பதிவு செய்த நாள்
05 ஜூன்2018
01:49
திண்டுக்கல்:திண்டுக்கல் அருகே போலியம்மனுார் கிராமத்தில், காய்கறிகளை மதிப்பு கூட்டிய பொருளாக மாற்றி சந்தைப்படுத்தும் பணியில் மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
அதிகளவில் கொள்முதல்
தோட்டக்கலை பயிர்களை அதிகம் விளைவிக்கும் மாவட்டம் திண்டுக்கல். காய்கறி சாகுபடியில் அதிக மகசூல் கிடைத்தால் நல்ல விலை கிடைக்காது; நல்ல விலை கிடைக்கும் போது மகசூல் வராது என்ற சோகம் விவசாயிகளிடம் தொடர்கிறது.இதுபோன்ற நிலைமையை எதிர்கொள்ள, உற்பத்தி அதிகரிக்கும் போது காய்கறி, பழங்களை பதப்படுத்துதல், மதிப்பு கூட்டும் பொருளாக மாற்றுதல் என, தொழில் நுட்பங்கள் குறித்து அரசு துறைகள் அவ்வப்போது பயிற்சி வழங்குகின்றன.ஆனால், பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட வில்லை.இருப்பினும் திண்டுக்கல் அருகே, போலியம்மனுார் கிராமத்தில் உள்ள 200க்கும் மேற்பட்டோர் காய்கறிகளை மதிப்பு கூட்டி, வத்தல் தயாரித்து, இந்தியா முழுவதும் அனுப்புகின்றனர்.
இத்தொழிலுக்கு கை கொடுக்கும் வகையில், அருகிலேயே பிரபலமான ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் செயல்படுகிறது.ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு நாள்தோறும் ஏராளமான காய்கறிகள் வருகின்றன.மகசூல் அதிகரிப்பால் காய்கறி விலை மலிவாகும் போது, அதிகளவில் அவற்றை கொள்முதல் செய்கின்றனர். கத்திரி, கொத்தவரை, பாகற்காய், சுண்டைக்காய், கோவைக்காய், என காய்கறிகளை மொத்தமாக வாங்குகின்றனர்.இதை பெரிய, ‘டிரம்’களில் உப்பு சேர்த்து வேக வைத்து, உலர வைத்து வத்தலாக்கி, 30 கிலோ, 45 கிலோ மூட்டைகளாக தயார் செய்து மார்கெட்டுக்கு அனுப்புகின்றனர்.
உலர்களங்கள்
இந்த தயாரிப்புக்கென ஒவ்வொரு வீட்டின் முன்பும் உலர் களம் அமைத்துள்ளனர். இவ்வகையில் இங்கு நுாற்றக்கணக்கான உலர்களங்கள் உள்ளன. கோடை காலத்தில் இப்பணி விறுவிறுப்பாக நடைபெறும்.பலருக்கு வேலைவாய்ப்பை தரும் இத்தொழிலை மேலும் மேம்படுத்த தொழில் நுட்ப பயிற்சிகள், ஆலோசனைகளை தோட்டக்கலை துறை வழங்க வேண்டும் என,அங்கிருப்பவர்கள் விரும்புகின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|