பதிவு செய்த நாள்
11 ஜூன்2018
00:51
கச்சா எண்ணெய் விலை, தொடர்ந்து மூன்றாவது வாரமாக, சரிவில் இருந்து வருகிறது. இந்த ஆண்டின் உச்ச விலை, மே மாதத்தில் ஒரு பேரல், 72.83 டாலர் என்ற அளவுக்கு உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஒரு பேரல், 9 டாலர் அளவுக்கு சரிந்து, 65.51 டாலர் வரை வந்தது.உலகளவில் கச்சா எண்ணெய் உற்பத்தியில், முதல் மற்றும் இரண்டாம் இடங்களில் உள்ள சவுதி அரேபியா, ரஷ்யா ஆகிய இரு நாடுகளும், கடந்த மே மாதத்தில் நிலவி வரும் இருப்பு குறைவு மற்றும் தட்டுப்பாட்டை போக்குவதற்காக, உற்பத்தியை அதிகரிக்க தீர்மானித்தன. இதன் விளைவாக, விலை சரிவு தொடர்ந்தது.
‘ஒபெக்’ மற்றும், ‘நான் ஒபெக்’ எனும் எண்ணெய் உற்பத்தி கூட்டமைப்பு நாடுகள், தங்கள் எண்ணெய் உற்பத்தியை தினசரி, 1.8 மில்லியன் பேரல் அளவுக்கு குறைத்ததன் காரணமாக, கடந்த இரு ஆண்டுகளில், விலை, ‘கிடு கிடு’வென உயர்ந்தது.இந்த ஒப்பந்தம் தற்போது டிசம்பர், 2018 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 22ம் தேதி, ஒபெக் உறுப்பு நாடுகள் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், உற்பத்தி குறைப்பு குறித்து தீர்மானங்கள் எடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஈரான், ஒபெக் உறுப்பில் மூன்றாம் தர வரிசையில் உள்ள உற்பத்தி நாடாகும். அமெரிக்கா, ஈரான் மீது விதித்திருந்த தடையை திரும்பப் பெற்ற தற்போதைய சூழலில், அதன் ஏற்றுமதி எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.வரும் நாட்களில், சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை, 64 டாலர் என்பது நல்ல சப்போர்ட் ஆகும். இதை கடக்காத நிலையில், விலை சிறிது உயர வாய்ப்புள்ளது.
தங்கம் வெள்ளி
சர்வதேச சந்தையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை, கடந்த வாரம் முந்தைய வார சரிவுக்குப் பின் உயர்ந்து வர்த்தகம்ஆகியது. அமெரிக்க நாணயத்தின் தொடர் மதிப்பு உயர்வுக்குப் பின் ஏற்பட்ட சரிவும், வரும் ஜூன், 12ம் தேதி, அமெரிக்கா – வட கொரியா இடையேயான பேச்சு மற்றும் அது தொடர்பான ஏதேனும் அசாதாரண சூழல் ஏற்படலாம் என்ற எண்ணமும், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் விலை உயர காரணமாகியது.
இந்திய ஆபரண சந்தையில், 24 காரட் தங்கத்தின் விலை, கடந்த வாரம், 10 கிராம், 32,000 என்ற நிலையைக் கடந்து, 32,050 ரூபாய் என்ற உச்சத்தை அடைந்தது.வெள்ளி விலையும் கிலோவுக்கு, 100 ரூபாய் உயர்ந்து, 1 கிலோ, 41,100 என்ற நிலையை எட்டியது.கடந்த மே மாதத்தில், இந்தியாவின் தங்கம் இறக்குமதி, 39 சதவீதம் குறைந்து, 77.6 டன்னாக சரிந்தது. கடந்த ஆண்டு, இதே மாதத்தில், 126.2 டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், 2018ம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில், தங்கம் இறக்குமதி, 42 சதவீதம் குறைந்து, மொத்தம், 289.3 டன்னாக உள்ளது.தென் மேற்கு பருவமழை தற்போது அதிகரித்து, விவசாயம் பெருகும் நிலையில், கிராமப்புற தேவை தங்கம் மீது உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தங்கம் விலை பெரும்பாலும் சர்வதேச காரணங்களால் தான் நிர்ணயிக்கப்படுகிறது. எனவே, சர்வதேச நிகழ்வுகளை பொறுத்தே விலை அமையும்.
செம்பு
செம்பு விலை, கடந்த ஆண்டு இறுதியில் அதாவது, ஜூலை முதல் டிசம்பர் வரை தொடர்ந்து உயர்ந்து, ஐந்து ஆண்டு உச்சத்தை அடைந்தது. இருப்பினும், இந்த ஆண்டு ஆரம்பம் முதல், அந்த உயர்வு தொடராமல் விலை சரிவு போக்கு தொடர்ந்தது.கடந்த வாரம் மட்டும், இந்த ஆண்டின் அதிகப்படியான விலை உயர்வாக, எம்.சி.எக்ஸ் பொருள் வணிக சந்தையில், கிலோவுக்கு, 35 ரூபாய் அதிகரித்து, 1 கிலோ, 491 ரூபாய் வரை எட்டியது.
கடந்த வெள்ளியன்று வெளிவந்த, சீனாவின் செம்பு இறக்குமதி புள்ளிவிபரத்தில், இறக்குமதியானது, கடந்த ஆண்டு மே மாதத்தை விட, 22 சதவீதம் அதிகரித்து, 4,75,000 டன் இறக்குமதி செய்யப்பட்டது. இதை எதிர்பார்த்து, சந்தையில் கடந்த வாரம் முழுவதும் அதாவது, திங்கள் முதல் வெள்ளி வரை, விலை தினசரி உயர்வு கண்டது. இது நீடிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|