பதிவு செய்த நாள்
30 ஜூலை2018
06:16
பெரும்பாலானோருக்கு பங்குச்சந்தை முதலீட்டில் ஆர்வம் இருக்கிறது. பங்கு முதலீடு அதிக பயன் தரக்கூடியதாகவும் அமைகிறது. பங்குச்சந்தையில் முதலீடு செய்வது எளிமையானது, ஆனால் சுலபமானது இல்லை. பங்கு முதலீட்டில் லாபம் பார்க்க, ஈடுபாடு, பொறுமை மற்றும் ஒழுக்கம் அவசியம். அதோடு சந்தை செயல்பாடு பற்றிய புரிதலும் தேவை. இதற்கு பின்பற்ற வேண்டிய வழிகள்:
வீட்டுப்பாடம் செய்யுங்கள் :
நினைத்ததும் பங்குகளை வாங்கிவிடக்கூடாது. முதலில் பங்குகளை ஆய்வு செய்து, சரியான பங்குகளை தேர்வு செய்ய வேண்டும். ஆய்வு செய்யாமல் ஏதோ ஒரு காரணத்திற்காக பங்குகளை வாங்கி விட்டு, லாபத்தை எதிர்பார்ப்பது லாட்டரி சீட்டு வாங்குவது போல் ஆகிவிடலாம். தெரிந்தவற்றில் முதலீடு செய்யுங்கள். தெரியாதவற்றை அறிந்து கொள்ளுங்கள்.
வர்த்தகத்தில் முதலீடு :
நீங்கள் பங்குகளில் முதலீடு செய்யவில்லை, வர்த்தகத்தில் முதலீடு செய்கிறீர்கள் என்பது பங்குச்சந்தை பாலபாடம். எனவே தேர்வு செய்யும் பங்கு தொடர்பான நிறுவன வர்த்தகம் பற்றி நீங்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும். வர்த்தகத்தை அறிவது, நிறுவன எதிர்கால போக்கை கணிக்க உதவும். இதன் மூலம் சிறந்த முடிவை மேற்கொள்ளலாம்.
--மந்தைப் போக்கு வேண்டாம் :
சந்தையில் மற்றவர்கள் செய்வதை பின்பற்ற நினைப்பது இயல்பானது. ஆனால் இத்தகைய மந்தைப் போக்கை கைவிட வேண்டும். மற்றவர்கள் முதலீடு செய்கின்றனர் என்பதற்காகவே, ஒரு பங்கை வாங்கக்கூடாது. நண்பர்கள், உறவினர்கள் ஆலோசனை அடிப்படையிலும் பங்குகள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். முறையான ஆய்வு தேவை.
முதலீடு ஒழுக்கம் :
சரியான பங்குகளில் சீராக முதலீடு செய்து வர வேண்டும். பங்குச்சந்தை, ஏற்ற இறக்கமான போக்கிற்கு உட்பட்டது என்றால், கணக்கிட்ட, ரிஸ்க்கை எடுத்து, தேவை எனில் மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ரிஸ்க்கை பரவலாக்குவது சிறந்த வழி. அதாவது பரவலாக முதலீடு செய்ய வேண்டும்.
அளவான எதிர்பார்ப்பு :
பங்கு முதலீட்டில் எதிர்பார்ப்பும் யதார்த்தமானதாக இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமான பலனை எதிர்பார்த்து முதலீடு செய்வது புத்திசாலித்தனமான உத்தி அல்ல. பங்குச்சந்தை ஏற்ற இறக்கமானது, அதிக பலனை மட்டுமே மனதில் கொள்வது, தவறான முடிவுகளுக்கு வித்திடும். உபரித்தொகையை பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும். சேமிப்பை அல்ல.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|