மார்ச், 2017 காலாண்டு விபரங்களை எடுத்துக்கொள்வோம். இதை, ஜனவரி – மார்ச், 2016 காலாண்டுடன் ஒப்பிடும் பழக்கம் தான் நம்மிடம் உண்டு. அப்போது, பண மதிப்பிழப்பும், அதன் தாக்கமும் தொடர்ந்து கொண்டிருந்த நேரம். அதனால் அப்போது, ஜி.டி.பி., மதிப்பீடு மிகவும் குறைவாக இருந்தது. அதனோடு ஒப்பிடும் போது, இந்த நிதியாண்டின் காலாண்டு உயர்வாக இருப்பதில் வியப்பில்லை.
இந்த காலாண்டில் வளர்ச்சி எங்கிருந்து வந்திருக்கிறது? அரசு துறை முதலீடுகள், தொழில் துறை மற்றும் கட்டுமானத் துறை ஆகியவற்றில் ஏற்பட்ட முன்னேற்றங்களே, நான்காம் காலாண்டின் வளர்ச்சிக்கு உதவியுள்ளன.
கணக்கிடும் விதம்
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து, முழுமையாக மீண்டுவிட்டோம் என்பதற்கு, நான்காம் காலாண்டு சாட்சி சொல்கிறது. அதேபோல், ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்டபோது ஏற்பட்ட ஏற்ற, இறக்கங்களில் இருந்தும், நம் பொருளாதாரம் மீண்டுள்ளது.
ஜி.வி.ஏ., 6.5 சதவீதம்
மட்டுமே வளர்ந்துள்ளதை பார்க்கும்போது, அதாவது, ஜி.டி.பி.,யை விடவும் குறைவாக வளர்ந்துள்ளதை பார்க்கும்போது, இதை வேறுவிதமாக புரிந்துகொள்ள வேண்டிய தேவை ஏற்படுகிறது.அதாவது, ஜி.டி.பி.,யைக் கணக்கிடும் விதம் இது தான். ஜி.வி.ஏ., + வரிகள் – மானியங்களே, ஜி.டி.பி., மதிப்பீட்டைத் தரும். இப்படி பார்க்கும்போது, கூடுதலான வரிகள் மூலம் ஈட்டப்பட்ட வருவாயே வளர்ச்சிக்கு வழி செய்துள்ளதை புரிந்துகொள்ளலாம்.துறை ரீதியாகப் பார்க்கும் போது, சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது, பல துறைகள் வளரவில்லை என்பதும் கண்கூடு.
உதாரணமாக விவசாயம், 3 சதவீதம் சரிவு; சுரங்கம், 16 சதவீதம் சரிவு; உற்பத்தி துறை, 3 சதவீதம் சரிவு.சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது, வளர்ந்துள்ள துறைகள் என்று பார்த்தால், வர்த்தகம், ஓட்டல்கள், போக்குவரத்து, தொலைதொடர்பு, ஒலிபரப்பு சேவைகள், நிதித் துறை, ரியல் எஸ்டேட், தொழில்சார் சேவை துறை ஆகியவை மட்டுமே வளர்ச்சி பெற்றுள்ளன.தலைவலிகள்சென்ற நிதியாண்டின் வளர்ச்சி, 7.1 சதவீதம். அதனுடன் ஒப்பிடும்போது, 6.7 சதவீதம் என்பது மைனஸ், 0.4 சதவீதம் சரிவு தான். இந்தச் சரிவை, நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.
இது பொருளாதார இழப்பு மட்டுமல்ல, வேலையிழப்பு, உற்பத்தி இழப்பு என்று பல விஷயங்களை உள்ளடக்கியது.நான்காம் காலாண்டில் தெரியும் வளர்ச்சி முகம், அடுத்து வரும் காலாண்டுகளிலும் தொடரும் என்பதே எதிர்பார்ப்பு. இதனால், 2018 – -19ம் நிதியாண்டில், நாம், 7.5 சதவீதம் வளருவோம் என்பதே இந்திய அரசின் கணிப்பு.பரந்துபட்ட, அதேசமயம் துரித வளர்ச்சி ஏற்பட்டால் மட்டுமே இத்தகைய முன்னேற்றத்தை நம்மால் அடைய முடியும்.
இன்றைக்கு இந்தியா சந்திக்கும் மூன்று பிரச்னைகள், நம்மை கவலை கொள்ள வைத்துள்ளன. உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை, உயரும் வட்டி விகிதங்கள், பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன்கள் ஆகியவையே, நமக்கான பெரிய தலைவலிகள்.
‘ரேட்டிங்’ நிறுவனங்கள்
இந்நிலையில், இவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்ட இரண்டு, ‘ரேட்டிங்’ நிறுவனங்கள் சொல்லியிருப்பதையும் இங்கே கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். 7.5 சதவீதம் வளர்ச்சி ஏற்படும் என்ற மதிப்பீட்டை, ‘மூடீஸ்’ நிறுவனம் மாற்றவில்லை. ஆனால், வெளிப்புற பாதிப்புகள் அதிகரித்தாலோ, இந்திய அரசின் நிதி உறுதித் தன்மையோ அல்லது வங்கிகளின் பலம் குறைந்தாலோ, தங்களுடைய மதிப்பீட்டைக் குறைக்க வேண்டி வரலாம் என, தெரிவித்துள்ளது.
மற்றொரு நிறுவனமான, பிட்ச், தங்களுடைய மதிப்பீடு7.5 சதவீதம் அல்ல, 7.3 சதவீதம் தான் என்று தெரிவித்துள்ளது.இதேசமயத்தில் வெளியாகிஉள்ள இன்னொரு தரவையும், இங்கே கணக்கில் எடுத்துக் கொள்வோம். ‘பர்சேசிங் மேனேஜர்ஸ் இண்டெக்ஸ் அதாவது, பி.எம்.ஐ., எனப்படும் உற்பத்தி சார்ந்த குறையீடு, நம் உற்பத்தித் துறையில் லேசான தேக்கம் இருப்பதை உறுதி செய்துள்ளது. ஏப்ரல் மாதம், 51.6 புள்ளியில் இருந்து மே மாதம், 51.2 புள்ளிக்குச் சரிந்துள்ளது.
அதாவது உற்பத்தியாகி வெளிவரும் பொருட்களில், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில், புதிய தொழில்களைத் துவங்குவதில் சுணக்கம் ஏற்பட்டிருப்பதையே இச்சரிவு சொல்கிறது.
வாகன விற்பனைமுடிந்தது முடிந்தவையாக இருக்கட்டும், 2018 – 19ம் நிதியாண்டு உற்சாகமான ஆண்டாக இருப்பதற்கு, வாய்ப்பு தென்படுகிறதா என்று நீங்கள் கேட்பது புரிகிறது.இருக்கிறது... இந்த ஆண்டு, நல்ல மழை பொழிவு இருக்கும். அதனால் விவசாய செழிப்பு இருக்கும் என்பது எதிர்பார்ப்பு. வானிலை ஆய்வு மையமும் இதற்கு மழை பொழிவை உறுதி செய்திருக்கிறது. அதேபோல், அரசு முதலீடுகள் தொடரும். ஜி.எஸ்.டி., மூலம் வரும் வருவாய் பெருகும்.
இன்னொரு பக்கம் மக்களிடம் வாங்கும் சக்தி பெருகும்.ஏற்கனவே, பொருளாதாரத்தின் அளவுகோலாக கருதப்படும், ‘ஆட்டோமொபைல்’ துறை தொடர்ச்சியாக வளம் பெற்று வருகிறது. ஒவ்வொரு மாதமும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் விற்பனை உயர்ந்து வருவதோடு, டிராக்டர்களின் விற்பனையும் பெருகியுள்ளது. இவையெல்லாம் இங்கே வளர்ச்சிக்கான சாத்தியத்தையே உரக்கச் சொல்கின்றன.
வளர்ச்சிக்கு இணக்கமான முயற்சிகளில் மட்டும் அடுத்த ஓராண்டுக்கு மத்திய அரசு கவனம் செலுத்துமானால், ஜி.டி.பி., மதிப்பீடுகளோடு சேர்ந்து, இந்திய மக்கள் வாழ்க்கைத் தரமும் நிம்மதியும் உயரும் என்பது நிச்சயம்.
ஆர்.வெங்கடேஷ் பத்திரிகையாளர்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|