பதிவு செய்த நாள்
10 ஜூலை2018
06:22
திருப்பூர்:தங்கள் நாட்டு ஜவுளித் துறையில் முதலீடு செய்ய வரும்படி, கிழக்கு ஆப்ரிக்க நாடுகளின் அமைச்சர்கள், நேற்று திருப்பூருக்கு வந்து அழைப்பு விடுத்தனர்.வெளிமாநில, வெளிநாட்டு அரசுகள், திருப்பூர் பின்னலாடை துறையினரை, தங்கள் பகுதிகளில் முதலீடு செய்ய, தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகின்றன. அவ்வகையில், கிழக்கு ஆப்ரிக்க நாடுகளின் அமைச்சர்கள், நேற்று திருப்பூர் வந்தனர்.
ஏற்றுமதியாளர் சங்க அரங்கில் நடந்த கூட்டத்தில், எத்தியோப்பியா தொழில் துறை அமைச்சர் போக்லே, கென்யா தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் பெடி மைனா, உகாண்டா வர்த்தக அமைச்சர் மீச்ஷேல் வர்க்கி மற்றும் சர்வதேச வர்த்தக அமைப்பு ஒருங்கிணைப்பாளர் குழுவினர், மூன்று நாடுகளின் அரசு அதிகாரிகள் பங்கேற்று, ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகிகளுடன் கலந்துஉரையாடினர்.
ஆப்ரிக்க நாட்டு அமைச்சர்கள் கூறியதாவது:கிழக்கு ஆப்ரிக்காவில், கென்யா, எத்தியோப்பியா, உகாண்டா நாடுகள், நட்பு நாடுகளாக உள்ளன. பின்தங்கிய நாடுகளாக உள்ளதால், மூன்று நாடுகளிலும், வேலை வாய்ப்பு குறைவாக உள்ளது. எனவே, அதிகளவில் வேலை வாய்ப்பு அளிக்கும், ஜவுளித் துறையை விரிவுபடுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்றன.நிறுவனங்கள், திறன் பயிற்சி பெற்ற தொழிலாளர்களை பணி அமர்த்திக் கொள்ள முடியும். அரசு தரப்பில், அனைத்து வசதிகளுடன் தொழில் வளாகங்கள் உருவாக்கி தரப்படும்; ஆடை உற்பத்தி துறையினர், மிஷின்களை நிறுவி, உடனடியாக இயக்கத்தை துவக்கி விடலாம். துறைமுகங்கள், ரயில் போக்குவரத்து வாயிலாக இணைக்கப்பட்டுள்ளன.
பின்தங்கிய நாடுகள் என்பதால், அமெரிக்கா, ஐரோப்பா உட்பட பல்வேறு நாடுகளுக்கு, ஏற்றுமதி செய்யும் ஆடைகளுக்கு, இறக்குமதி வரி விலக்கு கிடைக்கிறது.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், கிழக்கு ஆப்ரிக்க நாடுகளுக்கு வரவேண்டும். தொழில் சூழல்களை ஆராய்ந்து, முதலீடு செய்யலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.ஏற்றுமதியாளர் சங்க தலைவர், ராஜா சண்முகம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக, கிழக்கு ஆப்ரிக்க அமைச்சர்கள், பின்னலாடை தொழில் நிறுவனங்களை பார்வையிட்டனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|