பதிவு செய்த நாள்
30 ஆக2018
03:24
புதுடில்லி : மத்திய அரசு, பொதுத் துறை வங்கிகளை வலிமையாக்கும் நோக்கில், அவற்றின் இணைப்பு நடவடிக்கை குறித்து பரிசீலித்து வருகிறது.
உலகளவில், பொருளாதார வலிமையுள்ள, 10 நாடுகளில், அதிக வாராக் கடனில், இத்தாலிக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. இந்திய வங்கிகளின் மொத்த வாராக் கடனில், பொது துறை வங்கிகள், 90 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன. பொதுத் துறையைச் சேர்ந்த, 21 வங்கிகளில், 11 வங்கிகள், ரிசர்வ் வங்கியின் தீவிர கண்காணிப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
அதன்படி, அலகாபாத் வங்கி, யூகோ வங்கி, தேனா வங்கி, ஐ.ஓ.பி., வங்கி, ஐ.டி.பி.ஐ., வங்கி, பேங்க் ஆப் இந்தியா, கார்ப்பரேஷன் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், பேங்க் ஆப் மஹாராஷ்டிரா, யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா ஆகியவற்றுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தவிர, ஆந்திரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, யூனியன் பேங்க், பஞ்சாப் அண்டு சிந்து ஆகிய ஐந்து வங்கிகளையும், தீவிர கண்காணிப்பில் கொண்டு வருவது குறித்து, ரிசர்வ் வங்கி பரிசீலித்து வருகிறது.
இந்நிலையில், கடந்த மாதம், நிதியமைச்சக அதிகாரிகள் கூட்டத்தில், பலவீனமான வங்கிகளை, பெரிய வங்கிகளுடன் இணைப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இணைப்புக்கு சாத்தியமுள்ள வங்கிகளின் பட்டியலை தயாரிக்குமாறு, ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|