பதிவு செய்த நாள்
06 ஏப்2019
23:28
மும்பை:மும்பையைச் சேர்ந்த, வீட்டு வசதி கடன் நிறுவனமான, இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ், சென்னையைச் சேர்ந்த, லட்சுமி விலாஸ் வங்கியை கையகப்படுத்தியுள்ளது. இது தொடர்பான தீர்மானத்திற்கு, இரு தரப்பு இயக்குனர்கள் பங்கேற்ற கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
அடுத்து, பங்கு முதலீட்டாளர்கள், ரிசர்வ் வங்கி, ‘செபி’ உள்ளிட்ட அமைப்புகளின் ஒப்புதலுக்கு பின், ‘இந்தியா புல்ஸ் லட்சுமி விலாஸ் வங்கி’ என்ற பெயரில் செயல்படும். முதலீட்டாளர்களுக்கு, லட்சுமி விலாஸ் வங்கியின், 100 பங்குகளுக்கு, இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின், 14 பங்குகள் வழங்கப்படும்.இந்த வகையில், முதலீட்டாளர்களுக்கு, லட்சுமி விலாஸ் வங்கி பங்கின் விலையை விட, 40 சதவீதம் அதிகம் கிடைக்கும்.
தமிழகத்தில், கரூரில், வி.எஸ்.என்.ராமலிங்க செட்டியார் தலைமையில், 1926ல், லட்சுமி விலாஸ் வங்கி உருவானது. கடந்த, 2014ல், இவ்வங்கியின் தலைமையகம், சென்னைக்கு மாற்றப்பட்டது.சந்தை போட்டி காரணமாக, கடன்களை வாரி வழங்கியதால், இவ்வங்கியின் வாராக் கடன் அதிகரித்தது.
தொடர்ந்து ஐந்து காலாண்டுகளாக இழப்பை சந்தித்து வந்த இவ்வங்கி, சரிவடைந்த மூலதன இருப்பு விகிதத்தை சமாளிக்க, சில தினங்களுக்கு முன், தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு பங்குகளை ஒதுக்கியது.இத்தகைய நெருக்கடியான தருணத்தில், இவ்வங்கிக்கு, இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் கைகொடுத்துள்ளது.
இதையடுத்து, லட்சுமி விலாஸ் வங்கியின் தலைமையகம், மும்பைக்கு மாற்றப்படும் என, தெரிகிறது.இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைவர், சமீர் கெலாட், ஒருங்கிணைந்த புதிய வங்கியின் துணைத் தலைவராக பொறுப்பேற்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|