பதிவு செய்த நாள்
06 ஜூலை2018
01:16
திருப்பூர்:பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை, மத்திய அரசு, கிலோவுக்கு, 1,130 ரூபாய் உயர்த்தி உள்ளது. இதனால், சீசன் துவக்கத்திலேயே பஞ்சு விலை அதிகரிக்குமென, ஜவுளித் துறையினர் தெரிவிக்கின்றனர்.
குஜராத், மஹாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட வட மாநிலங்களில், அதிகளவு பருத்தி விளைவிக்கப்படுகிறது. ஜின்னிங் நிறுவனங்கள், பருத்தியிலிருந்து, பஞ்சு பிரித்தெடுக்கின்றன. பருத்தி விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதற்காக, மத்திய அரசு, ‘கப்பாஸ்’ எனப்படும் கொட்டை நீக்காத பருத்திக்கு, ஆதார விலை நிர்ணயிக்கிறது.
பிரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சரவை, குறைந்தபட்ச ஆதார விலை, கிலோவுக்கு 1,130 ரூபாய் உயர்த்தி ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, 4,020 ரூபாயாக இருந்த நடுத்தர பருத்திக்கான ஆதார விலை, 5,150 ரூபாயாகவும், கிலோ, 4,320 ரூபாயாக இருந்த நீள் இழை பருத்திக்கான ஆதார விலை, 5,450 ரூபாயாகவும்உயர்த்தப்பட்டுள்ளது.
‘இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன்’ கன்வீனர், பிரபு தாமோதரன் கூறியதாவது:பருத்திக்கு குறைந்தபட்ச ஆதார விலை, கிலோவுக்கு, 1,130 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால், பருத்தி பயிரிடும் பரப்பு அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த, 2017 – 18ல், பருத்தி சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது கேண்டி, 48 ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளது.ஆதார விலை அதிகரித்துள்ளதால், இனிவரும் காலங்களில் சீசன் துவக்கத்திலேயே பஞ்சு விலை, வழக்கத்தை விட கேண்டிக்கு, 1,500 முதல், 2,000 ரூபாய் அதிகரித்து காணப்படும். 2018- – 19 பருத்தி சீசன் துவக்கத்தில், 1 கேண்டி பஞ்சு, 41 ஆயிரம் ரூபாயாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
பருத்தி ஆதார விலைக்கு, ‘சைமா’ வரவேற்பு :மத்திய அரசு அறிவித்துள்ள பருத்திக்கான ஆதார விலையை, தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) வரவேற்றுள்ளது.‘சைமா’ தலைவர் நடராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் இந்த அறிவிப்பை, ‘சைமா’ வரவேற்கிறது. அதேநேரத்தில் இந்த விலை உயர்வு, பஞ்சாலைகள் மீதும், ஜவுளி வாங்கும் சாதாரண மக்கள் மீதும் தாக்கம் செலுத்தும். சர்வதேச பருத்தி விலையை விட, உள்நாட்டில் விலை அதிகமானால் ஏற்றுமதியை பாதிக்கும்.
எனவே, பருத்தி விவசாயிகள் பயனடைய மானியத்தை நேரடியாக வழங்கவேண்டும்.விலை நிலவரத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை சமாளிக்க, பருத்தி சீசனில் விலை நிலைப்படுத்துதல் நிதி அறிவித்து ஜவுளித்துறையினருக்கு, 5 முதல், 7 சதவீத வட்டி மானியமும், தாராள கடனுதவியும், 10 சதவீத, ‘மார்ஜின் மணி’ உதவியும் வழங்க வேண்டும்.தற்போது நிலவும் சிறந்த விதை தொழில்நுட்பம் இல்லாமை, பருத்தி வேளாண் ஆராய்ச்சி இல்லாமை, விதை நீக்கும் ஆலைமட்டத்தில் நடக்கும் கலப்படம், தரம் சரிவு பிரச்னைகளை சரிசெய்ய, பருத்தி தொழில்நுட்பத்திட்டத்தை கொண்டுவரவேண்டும்.இவ்வாறு, அந்த அறிக்கையில் நடராஜ் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|