பதிவு செய்த நாள்
26 ஆக2018
23:36
மதிப்புசார் முதலீடு, 1929ல் அமெரிக்காவில் நடந்த மிகப் பெரிய பொருளாதார சரிவுக்கு பிறகு உருவெடுத்து, அடுத்த, 50 ஆண்டுகளில் ஒரு சித்தாந்தமாக அங்கீகாரம் பெற்றது.
தொடர்ந்து, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் கற்பிக்கப்பட்டதும், அதன் மாணவர்களும், பயிற்சியாளர்களும் அடைந்த முதலீட்டு சாதனைகளும், இந்த சித்தாந்தம் அங்கீகாரம் பெற முக்கியமான காரணங்கள் ஆகின. கடந்த, 50 ஆண்டு காலத்தில், பல மாறுபடும் பொருளாதார சூழல்களில், நிரூபணமான ஒரு முதலீட்டு சித்தாந்தமாக மதிப்புசார் முதலீடு ஏற்கப்பட்டு உள்ளது. ஆகவே, முதலீட்டு சித்தாந்தம் என்பது, சூழ்நிலையின் காரணமாக உருவாகி, காலம் கடந்து நிரூபணமாகி, காலத்திற்கேற்ப உருமாற்றம் பெற்று, தன்னை நிலை நாட்டிக்கொள்ளும் தன்மை கொண்டது. அவசர கால நடவடிக்கைகளும், சந்தர்ப்பவாத உத்திகளும் சித்தாந்தமாகி விடாது.
காலத்தை கடந்து நிற்பது மட்டுமே சித்தாந்தம் என்ற நிலையை அடையும். புதிதாய் வடிவம் கண்டு, காலத்தை வெல்வது தான் முதலீட்டு சித்தாந்தம். மதிப்புசார் முதலீட்டின் ஆரம்ப வடிவங்களில், இரண்டு முக்கிய குறியீடுகள் சார்ந்து முதலீடுகள் தேர்வு செய்யப்பட்டன. ஒன்று, நிறுவன சொத்து மதிப்பு சார்ந்தது; இன்னொன்று, டிவிடெண்டு சார்ந்தது. டிவிடெண்டு என்பது, நிறுவன ஆண்டு லாபத்தில், பங்குதாரருக்கு கொடுக்கப்படும் பங்கு. ஆனால், நிறுவன மதிப்பு உயர உயர, முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் குறைந்தன. மதிப்புசார் முதலீட்டின் காலம் முடிந்து விட்டதோ என்ற கேள்வி, 80களில் எழுந்தது.
அப்போது, புதிய வடிவம் தந்து, இந்த சித்தாந்தத்தை மேலும் உயர்த்திய பெருமை, வாரன் பபெட்டை சாரும். வருங்கால லாபத்தை நிர்ணயித்து, அதன் இன்றைய மதிப்பை கண்டெடுத்து, மதிப்புசார் முதலீடு செய்ய கற்றுக் கொடுத்தார், பபெட். இதன் மூலம், இந்த மதிப்புசார் முதலீட்டு சித்தாந்தம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டது. சித்தாந்தங்கள் வடிவம் மாறும் போது, அவை காலத்திற்கும் நிலைக்கும் தன்மையை அடைய வேண்டும். அந்த தன்மையை பபெட், இந்த சித்தாந்தத்திற்கு ஏற்படுத்தினார்.
இடைப்பட்ட காலகட்டங்களில், இந்தியா போன்ற வளரும் நாடுகளில், பபெட் போலவும், கிரஹாம் போலவும் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்பு, ஒரே நேரத்தில் ஏற்பட்டது. அந்த நேரங்களில், எந்த முறையை தேர்வு செய்வது என்ற குழப்பம் முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்டது. ஏதாவது ஒரு முறையை தேர்வு செய்வதா அல்லது இரு முறைகளையும் பயன்படுத்தி செல்வதா என்ற குழப்பம் பலருக்கு. ஒரே சித்தாந்தத்தில் இரு வழிகளை கோடிட்டு தேர்வு செய்யச் சொன்னால், நமக்கு எது சரி வருமோ, அதை சார்ந்து இருப்பதே நல்லது.
சித்தாந்தம் சரியாக இருந்தாலும், நாம் தேர்வு செய்யும் வடிவம் நமக்கு உகந்ததாக அமைய வேண்டும். அடுத்தவர்கள் என்ன செய்கின்றனர் என்பதை பற்றி எல்லாம் கவலைப்படாமல், நம்மை பற்றிய புரிதலை வளர்த்து, அதை மட்டுமே சார்ந்து, மதிப்புசார் முதலீட்டு சித்தாந்தத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும். வடிவம் எதுவாக இருந்தாலும், நிரந்தர நஷ்டம் ஏற்படாத வண்ணம் முதலீடு செய்ய, மதிப்புசார் முதலீடு மட்டுமே ஒரே வழி.
-ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|