பதிவு செய்த நாள்
20 டிச2018
23:30
புதுடில்லி : மத்திய அரசு, நடப்பு நிதியாண்டின் கூடுதல் செலவினத்திற்கான, துணை மானியக் கோரிக்கையை, நேற்று, பார்லி.,யில் தாக்கல் செய்தது.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, நடப்பு 2018 -– 19ம் நிதியாண்டில், கூடுதலாக, 85 ஆயிரத்து, 949 கோடி ரூபாய்க்கான இரண்டாவது துணை மானியக் கோரிக்கையை, நேற்று, லோக்சபாவில் தாக்கல் செய்தார். அதில், பொதுத் துறை வங்கிகளுக்கு, மறுபங்கு மூலதன கடன் பத்திர வெளியீடு மூலம், 41 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒதுக்கீடு:
மத்திய அரசு, பொதுத் துறை வங்கிகளின் நிதியாதாரத்தை மேம்படுத்த, 2017 அக்டோபரில், 2.11 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மறுபங்கு மூலதன திட்டத்தை அறிவித்தது.இதில், பட்ஜெட் ஒதுக்கீட்டில், 18,139 கோடி ரூபாய்; மறு பங்கு மூலதன கடன் பத்திரங்கள் மூலம், 1.35 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும். வங்கிகள், நிதிச் சந்தையில் எஞ்சிய, 58 ஆயிரம் கோடி ரூபாயை திரட்டிக் கொள்ளும் என, தெரிவிக்கப்பட்டது.
பங்கு மூலதனம்:
அதன்படி, மத்திய அரசு, ஏற்கனவே, 82 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது. எஞ்சிய தொகை, நடப்பு நிதியாண்டிற்குள் வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், சந்தையின் சாதகமற்ற சூழல், வாராக் கடன் உயர்வு, தொடர் இழப்பு போன்றவற்றால், பொதுத் துறை வங்கிகளால், திட்டமிட்டபடி நிதி திரட்ட இயலவில்லை. எனவே, மத்திய அரசு, மறு பங்கு மூலதன கடன் பத்திரங்கள் வாயிலாக, வங்கிகளுக்கு, 41 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க உள்ளது.
கூடுதல் செலவினத்தில், ரொக்கமாக, 15 ஆயிரத்து, 65 கோடி ரூபாய்; அரசு துறைகளில் இருந்து, 70 ஆயிரத்து, 882 கோடி ரூபாய் செலவிடப்படும். இதில், பொதுத் துறையைச் சேர்ந்த, ஆயில் இந்தியா நிறுவனத்தில், 250 கோடி ரூபாய், பங்கு மூலதனம் மேற்கொள்ளப்படும். அத்துடன், ரயில்வே துறையின் பல்வேறு திட்டங்களுக்காக, 5,344 கோடி ருபாய் ஒதுக்கப்படும். மேலும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு, வட்டி மானியமாக, 247 கோடி ரூபாய்; தேசிய கங்கை நதி ஆணையத்திற்கு, 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என, துணை மானிய கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|