பதிவு செய்த நாள்
06 ஜூன்2018
00:38
மும்பை:‘வங்கித் துறையின் வாராக் கடன், நடப்பு நிதியாண்டில், 11.5 சதவீதமாக அதிகரிக்கும்’ என, ‘கிரிசில்’ நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த, 2016 – -17ம் நிதியாண்டில், வங்கித் துறையின் மொத்த கடனில், வாராக் கடன், 9.5 சதவீதமாக, அதாவது, 8 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
குறையும்
இது, இந்தாண்டு மார்ச்சுடன் முடிவடைந்த, 2017 -– 18ம் நிதியாண்டில், 11.2 சதவீதமாக அதிகரித்து, 10.3 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.நடப்பு, 2018 -– 19ம் நிதியாண்டில், வங்கித் துறையின் வாராக் கடன், 0.3 சதவீதம் உயர்ந்து, 11.5 சதவீதமாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நிதியாண்டில் வங்கித் துறையின் வாராக் கடன் குறையும். மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் எடுத்து வரும் நடவடிக்கைகளால், இது சாத்தியமாகும்.
கடந்த நிதியாண்டில், வாராக் கடனுக்கு அதிக நிதி ஒதுக்கியதால், வங்கிகளுக்கு, 40 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.முந்தைய, 2016 – -17ம் நிதியாண்டில், 5 லட்சம் கோடி ரூபாய், வாராக் கடனாக மாறியது. கடந்த மூன்று நிதியாண்டுகளில், வங்கி வாராக் கடன், 13.60 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
கடந்த நிதியாண்டில், ரிசர்வ் வங்கியின் சீர்திருத்த நடவடிக்கைகள், புதிய விதிமுறைகள் காரணமாக, பல வங்கிகளின் கடன்கள், வாராக் கடன் பிரிவில் சேர்க்கப்பட்டன. இத்தகைய கடன்கள், வங்கிகளின் வாராக் கடனில், ஐந்தில் ஒரு பங்காகும்.மத்திய அரசின் திவால் சட்டம் அமலுக்கு வந்ததை அடுத்து, வங்கிகளின் வாராக் கடன்களுக்கு விரைவாக தீர்வு காணும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வங்கித் துறையின் வாராக் கடன் வளர்ச்சி வேகம் குறைந்துள்ளது. வாராக் கடன் வசூலும் மெல்ல உயரும் அறிகுறி தென்படுகிறது.
உருக்கு
குறிப்பாக, கடந்த நிதியாண்டில், 60 – -90 நாட்களுக்கு மேலாக தவணை செலுத்தாத கணக்குகள், 0.8 சதவீதமாக சரிவடைந்துள்ளன. இது, முந்தைய நிதியாண்டில், 2 சதவீதமாக இருந்தது.தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்தில், மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், வங்கிகளின், 3.30 லட்சம் கோடி ரூபாய் இடர்ப்பாட்டு கடன்களை வசூலிக்க விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதில், நான்கில் ஒரு பங்கு கடன், உருக்கு துறையிடம் வசூலிக்க வேண்டியுள்ளது.
தற்போது, உருக்கு துறை வளர்ச்சி காணத் துவங்கியுள்ளதால், கடன்களும் விரைவாக பைசலாகும் வாய்ப்புள்ளது. இத்தகைய அம்சங்கள், வரும் நிதியாண்டு முதல், வங்கிகளின் வாராக் கடன் குறைய வழி வகுக்கும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கூடுதல் உதவி தேவை
பொதுத் துறை வங்கிகள், ‘பேசல் 3’ விதிமுறைகளை பின்பற்ற, மத்திய அரசின் பங்கு மூலதனத்தை சார்ந்துள்ளன. வங்கிகள், கடந்த நிதியாண்டை போல, நடப்பு நிதியாண்டிலும், வாராக் கடனுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யும் சூழல் உள்ளது. அதனால், மறு பங்கு மூலதன திட்டத்தின் கீழ் வழங்கப்படும், 2.10 லட்சம் கோடி ரூபாய், வங்கிகளின் தேவையை பூர்த்தி செய்யக் கூடிய அளவிற்கு இருக்காது.
கிருஷ்ணன் சீதாராமன், மூத்த இயக்குனர், கிரிசில்
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|