பதிவு செய்த நாள்
27 ஆக2018
23:27
‘விற்பனை வரி ஆலோசனைக் குழு’ ஏற்படுத்தப்பட்ட மூன்று ஆண்டுகளுக்கு பின், தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கங்களுடன், முதல் முறையாக ஆலோசனைக் கூட்டம், சென்னையில் இன்று நடக்கிறது.
தமிழகத்தில் உள்ள பிரதான தொழில் துறை சங்கங்களின் நிறை, குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்காக, 2015ம் ஆண்டு, விற்பனை வரி ஆலோசனைக் குழு, தமிழக அரசால் அமைக்கப்பட்டது. இந்தக் குழு அமைக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்த பின், தற்போது முதல் முறையாக இதன் ஆலோசனைக் கூட்டம், சென்னையில் இன்று நடக்கிறது.
இது குறித்து, வணிக வரி துறை அதிகாரிகள் கூறியதாவது: சங்கங்களின் நலன்களுக்காக, விற்பனை வரி ஆலோசனைக் குழு ஏற்படுத்தப்பட்டது. இதன் தலைவராக, வணிக வரி துறையின் ஆணையர் இருப்பார். தற்போது, இந்த ஆலோசனைக் குழு கூட்டம் நடக்கிறது. இதில், வணிகர் சங்கங்கள், சிறு, குறு நிறுவன சங்கங்கள், இந்திய தொழில் கூட்டமைப்பு, உற்பத்தியாளர்கள் சங்கம் என, தேர்ந்தெடுக்கப்பட்ட, 24 சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
வரி செலுத்துவதில் உள்ள பிரச்னைகள் என்ன என்பது உட்பட, பல்வேறு விஷயங்கள் குறித்து, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன. வணிக வரி துறை சார்பில், கூடுதல் ஆணையர்கள் பரமேஸ்வரன், ஞானசேகரன், பாலாஜி, இணை ஆணையர்கள் லட்சுமி பிரியா, பழனி உட்பட பலர் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான சங்க பொதுச்செயலர், மோகன் கூறியதாவது: நீண்ட காலமாக இந்த கூட்டம் நடைபெறவில்லை. ஜி.எஸ்.டி., நடைமுறைக்கு பின்னும், வணிக வரி ஆணையராக, டி.வி.சோமநாதன் பொறுப்பேற்ற பின்னும், முதல்முறையாக தற்போது நடக்கிறது. இதனால், ஜி.எஸ்.டி., தொடர்பாக எங்களது கோரிக்கைகளை வைக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
– நமது நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|