பதிவு செய்த நாள்
26 பிப்2019
23:32
புதுடில்லி : ‘‘நலிந்த நிறுவனங்களின் கடன் தீர்வு திட்டத்தில் பங்கேற்று, பின்வாங்கும் நிறுவனங்கள் மீது, திவால் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வாராக் கடன் தொடர்பாக, பல நிறுவனங்கள் மீது, திவால் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அத்தகைய நிறுவனங்களை கையகப்படுத்த முன்வரும் பல நிறுவனங்கள், கொடுத்த வாக்குறுதிப்படி நடக்காமல், பின்வாங்கி விடுகின்றன.இது, கடன் பெற்ற நிறுவனங்கள் மற்றும் கடன் வழங்கிய வங்கிகளை ஏமாற்றத்திற்கு உள்ளாக்குகிறது. அதுமட்டுமின்றி, திவால் சட்டத்தின் கீழ், பல மாதங்களாக மேற்கொண்ட பல்வேறு நிர்வாக நடவடிக்கைகளும் பயனற்றதாகிறது.
அதனால், வாக்கு தவறும் நிறுவனங்கள் மீது, திவால் சட்டத்தின் கீழ், கடும் நடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.இது குறித்து, மத்திய நிறுவன விவகாரங்கள் துறை செயலர் இன்ஜெட்டி ஸ்ரீனிவாஸ் கூறியதாவது:திவால் நடவடிக்கைக்கு ஆளான நிறுவனங்களின் கடன்களுக்கு தீர்வு காண பல நிறுவனங்கள் முன் வருகின்றன. ஆனால், சில நிறுவனங்கள், ஓராண்டு கடந்த பிறகும், கடன் தீர்வு திட்டத்தை, நிறைவேற்றாமல் பின்வாங்கி விடுகின்றன.
இதனால், கடன் தீர்வுக்காக எடுத்த அனைத்து முயற்சிகள், பணம், நேரம் ஆகியவை வீணாகின்றன.இத்தகைய நிறுவனங்களிடம், கடன் தீர்வுக்காக செலவிடப்பட்ட மொத்த தொகையை வசூலிப்பதா அல்லது குற்ற நடவடிக்கை எடுப்பதா என்பது குறித்து, பரிசீலிக்கப்பட்டு வருகிறது.வாக்குறுதி தவறும் நிறுவனங்கள், மீண்டும் கடன் தீர்வு திட்டத்தில் பங்கேற்க தடை விதிப்பது குறித்தும் ஆராய்ந்து வருகிறோம்.
எந்தவொரு நிறுவனமும், கடன் தீர்வு திட்டத்திற்கு ஒப்புக் கொண்டு, வேண்டுமென்றே பின்வாங்கினால், அதன் நிறுவனருக்கு ஓராண்டுக்கு குறையாமல் சிறைத் தண்டனை மற்றும், ௧ லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க, திவால் சட்டம், பிரிவு, 74 வழி வகை செய்கிறது.இதை, ஐந்து ஆண்டுகள் சிறை மற்றும் ஒரு கோடி ரூபாய் அபராதமாக உயர்த்துவது குறித்து, பரிசீலிக்கப்படுகிறது.
மேலும், கடன் தீர்வு திட்டத்தில் பங்கேற்று, பின்வாங்கும்பட்சத்தில், ஒரு நிறுவனம் செலுத்தும் முன்வைப்பு தொகையை முற்றிலுமாகவோ அல்லது ஒரு பகுதியையோ பிடித்தம் செய்து கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பை, மத்திய அரசு வெளியிடும்.இவ்வாறு அவர் கூறினார்.
காலை வாரிய, ‘லிபர்டி ஹவுஸ்’:
பொதுத் துறையைச் சேர்ந்த, கார்ப்பரேஷன் வங்கி, ஆம்டெக் ஆட்டோ நிறுவனத்தின் மீது, திவால் நடவடிக்கை கோரி, தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்தில் விண்ணப்பித்தது. இதையடுத்து, ஆம்டெக் நிறுவனத்தின், 12 ஆயிரத்து, 603 கோடி ரூபாய் கடன் தீர்வு திட்டத்தை ஏற்க, பிரிட்டனைச் சேர்ந்த, லிபர்டி ஹவுஸ் நிறுவனம் முன்வந்தது. ஆனால், ஐந்து மாதங்கள் கடந்தும், முதற்கட்டமாக செலுத்த வேண்டிய, 3,225 கோடி ரூபாயை, லிபர்டி ஹவுஸ் செலுத்தவில்லை. இதனால், கடன் அளித்த நிறுவனங்கள், மீண்டும் தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்தை நாட, முடிவெடுத்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|