பதிவு செய்த நாள்
02 ஆக2018
00:05
மும்பை:பொருளாதார வல்லுனர்கள் கணித்தபடி, ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை, இரண்டு மாதங்களில், மீண்டும் உயர்த்தியுள்ளது.
மும்பையில் நேற்று, ரிசர்வ் வங்கி கவர்னர், உர்ஜித் படேல் தலைமையில், நிதி கொள்கை குழு கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து, ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை:வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி, 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டு, 6.50 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வங்கிகளிடம் இருந்து, ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான, ‘ரிவர்ஸ் ரெப்போ’ வட்டி, 6 சதவீதத்தில் இருந்து, 6.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஜூலை – செப்., வரை, சில்லரை பணவீக்கம், 4.2 சதவீதமாகவும், அக்., – மார்ச் வரையிலான அரையாண்டில், 4.8 சதவீதமாகவும் இருக்கும்.நடப்பு, 2018 -– 19ம் நிதியாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7.4 சதவீதம்; இரண்டாவது அரையாண்டில், 7.5 – 7.6 சதவீதம் என்ற மதிப்பீட்டில் மாற்றமில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த, 2014, மே மாதம், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அமைந்த பின், ரிசர்வ் வங்கி, முதன் முறையாக, இந்தாண்டு ஜூன் 6ல், ரெப்போ வட்டியை, 0.25 சதவீதம் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.ரெப்போ வட்டி உயர்வால், வீடு, வாகன கடன்களுக்கான வட்டி உயரும்.அதேசமயம், டிபாசிட்டிற்கான வட்டியும் அதிகரிக்கும். நேற்று முன்தினம், எஸ்.பி.ஐ., சில வகை டிபாசிட்டுகளுக்கு, வட்டியை உயர்த்தி உள்ளது.
வளர்ச்சி அறிகுறி
கடந்த மே மாதம், 4.87 சதவீதமாக இருந்த சில்லரை பணவீக்கம், ஜூனில், 5 சதவீதமாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மூன்று மாதங்களாக, சில்லரை பணவீக்கம் அதிகரித்துள்ளது. அதேசமயம், சில சாதகமான அறிகுறிகளும் தென்படுகின்றன.கடந்த காலாண்டில், வாகன விற்பனை உயர்ந்துள்ளது. கிராமப்புறங்களில் தேவைப்பாடு அதிகரித்திருப்பதற்கான அறிகுறிகள் தோன்றியுள்ளன. உள்நாட்டு நிலவரத்துடன், சர்வதேச சூழலையும் ரிசர்வ் வங்கி உன்னிப்பாக கவனித்து வருகிறது என, ‘ஈக்யுட்டி – 99’ நிறுவனர், சுமித் பில்கயான் தெரிவித்துள்ளார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|