பதிவு செய்த நாள்
20 டிச2018
23:27
திருப்பூர் : நிலுவையில் இருந்த, ‘ஸ்டேட் லெவிஸ்’ தொகையை வழங்க, மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், 1,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதால், ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பின்னலாடை ஏற்றுமதி வர்த்தக வளர்ச்சியில், திருப்பூர் முக்கிய பங்கு வகிக்கிறது. அன்னிய செலாவணியை ஈட்டித்தரும், ஏற்றுமதியாளர்களுக்கு, அரசு பல்வேறு சலுகை, மானியங்களை வழங்கி ஊக்குவிக்கிறது. மாநில அரசிடம் திரும்ப பெற இயலாத வரியினங்களை, ஸ்டேட் லெவிஸ் என்ற பெயரில், மத்திய அரசு வழங்குகிறது. ஐந்து மாதங்களாக, ஸ்டேட் லெவிஸ் தொகை வழங்கப்படாததால், ஏற்றுமதியாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
வெளிநாட்டு ஆர்டர்களை குறித்த நேரத்தில் அனுப்ப, மத்திய அரசின் மானியம் பெரிதும் கை கொடுக்கிறது. பொருளாதார மந்தநிலை உருவானதால், நிலுவையில் உள்ள ஸ்டேட் லெவிஸ் தொகையை விரைந்து வழங்க வேண்டுமென, ஏ.இ.பி.சி., எனப்படும் பின்னலாடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில், வலியுறுத்தி வந்தது. இந்நிலையில், மத்திய ஜவுளி அமைச்சகம், ஸ்டேட் லெவிஸ் தொகை, 1,000 கோடி ரூபாயை நேற்று விடுவித்தது. ஓரிரு வாரங்களில், லெவிஸ் தொகை கிடைக்கும் என்பதால், ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனனர்.
ஏ.இ.பி.சி., தென் மண்டல துணைத் தலைவர் சக்திவேல் கூறியதாவது: ஸ்டேட் லெவிஸ் தொகை விடுவிக்க வேண்டுமென, மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். அதன் பயனாக, 1,000 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, ஷிப்பிங் பில் தயாரிப்பு பணிகளும் நேற்று முதல் துவங்கியுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் கூறியதாவது: சில மாதங்களாக கிடைக்காமல் இருந்த, ‘ஸ்டேட் லெவிஸ்’ வழங்க, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை, ஏற்றமதியாளர்களுக்கு விரைவில் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|