பதிவு செய்த நாள்
16 ஆக2018
00:15
சேலம்:கேரளாவில், மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, தமிழகத்தில் இருந்து லாரிகள் இயக்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் தேக்கம் அடைந்துள்ளன.
தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு, காய்கறிகள், அரிசி, மாடுகள், ஜவுளி, இரும்பு கம்பிகள், கோழி, முட்டை, சிமென்ட், மளிகை சாமான்கள் ஆகியவையும், அங்கிருந்து தமிழகத்துக்கு மரச் சாமான்கள், ஓடுகள், மீன்கள் ஆகியவையும் லாரிகள் மூலம் எடுத்து வரப்படுகின்றன.
கேரளாவில் தற்போது பெய்து வரும் கன மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால், எர்ணாகுளம், கொச்சி, கோழிக்கோடு, ஆலப்புழா, கண்ணுார் மாவட்டங்களுக்கு, சரக்கு பரிமாற்றத்தில் ஈடுபட்டு வந்த லாரிகள், ஆக., 9 இரவு முதல் இயக்கப்படவில்லை.இது குறித்து, தமிழக லாரி புக்கிங் ஏஜென்டுகள் சம்மேளன மாநில தலைவர், ராஜவடிவேல் கூறியதாவது:
தினந்தோறும், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து, கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய, 20 கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்குகளும், அங்கிருந்து தமிழகத்துக்கு வரவேண்டிய, 10 கோடி ரூபாய் சரக்குகளும் தேங்கியுள்ளன.
தமிழகத்தில், ஐந்து நாட்களில், 100 கோடி ரூபாய் மதிப்பிலும், கேரளாவில், 50 கோடி ரூபாய் மதிப்பிலான சரக்குகளும் தேங்கிஉள்ளன.அதே நேரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நலன் கருதி, அத்தியாவசிய பொருட்கள், மருந்து பொருட்கள், காய்கறிகள், ஆகியவை குறைந்த எண்ணிக்கையிலான லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
கேரள மாநிலத்துக்கு லாரிகளின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளதால், லாரி உரிமையாளர்கள், புக்கிங் ஏஜென்டுகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.மேலும் இத்துறை சார்ந்த பலர் வேலை வாய்ப்பையும் இழந்துஉள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|