பதிவு செய்த நாள்
05 ஏப்2019
00:07
மும்பை:வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டியை, ரிசர்வ் வங்கி மீண்டும் குறைத்து உள்ளது.
மும்பையில், ரிசர்வ் வங்கி கவர்னர், சக்திகாந்த தாஸ் தலைமையிலான நிதிக் கொள்கை குழுவின், மூன்று நாள் கூட்டம், நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து, சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:நிதிக் கொள்கை குழு கூட்டத்தில், தயாரிப்பு துறையின் மந்தநிலை, உள்நாட்டு வளர்ச்சிக்கு உள்ள சவால்கள் உள்ளிட்ட அம்சங்கள் ஆலோசிக்கப்பட்டன.
உள்நாட்டு பொருளாதாரம், பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக, சர்வதேச காரணிகளின் தாக்கத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழல் நிலவுகிறது.இந்நிலையில், உள்நாட்டு வளர்ச்சியை வலுப்படுத்துவது அவசியம் என, குழு கருதுகிறது. இதற்கு முக்கியமாக, தனியார் முதலீடுகளில் காணப்படும், சுணக்க நிலை மாற வேண்டும்.
வங்கிகளின் கடன் வளர்ச்சி, 14 சதவீதம் என்ற அளவில் சிறப்பாக உள்ளது. ஆனால், அது பரவலாக இல்லை.சிறிய நிறுவனங்கள்வங்கிகளின் கடன் வளர்ச்சியால் பெரிய நிறுவனங்கள் பெற்றதைப் போல, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் பயன் பெறவில்லை. இப்பிரிவின் கடன் வளர்ச்சி குறைவாகவும், ஏற்ற, இறக்கமின்றி, நிலையாகவும் உள்ளது.
இத்தகைய சூழலில், நாட்டின் சில்லரை பணவீக்கம், ரிசர்வ் வங்கி நிர்ணயித்த, 4 சதவீதத்தை விட, குறைவாக உள்ளதால், வங்கிகளுக்கான, ரெப்போ வட்டியை, 0.25 சதவீதம் குறைத்து, 6.25லிருந்து, 6 சதவீதமாக நிர்ணயிக்க, முடிவு செய்யப்பட்டது.இதனால், வங்கிகள், வீடு, வாகனம் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான வட்டியை குறைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது, சாதாரண மக்களுக்கும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் வளர்ச்சிக்கும் உதவும்.
ரிசர்வ் வங்கி, நிதிக் கொள்கையில் மாற்றம் ஏதும் செய்யவில்லை. அதேசமயம், நடப்பு, 2019 – 20ம் நிதியாண்டின், ஏப்., – செப்., வரையிலான, முதல் அரையாண்டிற்கான, சில்லரை பணவீக்க இலக்கு, 2.9 – 3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.பருவ மழை வழக்கம் போல இருக்கும் என்ற கணிப்பு, உணவு, எரிபொருள் விலை குறைவு உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில், சில்லரை பணவீக்க இலக்கு குறைக்கப்பட்டுள்ளது.
எனினும், கச்சா எண்ணெய் விலை உயர்வு, அழுகும் உணவுப் பொருட்களின் திடீர் விலையேற்றம், சர்வதேச நிதிச் சந்தைகளின் ஏற்ற, இறக்கம் போன்ற சில சவால்கள் காரணமாக, சில்லரை பணவீக்கத்தில் தாக்கம் ஏற்படலாம்.
கடன் வசூல்பெரிய நிறுவனங்களின் வாராக் கடன் வசூல் தொடர்பான ரிசர்வ் வங்கி விதிமுறை, அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதை ஏற்று, வாராக் கடன் வசூலுக்கு புதிய விதிமுறைகளை வெளியிட, ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த, 2018 ஏப்ரலில், ரெப்போ வட்டி, 6 சதவீதமாக இருந்தது. அதன் பின், இரு முறை, தலா, 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டு, 6.5 சதவீதமாக அதிகரித்தது.ரிசர்வ் வங்கி கவர்னராக, சக்திகாந்த தாஸ், கடந்த ஆண்டு, டிசம்பரில், பொறுப்பேற்றார். இந்தாண்டு பிப்ரவரியில், அவர் தலைமையில், முதன் முறையாக, நிதிக் கொள்கை குழு கூட்டம் நடைபெற்றது. அதில், ரெப்போ வட்டி, 0.25 சதவீதம் குறைக்கப்பட்டது. தற்போது, மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்
* ரெப்போ வட்டி, 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு, 6 சதவீதமாக நிர்ணயம்
* கடந்த, 2018- – 19ம் நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7.4 சதவீதத்தில் இருந்து, 7.2 சதவீதமாக மறு மதிப்பீடு
* கடந்த நிதியாண்டின், ஜன., – மார்ச் காலாண்டில், சில்லரை பணவீக்க மதிப்பீடு, 2.4 சதவீதமாக குறைப்பு
* நடப்பு, 2019 -– 20ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில், சில்லரை பணவீக்க இலக்கு, 3.2 – 3.4 சதவீதத்தில் இருந்து, மறு மதிப்பீட்டில், 2.9 – 3 சதவீதமாக குறைப்பு
* இரண்டாம் அரையாண்டில் சில்லரை பணவீக்கம், 3.5 – -3.8 சதவீதமாக நிர்ணயம்
* நிதிக் கொள்கை குழுவின், ஆறு உறுப்பினர்களில், நான்கு பேர் வட்டி குறைப்புக்கு ஆதரவாகவும், இருவர் எதிர்த்தும் ஓட்டளித்தனர்
* அடுத்த நிதிக் கொள்கை குழு கூட்டம், ஜூன், 6ல் நடைபெறும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|