பதிவு செய்த நாள்
19 நவ2018
06:52
கச்சா எண்ணெய் விலையின் தொடர் வீழ்ச்சி, இந்திய பொருளாதாரத்திற்கும், பங்குச் சந்தைக்கும் கிடைத்த நல்ல முதலுதவி என்றே சொல்ல வேண்டும்.இந்தியாவின் டாலருக்கான தேவை திடீரென கூடினால், அதைச் சமாளிப்பது என்பது, இந்திய அரசுகளின் தொடர் சவாலாகவே இருந்து வருகிறது. அரசின் கொள்கை மற்றும் சட்டங்கள் மூலம் ஏற்படும் அனைத்து பொருளாதார முன்னேற்றங்களையும், ஒரே அசைவில் நிர்மூலமாக்கும் தன்மை கொண்டது கச்சா எண்ணெய் விலை உயர்வு.
இன்னும் சொல்வதென்றால், நம் அரசியல் மாற்றங்களை வழி நடத்தக்கூடிய அளவுக்கு வல்லமை கொண்டது கச்சா எண்ணெய் விலை. அந்த வகையில், சமீபகால கச்சா எண்ணெய் விலை உயர்வுகள், பெரும் அரசியல் மாற்றங்களுக்கு வழிவகுக்குமோ என்ற அளவுக்கு பங்குச் சந்தையில் சந்தேகங்கள் உருவாகின. அரசும் இந்த விலை உயர்வை சமாளிக்க கடுமையாகப் போராடியது. அரசு நினைத்திருந்தால், சுலபமான வழியான, விலை குறைப்பை செய்திருக்கலாம். விலை குறைப்பு, வரி குறைப்பு என ஏதாவது ஒன்றையோ அல்லது இரண்டும் சேர்ந்த ஒரு அணுகுமுறையையோ மேற்கொண்டிருக்கலாம்.
ஆனால், அது பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, சர்வதேச அளவில், ‘ரேட்டிங்’ குறைப்பு மற்றும் பன்னாட்டு முதலீட்டு பண வெளியேற்றம் ஆகியவற்றில் முடிந்திருக்கும்.அதேசமயம், கச்சா எண்ணெய் விலை ஏற்றங்களை, பொருளாதாரத்தின் மீது நேரடியாக திணித்தால், அது வளர்ச்சியையும், நிறுவன லாப பெருக்கத்தையும், நிறுவன மதிப்பீடுகளையும் பாதிக்கும். அரசு இந்த பாதையைத் தான் தேர்ந்தெடுத்தது. இதில் எதை தேர்ந்தெடுத்தாலும், பாதிப்பு என்பது உறுதி; தாக்கம் தான் மாறக்கூடும்.
இந்திய அரசு, பெட்ரோலிய பொருட்கள் விலை ஏற்றம் என்ற கசப்பு மருந்தையே கையில் எடுத்தது. இது குறுகிய காலத்தில், கடும் அரசியல் மற்றும் பொருளாதார விளைவுகளை ஆளும் தரப்பு மீது திணித்தது. ஆனால், இந்த தேர்வின் பின்னால் இருந்த துல்லிய கணக்கு, கச்சா விலை ஏற்றம் நெடுங்காலம் நீடிக்காது என்பதே!குளிர்காலம் நோக்கி செல்லும்போது, இத்தகைய கணக்கு தப்பாகத்தான் அதிக வாய்ப்பு. ஆனாலும், மாற்று யோசனைகளும், அணுகுமுறைகளும் அதைவிட ஆபத்தான பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தும் என்று கணித்து, அரசு இந்த அணுகுமுறையை தேர்வு செய்தது. இறுதியில் மட்டும், மத்திய அரசு தன் கொள்கை நிலைப்பாட்டை சற்றே தளர்த்தி, சிறிது விலை குறைப்பு செய்ய வழிவகுத்தது.
அரசுக்கு வேண்டிய தருணத்தில் கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவை சந்தித்து, ரூபாயின் மதிப்பு கூட வழிவகுத்துள்ளது. இதில், அரசின் துணிச்சலான நிலைப்பாடு வெற்றி கண்டதாகவே தெளிவாகிறது. வரும் மாதங்களில், இதே நிலைப்பாடு தொடருமானால், நம்முடைய வட்டி விகிதங்கள் மற்றும் அரசின் நிதி பற்றாக்குறைகள் கட்டுப்பாட்டில் வந்துவிடும். அடுத்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி பெருக, இவை வழிவகுக்கும். இதை சந்தை புரிந்து கொண்டு விட்டதாகவே தோன்றுகிறது. வரவிருக்கும் மாநில தேர்தல் முடிவுகள் ஒன்று மட்டுமே, சந்தையின் மனதில் அச்சமூட்டி வருகின்றன. ஆளுங்கட்சி ஒரு மாநிலத்திற்கும் அதிகமாக தோல்வி அடையுமோ என்ற சந்தேகம் சந்தையில் நிலவுகிறது.
அந்த முடிவுகள் வெளியான பின், சந்தையானது, பொருளாதார மற்றும் அரசியல் சார்ந்த ஒருமித்த பார்வையை ஏற்படுத்திக் கொள்ளும். இடைக்காலத்தில், சந்தையில் ஏற்ற இறக்கங்கள் அதிகம் தென்படும். இந்த ஏற்ற இறக்கங்களை நிறுவன அளவில் ஆராய்ந்து, தொடர்ந்து முதலீட்டு மாற்றங்களை செய்து கொள்வது நல்லது. கடந்த, 2018ம் ஆண்டை விட, 2019ம் ஆண்டு, இந்திய பொருளாதாரத்திற்கு சாதகமாக அமையும் என்பது ஓரளவு உறுதியாகி வருகிறது. இந்த போக்கு நிலைத்து, மேலும் வலுவடையும் என்று முடிவெடுத்து, முதலீடு செய்ய தைரியம் வேண்டும். அந்த தைரியத்தை, உரிய தருணத்தில், உரிய துறைகளில், சரியான பங்குகளில் காட்டுவோருக்கு மட்டுமே முதலீட்டு வெற்றி உறுதியாக கிடைக்கும்.
–ஷ்யாம் சேகர், முதலீட்டு ஆலோசகர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|