பதிவு செய்த நாள்
30 ஜூலை2018
06:20
பங்குச் சந்தை குறியீடுகள் மேலும் உயர்ந்து, சந்தை தொடர்ந்து புதிய உச்சம் தொடும் நிலையில், முதலீட்டாளர்கள் மனதில் பல புதிய எண்ண ஓட்டங்கள் தெரிகின்றன.
ஆண்டின் துவக்கத்தில், குறியீடு சார்ந்த பங்குகளில் முதலீடு செய்வதை முழுதும் தவிர்த்து, மற்ற பங்குகளில் ஆர்வம் காட்டுவதையே ஒட்டு மொத்த சந்தையும் விரும்பியது. அந்த முதலீட்டு நிலைப்பாடு, ஆறே மாதங்களில் முதலீட்டாளர்களுக்கு பெரும் வலியையும், வேதனையையும் தந்துள்ளது. சந்தையின் போக்கு பற்றியும், பங்கு மதிப்பீடு பற்றியும் உருவான ஒருமித்த கருத்து, தவறாகி விட்டது.
அவசர தேர்வு :
சந்தையின் ஒருமித்த கருத்து பலமுறை தவறாகிப்போன வரலாறு இருப்பினும், இம்முறை அதன் தாக்கம் மிக அதிகம். இதற்கு, இந்த நிலைப்பாடு சார்ந்த நம் முதலீட்டு முடிவுகளின் மதிப்பு மிக முக்கிய காரணம். எஸ்.ஐ.பி., எனும் தவணை முறை முதலீடுகள் மிக அதிகமாக நடந்துள்ளதும், பிற சொத்துகளில் இருந்து பங்குகளுக்கு மாற்றப்பட்ட முதலீடுகளின் அளவும், நம் மனதில் முக்கியமாக கொள்ள வேண்டியவை.
சந்தைக்குள் புதிய முதலீட்டாளர்களின் வரவு வரலாறு காணாதது என்பதும் அடிப்படை காரணம். இத்தகைய சூழலில், நடந்தது என்ன; நடக்கப்போகும் நிகழ்வுகளை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஆராய வேண்டும். வாங்கிய பங்குகளில் பெரும் சரிவும், வாங்க மறுத்த பங்குகளில் விலை ஏற்றமும், வலியை இரட்டிப்பாக ஆக்கியுள்ள நிலையில், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற தவிப்பு ஆரம்பித்துள்ளது. சற்று அமைதியாக யோசித்து, இந்த தவிப்பை எதிர்கொள்வது நல்லது.
முதலில், நாம் செய்த முதலீட்டு தேர்வுகள் தவறா என்று பார்ப்போம். குறு நிறுவன முதலீடுகள் அனுபவமுள்ள முதலீட்டாளர்களுக்கும் பெரும் சவாலாக இருக்கும் நிலையில், சந்தையில் புதிதாக நுழைந்த பலரும் அதை அவசர தேர்வு செய்தது தெளிவாக தெரிகிறது.
முதலீட்டு வெற்றிகள் :
இதில், அடிப்படையில் தவறான தேர்வுகளும் அடக்கம். அத்தகைய தவறுகளை அடையாளம் கண்டு விலக வேண்டிய அவசியம் உள்ளது. பெரு நிறுவனங்களை தவிர்த்து முதலீடு செய்வதன் அபாயத்தை உணர்ந்து, அடுத்த ஆறு மாதங்களில் உரிய மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். முக்கியமாக, அவசர முடிவெடுக்கும் வழக்கத்தை முழுதும் தவிர்ப்பது அவசியம். சந்தை, உச்சத்தில் இருக்கும் போது, நிதானம் மிக அவசியம். அந்த நிதானத்தின் மூலம், நமக்கு நன்மை செய்யும் வகையில் முடிவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது அவசரமாக நிப்டி பங்குகளை வாங்க வேண்டியதில்லை. மாறாக, நிப்டியில் பொறுமையாக முதலீடு செய்ய முனைய வேண்டும். தனிப் பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யாமல், குறியீடுகளிலும் தொடர்ந்து முதலீடு செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வரும் காலங்களில், சந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் பங்கு பெறுவதை குறிக்கோளாகக் கொண்டு, அதற்கு ஏற்ற முடிவுகளை எடுக்க வேண்டும். தவறுகளில் இருந்து, விரைந்து வெளியே வர வேண்டும். அதுவே, வருங்கால முதலீட்டு வெற்றிக்கு நாம் எடுக்கும் முதல் முயற்சி. தோல்விகளை களைவதில் இருந்து மட்டுமே, முதலீட்டு வெற்றிகள் உருவெடுக்கும் என்பதை உணர்ந்து நடக்க வேண்டிய நேரம் இது.
–ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|