பதிவு செய்த நாள்
03 செப்2018
00:21
வாழ்க்கையில் ஏதேனும் ஒரு கட்டத்தில் சொந்த வீடு வாங்க வேண்டும் எனும் கனவு பெரும்பாலானோருக்கு இருக்கிறது. வீட்டுக்கடன் வசதி கைகொடுத்தாலும், இதற்கான நடைமுறையை சரியாக பின்பற்றாவிட்டால் வீண் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வீட்டுக்கடனுக்கு விண்ணப்பிக்கும் போது மனதில் கொள்ள வேண்டிய அம்சங்கள்:
எதிர்கால வருமானம்:
ஒருவரின் வேலை மற்றும் வருமானம் வீட்டுக்கடனுக்கான தகுதியில் முக்கிய அங்கம் வகிக்கிறது. நிகர ஊதியம், எதிர்பார்க்கப்படும் செலவுகள், மாதத்தவணை ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டே கடன் விண்ணப்பம் பரிசீலிக்கப்படுகிறது. வீட்டுக்கடன் நீண்ட கால கடன் பொறுப்பு என்பதால், விண்ணப்பிக்கும் முன் உங்கள் வருமானம் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் குறித்த தெளிவு இருக்க வேண்டும்.
கிரெடிட் ஸ்கோர்:
கடன் தகுதியை தீர்மானிப்பதில், ‘கிரெடி ஸ்கோர்’ முக்கிய பங்கு வகிக்கிறது. எப்படியும் வங்கிகள் விண்ணப்பதாரரின் கிரெடிட் ஸ்கோரை கவனத்தில் கொள்ளும். எனவே, முதலில் ஒருவர் தன் கிரெடிட் ஸ்கோரை அறிந்து கொள்வது நல்லது. அதிக கிரெடிட் ஸ்கோர் இருந்தால் கடன் கிடைக்கும் வாய்ப்பு அதிகம்; அதற்கேற்ப திட்டமிடலாம். கடன் பாக்கி நிலுவை இருந்தால், முதலில் அவற்றை பைசல் செய்ய வேண்டும்.
வட்டி விகிதம்:
கடனுக்கான தகவல்களை சேகரிக்கும் போது வட்டி விகிதத்தை அனைவரும் மனதில் கொள்கின்றனர். வட்டி விகிதத்தோடு, செயல்முறை கட்டணம் போன்ற பொருந்தக்கூடிய கட்டணங்கள் பற்றியும் அறிந்து கொண்டு அவற்றையும் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அபராத தொகைகள் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.
கடன் காலம்:
கடனுக்கான காலத்தை தேர்வு செய்வதிலும் கவனம் செலுத்த வேண்டும். அதிக காலம் எனில் மாதத்தவணை குறைவாக இருக்கும். ஆனால், கடன் பொறுப்பின் காலம் அதிகமாவதோடு, ஒட்டுமொத்த நோக்கில் செலுத்த வேண்டிய வட்டித்தொகையும் அதிகமாக இருக்கும். மேலும் ஒருவரின் திருப்பி செலுத்தும் திறனையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
ஆவணங்கள்:
கடனுக்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும் போதும், அவற்றில் கையெழுத்திடும் போது, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பொறுமையாக படிப்பது அவசியம். குறிப்பாக பொடி எழுத்துக்களில் இடம்பெற்றிருக்கும் நிபந்தனைகளை நன்றாக படித்து, அதன் பொருள் என்ன என, புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|