பதிவு செய்த நாள்
05 மார்2019
23:41
புதுடில்லி:இந்தாண்டு துவக்கத்தில், மந்தகதியில் இருந்த சேவைகள் துறை, பிப்ரவரியில் எழுச்சி கண்டுள்ளது. இத்துறை நிறுவனங்களுக்கு, புதிய, ‘ஆர்டர்’கள் அதிக அளவில் கிடைத்துள்ளதால், உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.
இது குறித்து, தகவல் தொழில்நுட்பம், வியாபாரம், ஓட்டல், சுற்றுலா, போக்குவரத்து, நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், வர்த்தகம், கட்டுமானம் உள்ளிட்ட சேவை துறை நிறுவனங்களிடம், நிக்கி – மார்க்கிட் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வெளியிட்டுள்ளது.
பணியாளர் சேர்க்கை
அதில் கூறப்பட்டு உள்ளதாவது: ஜனவரியை விட, பிப்ரவரியில், சேவைகள் துறையின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. இது, இத்துறையின் வளர்ச்சியை குறிக்கும், ‘நிக்கி – ஐ.எச்.எஸ்., மார்க்கிட் எஸ்.பி.எம்.ஐ.,’ குறியீடு, 52.5 புள்ளிகளாக உயர்ந்திருப்பதில் இருந்து, தெரிய வந்துள்ளது.ஜனவரியில், சேவைகள் துறை வளர்ச்சி குறித்த குறியீடு, 52.2 புள்ளிகள்; 2018, டிசம்பரில், 53.7 புள்ளிகளாக காணப்பட்டது.இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தால், அது, வளர்ச்சியை குறிக்கும்.
இதன்படி, சேவைகள் துறை, தொடர்ந்து, ஒன்பது மாதங்களாக வளர்ச்சி கண்டு வருகிறது. சேவை துறை நிறுவனங்களுக்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து, புதிய ஆர்டர்கள் அதிக அளவில் கிடைத்துள்ளன. இதனால், உற்பத்தி உயர்ந்துள்ளது.அதற்கேற்ப, நிறுவனங்களில் பணியாளர் சேர்க்கையும் அதிகரித்துள்ளது. எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, பிப்ரவரியில், வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
தயாரிப்பு
மதிப்பீட்டு மாதத்தில், தயாரிப்பு மற்றும் சேவைகள் துறையின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை குறிக்கும், ‘என்.ஐ.சி., -– பி.எம்.ஐ.ஓ.,’ குறியீடு, 53.8 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இது, ஜனவரியில், 53.6 புள்ளிகளாக இருந்தது.தனியார் துறையில், உற்பத்தி அதிகரித்துள்ளது.
சர்வதேச வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல், தேவை குறைவு போன்றவற்றுக்கு இடையே, தயாரிப்பு துறைக்கு, புதிய ஏற்றுமதி ஆர்டர்கள் அதிகம் கிடைத்துள்ளன.குறிப்பாக, சீனா, பிரேசில், ரஷ்யா போன்ற வளரும் நாடுகளை விட, இந்திய தயாரிப்பு துறை, அதிக வர்த்தக வாய்ப்புகளை பெற்றுள்ளது.அதேசமயம், பொருட்களின் விற்பனை விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை என, ஆய்வில் பங்கேற்ற, 97 சதவீத நிறுவனங்கள் கூறியுள்ளன.
சில்லரை பணவீக்கம் குறைந்துள்ளதால், நிறுவனங்களின் மூலப்பொருட்கள் செலவினம் கட்டுக்குள் உள்ளது. இதன் காரணமாக, அவை, பொருட்கள் விலையில் மாற்றம் ஏதும் செய்யவில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் வலுவடையும்
நடப்பு, 2018 – -19ம் நிதியாண்டில், ஜூலை – செப்டம்பர் வரையிலான இரண்டாவது காலாண்டிற்கு பின், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, வலுவடைந்து வருகிறது. இதற்கு, தயாரிப்பு துறையின் பங்களிப்பு துணை புரிந்துள்ளது. இத்துறை, 14 மாதங்கள் காணாத வளர்ச்சியை கண்டுள்ளது. அதனால், நடப்பு, ஜனவரி – மார்ச் வரையிலான நான்காவது காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேலும் வலுப்பெறும் என, எதிர்பார்க்கப் படுகிறது.
பாலியனா டி லிமா
முதன்மை பொருளாதார வல்லுனர்
ஐ.எஸ்.எஸ்., மார்க்கிட்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|