பதிவு செய்த நாள்
20 ஆக2018
07:00
சிறுக, சிறுக சேமிக்க உதவும், எஸ்.ஐ.பி., தொடர் வைப்பு நிதி ஒரே மாதிரியானவை என்றாலும், இவை அளிக்கும் பலன்கள் வேறுபட்டவை.
முதலீடு செய்ய பெரிய தொகை கைவசம் இல்லாதவர்கள், சிறுக, சிறுக சேமிக்கும் வழியை நாடுகின்றனர். இந்த வகை சேமிப்பிற்கு, ‘ஆர்.டி’ என, சுருக்கமாக அழைக்கப்படும் தொடர் வைப்பு நிதி உதவுகிறது. இதே போலவே, எஸ்.ஐ.பி., எனப்படும், சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மண்ட் பிளானும் கைகொடுக்கிறது. இவற்றில் மாத அல்லது காலாண்டு அடிப்படையில் முதலீடு செய்யலாம். இரண்டுமே சீரான சேமிப்பின் பலனை அளிக்கின்றன. அடிப்படையில் ஒரே மாதிரியானவை என்றாலும், இவை வேறுபாடு கொண்டவை. மேலும், இவை பொருந்தக்கூடிய முதலீட்டாளர்களும், வேறு வேறு ரகத்தைச்சேர்ந்தவர்கள்.
கடன்சார் முதலீடு :
ஆர்.டி., எனப்படும் தொடர் வைப்பு நிதி, கடன்சார் முதலீட்டின் கீழ் வருகிறது. இதில் குறிப்பிட்ட கால அளவிற்கு மாதந்தோறும் ஒரு தொகையை முதலீடு செய்யலாம். வங்கி அல்லது அஞ்சலகத்தில் இதை துவக்கலாம். வழக்கமாக, 12 மாதங்கள் முதல், 120 மாதங்கள் வரை இதன் கால அளவு அமையும். இதற்கான பலனும் நிர்ணயிக்கப்பட்டதாக இருக்கும். தொகை மற்றும் கால அளவிற்கு ஏற்ப, இதற்கான வட்டித்தொகை அமையும். இதில், ‘ரிஸ்க்’ அம்சமும் மிக குறைவு.பொதுவாக, அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாத, நிச்சய பலனை எதிர்பாக்கும் முதலீட்டாளர்கள் இதை நாடுகின்றனர். குறுகிய கால இலக்கிற்கு, இந்த வகை முதலீட்டை நாடலாம்.
விடுமுறைக்கான சேமிப்பு போன்ற வற்றுக்கு, இது கைகொடுக்கும். ஆனால், கடன்சார் முதலீடு என்பதால், இதன் பலன் பணவீக்கத்தை வெல்லக்கூடியது அல்ல.இதற்கு மாறாக, எஸ்.ஐ.பி.,என்பது, மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் ஒரு வகையாகும். மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் மொத்தமாக முதலீடு செய்யலாம். இல்லை எனில் குறிப்பிட்ட கால அளவில் முதலீடு செய்யும், எஸ்.ஐ.பி., வழியை நாடலாம்.
கடன்சார் நிதிகள், சமபங்கு நிதிகள், இரண்டும் கலந்து ஹைபிரிட் நிதிகள் என, தேவைகேற்ப எந்த வகையான நிதியையும் தேர்வு செய்து அதில், எஸ்.ஐ.பி., முதலீட்டை மேற்கொள்ளலாம். மியூச்சுவல் பண்ட் திட்டங்களிலான முதலீடு, நிச்சயமான பலனை அளிக்க கூடியவை அல்ல; இவற்றின் பலன், சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டவை. எனினும், எஸ்.ஐ.பி., முறையில் முதலீடு செய்யும் போது சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப, பல்வேறு கட்டத்தில் யூனிட்களை வாங்குவதால், அதன் சராசரி விளைவு சாதகமாக அமையும். இந்த முறையில், விரும்பிய தொகையை, விரும்பிய கால அளவில் முதலீடு செய்து வரலாம்.
எது ஏற்றது?
தொடர் வைப்பு நிதி, நிர்ணயிக்கப்பட்ட பலனை அளிக்க கூடியது என்றாலும், எஸ்.ஐ.பி., முதலீடு பல்வேறு சாதகங்களை கொண்டது. இதில் விரும்பிய போது, முதலீட்டை நிறுத்திக்கொள்ளலாம் அல்லது பணத்தை விலக்கி கொள்ளலாம். அதனால் பலனில் பாதிப்பு இருக்காது. தொடர்வைப்பு நிதியில் இடையே விலக்கி கொண்டால், வட்டி விகிதம் குறையும். மேலும், கடன்சார் நிதிகளில் கூட தொடர் வைப்பு நிதியை விட கூடுதல் பலன்பெறும் வாய்ப்பு உள்ளது. வரிவிதிப்பும் இதில் சாதகமாக அமைகிறது. பொதுவாக, குறைவான வருமான வரி வரம்பில் இருப்பவர்கள் மற்றும் ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு, தொடர் வைப்பு நிதி ஏற்றவை. எஸ்.ஐ.பி., சமபங்கு மற்றும் கடன்சார் முதலீட்டின் பலனை இணைந்து அளிக்க வல்லவை.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|