பதிவு செய்த நாள்
18 அக்2018
04:13
திருப்பூர் : நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி, 10.66 சதவீதம் சரிந்துள்ளது.
நம் நாட்டில் உற்பத்தியாகும் ஆயத்த ஆடைகள், அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, கனடா என, பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த, 2017, ஜூலை 1ல், ஜி.எஸ்.டி., அறிமுகமானது. இதன் தொடர்ச்சியாக, ஏற்றுமதிக்கு வழங்கிய, 7.7 சதவீத டியூட்டி டிராபேக், 2 சதவீதமாக குறைக்கப்பட்டது; மற்ற சலுகை விகிதங்களும் குறைக்கப்பட்டன. இதனால், வர்த்தக போட்டிகளை எதிர்கொள்ள, ஆடை ஏற்றுமதியாளர்கள் திணறுகின்றனர்.
கடந்த, 2017 –- 18ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் (ஏப்., – செப்.,) நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி, 59 ஆயிரத்து, 114 கோடி ரூபாயாக இருந்தது. இது, 2018 -– 19ம் நிதியாண்டில், 52 ஆயிரத்து, 814 கோடி ரூபாயாக, 10.66 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் துணைத் தலைவர், சக்திவேல் கூறியதாவது: நடப்பு நிதியாண்டில் முதல் ஆறு மாதங்களில், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி, ரூபாய் மதிப்பில் கணக்கிடும்போது, 10.66 சதவீதமும், டாலர் மதிப்பில், 15.96 சதவீதமும் சரிவடைந்துள்ளது.
வர்த்தக சரிவை முன்னரே கணித்து, உரிய விளக்கங்களுடன், ஏற்றுமதி சலுகைகளை, 5 சதவீதம் உயர்த்தி வழங்க, மத்திய அரசிடம், ஏ.இ.பி.சி., சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசு உடனடியாக, ஸ்டேட் லெவிஸ், டியூட்டி டிராபேக் விகிதங்களை உயர்த்தி வழங்கி, ஆயத்த ஆடை ஏற்றுமதியை சரிவிலிருந்து பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|