பதிவு செய்த நாள்
24 ஜூலை2018
23:23
மும்பை : ‘ரிசர்வ் வங்கி, அடுத்த வாரம் வெளியிட உள்ள நிதிக் கொள்கையில், வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டியை உயர்த்த வாய்ப்பில்லை’ என, எஸ்.பி.ஐ., பொருளா தார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
ரிசர்வ் வங்கி, நான்கு ஆண்டுகளுக்கு பின், கடந்த ஜூன் 6ல், ‘ரெப்போ’ வட்டியை, 0.25 சதவீதம் உயர்த்தி, 6.25 சதவீதமாக நிர்ணயித்தது. இந்நிலையில், ஜூன் மாதம், நாட்டின் சில்லரை பணவீக்கம், ஐந்து மாதங்களில் இல்லாத வகையில், 5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, மே மாதம், 4.87 சதவீதமாக இருந்தது.
கச்சா எண்ணெய் :
இது தவிர, ரூபாய் மதிப்பு சரிவு, கச்சா எண்ணெய் விலையேற்றம் போன்றவற்றால், ரிசர்வ் வங்கி, ஆக., 1ல் வெளியிடும் நிதிக் கொள்கையில், மீண்டும் ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தும் என, தர நிர்ணய நிறுவனமான, 'இக்ரா' தெரிவித்துள்ளது. இதை, சில பொருளாதார வல்லுனர்களும் ஆமோதித்துள்ளனர்.
இந்நிலையில், எஸ்.பி.ஐ., வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: ஆகஸ்டில், ரெப்போ வட்டி உயர்த்தப்படுவதற்கு மிக குறைவான வாய்ப்பே உள்ளது. வட்டியை உயர்த்துவதை விட, தற்போதுள்ள நிலையே நீடிப்பது தான், சிறந்த தேர்வாக இருக்கும். ரூபாய் மதிப்பு சரிவை கட்டுப்படுத்த, ரெப்போ வட்டியை ரிசர்வ் வங்கி உயர்த்தும் என்பது தான், வல்லுனர்கள் தெரிவிக்கும் ஒரே காரணம்.
ஆனால், ஜூனில், சில்லரை பணவீக்கம், 5 சதவீதமாக உயர்ந்தாலும், மேலும் உயராமல், சம அளவிலேயே இருக்கும் என, ஆய்வில் தெரியவந்துள்ளது. வேளாண் பொருட்களுக்கு உயர்த்தப்பட்ட, குறைந்தபட்ச ஆதார விலையால், சில்லரை பணவீக்கம், 0.73 சதவீத அளவிற்கே உயரும் ; அதுவும், புள்ளிவிபர மதிப்பீடு தானே தவிர, யதார்த்தத்தில் அவ்வாறு இருக்காது கருதப்படுகிறது. ஏனெனில், குறைந்தபட்ச ஆதார விலை உயர்வால், பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கத்தை, தற்போது கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டு வரும் சரிவு ஈடு செய்து விடும்.
மத்திய வங்கி :
எரிசக்தி மற்றும் உணவுப் பொருட்கள் தவிர்த்து, இதர துறை பொருட்களின் விலை உயர்வால், பணவீக்கம் அதிகரிக்கும் என, சந்தையாளர்கள் கருதுகின்றனர். ஆனால், அது பரவலான அளவிற்கு இருக்காது. அதேசமயம், சீரற்ற மழை பொழிவால், உணவுப் பொருட்கள் விலை, குறிப்பாக, தானியங்கள் விலை உயரும்.
அமெரிக்க மத்திய வங்கி, மூன்றாவது முறையாக, செப்டம்பரில் வட்டி விகிதத்தை உயர்த்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பல நாடுகளின் நிதிக் கொள்கைகள் குறித்து, திடமாக தீர்மானிக்க முடியாதபடி, சர்வதேச சூழல் உள்ளது. இவற்றுடன், உள்நாட்டில் பணவீக்கம் அதிக ஏற்றமின்றி, ஓரளவு ஸ்திரமாக இருக்கும் என, கருதப்படுவதால், ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டியை உயர்த்தாமல், பொறுத்திருந்து பார்க்கும் என, தெரிகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
உயரும் :
ரிசர்வ் வங்கி, நடப்பு 2018-–19ம் நிதியாண்டின், அடுத்த மூன்று காலாண்டுகளில், 'ரெப்போ' வட்டியை, 0.50 சதவீதம் உயர்த்தும்
-நரேஷ் தக்கர், நிர்வாக இயக்குனர், 'இக்ரா'
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|