பதிவு செய்த நாள்
30 செப்2018
00:58
புதுடில்லி: மும்பையில் நடைபெற்ற, ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழுமத்தின் பொதுக் குழு கூட்டம், நிதி நெருக்கடிக்கு தீர்வு காண உறுதியான திட்டத்தை முன்வைக்காமல் முடிவடைந்தது.அடிப்படை கட்டமைப்பு, நிதிச் சேவைகள் உட்பட பல்வேறு துறைகளில் ஈடுபட்டு வரும், ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழுமம், 91 ஆயிரம் கோடி ரூபாய் கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளது. கடந்த, ஆக., 27 முதல், இக்குழும நிறுவனங்கள், ஒன்பது முறை, 2,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான கடன்களுக்கு, குறித்த நாளில் வட்டி செலுத்த தவறிவிட்டன.
உரிமை பங்கு : இதனிடையே, இக்குழுமம் நிதி நெருக்கடியைசமாளிக்க, 4,500 ரூபாய்க்கு உரிமைப் பங்குகளை வெளியிட்டுள்ளது. ஆனால், இக்குழுமத்தில், 21 சதவீத பங்கு மூலதனத்தை வைத்துள்ள, எச்.டி.எப்.சி., மற்றும் அபுதாபி முதலீட்டு ஆணையம், அதில் பங்கேற்காமல் பின்வாங்கி விட்டன. எனினும், 25.34 சதவீத பங்கு மூலதனத்துடன், தனிப் பெரும் முதலீட்டாளராக விளங்கும், எல்.ஐ.சி., மற்றும் 23.54 சதவீத பங்கை வைத்துள்ள, ஜப்பானின், ஓரிக்ஸ் கார்ப்பரேஷன், உரிமைப் பங்குகளை வாங்க திட்டமிட்டு உள்ளன. இதனிடையே, ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழுமம், அதன் சொத்துகளை விற்பனை செய்து, 30 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மும்பை யில், இக்குழுமத்தின் ஆண்டு பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான பங்கு முதலீட்டாளர்கள் பங்கேற்றனர்.
மூன்று அம்ச திட்டம் : இக்கூட்டத்தில், குழுமத்தின் துணைத் தலைவரும், நிர்வாக இயக்குனருமான, ஹரி சங்கரன் பேசியதாவது: குழும பிரச்னைகள் குறித்த பங்கு முதலீட்டாளர்களின் கவலையை போக்கி, நிறுவன செயல்பாடுகளில் இயல்பான சூழலை உருவாக்க, மூன்று அம்ச திட்டம் குறித்துபரிசீலிக்கப்பட்டு வருகிறது.முதலாவதாக, தற்போதைய உரிமைப் பங்கு வெளியீட்டை வெற்றி பெறச் செய்து, நிதி திரட்டிக் கொள்வது. அடுத்து ஒரு சில சொத்து களை விற்பனை செய்து, கடன்களை திரும்பத் தருவது; சொத்து விற்பனை திட்டத்தை துவக்கும் வரை, கடன்தாரர்களுக்கு தர வேண்டிய தொகைக்காக, பிற வழிகளில் நிதி திரட்டுவது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும், பணியாளர் எண்ணிக்கை, ஊதியம், ஊக்கத் தொகை குறைப்பு உள்ளிட்ட, சிக்கன நடவடிக்கைகளும் பரிசீலனையில் உள்ளன. குழுமம், விரைவில் நிதி நெருக்கடியில் இருந்து மீளும்.இவ்வாறு அவர் கூறினார்.
எதிர்ப்பு : இக்கூட்டத்தில், நிதி நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் உறுதியான முடிவு அறிவிக்கப்படாதது, பங்கு முதலீட்டாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.பெரும்பாலான முதலீட்டாளர்கள், சொத்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.அதற்கு பதிலாக, தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை மேற்கொண்ட வகையில், ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழுமத்திற்கு அளிக்க வேண்டிய, 16 ஆயிரம் கோடி ரூபாயை, மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காலியாகும் கூடாரம் : ஐ.எல்., அண்டு எப்.எஸ்., குழுமத்தின் ஓர் அங்கமாக, வங்கி சாரா நிதி நிறுவனமான, ஐ.எல்., அண்டு எப்.எஸ்., பைனான்சியல் சர்வீசஸ் உள்ளது.இந்நிறுவனம்,17 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது. இந்நிறுவனத்தில் இருந்து, ஐந்து இயக்குனர்கள் வெளியேறியதை அடுத்து, நிர்வாக இயக்குனரும், தலைமை செயல்அதிகாரியுமான, ரமேஷ் சி பாவாவும், சமீபத்தில் பதவி விலகினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|