பதிவு செய்த நாள்
05 ஜூலை2018
00:18
நுகர்வோர் செலுத்தக்கூடிய, ஜி.எஸ்.டி., அரசுக்கு முறையாக சென்றடைகிறதா என்பதை அறிய, ‘ஜி.எஸ்.டி., வெரிபை’ என்ற செயலியை, இந்திய வருவாய் பணி அதிகாரி ஒருவர் கண்டுபிடித்து உள்ளார்.
ஜி.எஸ்.டி., எனும், சரக்கு மற்றும் சேவை வரி, 2017ம் ஆண்டு ஜூலை, 1 முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தது. இந்த வரி சேவை அறிமுகமாகி ஓராண்டு நிறைவடைந்தது.இந்த தினத்தை, ஜி.எஸ்.டி., தினமாக மத்திய அரசு கொண்டாடியது. இந்நிலையில், ஐதராபாதில் மத்திய, ஜி.எஸ்.டி., இணை ஆணையராக பணியாற்றும், ரகு கிரண் என்ற, இந்திய வருவாய் பணி அதிகாரி, ‘ஜி.எஸ்.டி., வெரிபை’ என்ற, ‘ஆன்டிராய்டு’ மொபைலுக்கான புதிய செயலியை, ஜூலை, 1ல் அறிமுகப்படுத்தினார்.
இந்த செயலியை, அவரே கண்டுபிடித்துள்ளார். ‘கூகுள் பிளே ஸ்டோரில்’ இந்த இலவச செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இந்த செயலியின் உள்ளே சென்றதும், நிறுவனம் பதிவு செய்த, ஜி.எஸ்.டி., எண்களை அதில், ‘டைப்’ செய்தவுடன், பதிவு செய்த நிறுவனத்தின் பெயர், மத்திய அல்லது மாநில அரசின் வரையறை, பதிவு செய்த தினம், வணிகத்தின் விபரம் உட்பட பல்வேறு தகவல்கள் அதில் இடம் பெறுகின்றன.
பதிவு செய்யவில்லை எனில், நிறுவனம் பதிவு செய்யவில்லை என்ற தகவல்களும் உடனடியாக கிடைக்கின்றன.சில நிறுவனங்கள், கடைகள், ஜி.எஸ்.டி., பதிவு செய்யாமல் அதே சமயம் நுகர்வோரிடம் வரி வசூல் செய்துவிடுகின்றன. நாம் செலுத்தும் வரி அரசுக்கும் செல்வதில்லை.
இந்த செயலியை தரவிறக்கம் செய்து கொண்டால், ஒரு நிறுவனம் பதிவு செய்துகொண்ட நிறுவனம்தானா என்பதை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். வரி மோசடி செய்வது கடினமாகிவிடும். நாம் செலுத்தும், ஜி.எஸ்.டி., அரசுக்கு செல்லுமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.
இது குறித்து, தமிழக வணிகவரித் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:நுகர்வோர், ஜி.எஸ்.டி., செலுத்தும் முன், சரியான விபரங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில், இந்திய வருவாய் பணி அதிகாரி, ரகு கிரண் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இது அவசியமான ஒன்றாகும். அவரது பணி தொடர வாழ்த்துகள்.
–--நமது நிருபர் –-
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|