பதிவு செய்த நாள்
03 செப்2018
00:24
கச்சா எண்ணெய்
சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை, கடந்த ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாம் பாகம் முதல், விலை ஏற்றம் காணப்பட்டது. இரு வாரங்களில், 1 பேரலுக்கு, 5.5 டாலர் அளவுக்கு விலை அதிகரித்துள்ளது.இதற்கு, இரு முக்கிய காரணங்கள்.
ஒன்று, ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா கொண்டு வந்துள்ள பொருளாதார தடை மற்றும் எண்ணெய் ஏற்றுமதி தடை. இது, வரும் நவம்பர் மாதம் அமலுக்கு வருகிறது.
இரண்டாவது, அமெரிக்க எண்ணெய் இருப்பு விபரம். கடந்த இரு வாரங்களில் இருப்பு விபரம் வெளிவந்த போது, எதிர்பார்த்ததை விட இருப்பு அளவு குறைவாக இருந்ததும், விலையேற்றத்திற்கு சாதகமாக அமைந்தது.‘ஓபெக்’ உறுப்பு நாடுகளில் ஒன்றான, ஈரானின் ஏற்றுமதி தடை செய்யப்படும் நிலையில், ஆசிய மற்றும் ஐரோப்பிய கொள்முதல் நாடுகள், வேறு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்யத் துவங்கியுள்ளன.
இதனால், சந்தையில் தட்டுப்பாடு நிலவும் என்ற கோணத்திலும் விலை ஏற்றம் காணப்பட்டது. இருப்பினும், இந்த விலையேற்றம், சில காரணங்களால் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையேயான பேச்சு தோல்வியடைந்த நிலையில், அமெரிக்கா மீண்டும், 2,000 கோடி டாலர் மதிப்பிலான வரிகளை விதிக்க ஆலோசித்து வருகிறது. புதிய வரி விதிப்பு தொடரும் சூழ்நிலையில், பொருளாதார வளர்ச்சி மந்தமாகும் என்ற கோணத்தில், விலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
மேலும், அமெரிக்க எண்ணெய் ஏற்றுமதி மற்றும் உற்பத்தி வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த சூழலினாலும், விலை உயர்வு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.‘ராய்ட்டர்ஸ்’ நிறுவனம் நடத்திய, ‘சர்வே’யில், ஓபெக் உறுப்பு நாடுகளின் மொத்த எண்ணெய் உற்பத்தி, ஆகஸ்ட் மாதத்தில் தினசரி, 2,20,000 பேரல்கள் உயர்ந்துள்ளதாக தெரியவருகிறது. மேற்கூறிய காரணங்களால், சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு கட்டுப்படுத்தப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் வெள்ளி
தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றின் விலை, வார ஆரம்ப நாட்களில் விலை அதிகரித்து வர்த்தகமாகியது. எனினும், வார இறுதி நாட்களில் சரிவை சந்தித்து வர்த்தகம் முடிவுற்றது.சர்வதேச சந்தையில், பிற நாடுகளுக்கு எதிராக, அமெரிக்க நாணய குறியீடான டாலர் இண்டெக்ஸ் தொடர்ந்து வலுப்பெற்று வரும் நிலையில், அதற்கு எதிராக, ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மதிப்பு சரிவுடன், கமாடிட்டி பொருட்களின் விலை சரிவும் நிகழ்ந்து வருகிறது.டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாறு காணாத அளவிற்கு சரிவை சந்தித்துள்ளது. தற்போது, 1 அமெரிக்க டாலர், 71 ரூபாயை எட்டியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே, டாலரின் மதிப்பு உயர்ந்து வருகிறது. இதன் தாக்கம் தங்கம் விலையில் பிரதிபலிக்கிறது.இதைத் தொடர்ந்து, 2018ம் ஆண்டு துவக்கம் முதல், சர்வதேச சந்தையில், தங்கம் விலை சரிவில் இருந்து மீண்டு வருவது குறிப்பிடத்தக்கது.அசாதாரண சூழல் நிலவும் பட்சத்தில், தங்கம் ஒரு முதலீட்டு பொருளாக கருதப்படும் போக்கு, காலம் காலமாக இருந்து வருகிறது.
அதனால் தான், இக்கட்டான சூழ்நிலை மற்றும் பொருளாதார சிக்கல்கள் ஏற்படும் தருணங்களில், தங்கத்தின் விலை உயர்ந்து காணப்படுவது வழக்கம்.தற்போது அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையேயான வர்த்தக பிரச்னை இன்னும் முடிவுக்கு வரவில்லை.இந்நிலையில் அமெரிக்கா, 2,000 கோடி டாலர் மதிப்பிலான சீனப் பொருட்களுக்கான இறக்குமதி வரி விதிப்பு குறித்து, பொதுமக்களிடையே கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இவ்வார இறுதிக்குள், இது குறித்து ஒரு தீர்மானம் எடுக்கப்படும் என, தெரிகிறது.
ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு, 25 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கப்படலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. இப்படி நாடுகளுக்கிடையேயான அசாதாரண சூழல், தங்கம் மற்றும் வெள்ளி விலையேற்றத்துக்கு சாதகமாக அமைந்தது.
செம்பு
செம்பு விலை, இந்த ஆண்டு துவக்கம் முதலே, சரிவில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.சர்வதேச சந்தையில், தொழிற்சாலை மூலதன பொருட்கள் மற்றும் கனிமங்கள் ஆகியவற்றின் இறக்குமதி மற்றும் உபயோகிப்பில், சீனா முதலிடம் வகிக்கிறது. சீனாவின் இறக்குமதி மற்றும் உற்பத்தி பொருட்கள் ஏற்றுமதியில் ஏற்படும் பாதிப்புகள், விலைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
கடந்த சில மாதங்களாகவே, அமெரிக்கா மற்றும் சில நாடுகளுக்கு இடையே நடந்து வரும் வர்த்தக மோதல், செம்பின் விலையை பாதித்து வருகிறது.மேலும், அமெரிக்க நாணயத்தின் குறியீடான, டாலர் இண்டெக்ஸ், சந்தையில், 13 மாத உயர்வில் வர்த்தகமாகிறது. இதனால், அனைத்து கமாடிட்டி பொருட்களின் விலையும் சரிவில் இருந்து வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|