பதிவு செய்த நாள்
11 ஏப்2019
23:39
புதுடில்லி:இந்திய நுகர்வோர், தள்ளுபடி சலுகைகள், தனிப்பட்ட சேவைகள் போன்றவற்றுக் காக, தங்களைப் பற்றிய அனைத்து தகவல்களையும், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதாக, ஆக்செஞ்சுர் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விபரம்:உலகிலேயே, இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த, நுகர்வோர் தான், தங்களை பற்றிய அனைத்து தகவல்களையும் அதிக அளவில் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனர்.
கட்டண சலுகை
நிதி நிறுவனங்களிடம், பிரத்யேக சேவைகளுக்காக, சுய விபரங்களை அளிப்போரின் எண்ணிக்கை, இந்தியாவில், 67 சதவீதம்; சீனாவில், 69 சதவீதமாக உள்ளது.வங்கி, காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றின் திட்டங்களில், தள்ளுபடி மற்றும் சலுகைகளை பெறுவதற்காக, இந்தியாவில், 10க்கு, ஏழு பேர், தங்களைப் பற்றிய முக்கிய தகவல்களை வழங்க தயாராக உள்ளனர்.இந்திய நுகர்வோரில், மூன்றில் இரு பங்கினர், கடனுக்கு ஒப்புதல் பெறவும், உடற் பயிற்சி கூடங்களில் கட்டணச் சலுகை கிடைக்கவும், தனிப்பட்ட சேவைகளுக்காகவும், தாங்கள் வசிக்கும் இடம் குறித்த தகவலை அளிக்க முன்வருகின்றனர்.
அதேசமயம், தங்களின் தகவல் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என, பெரும்பாலானோர் கருது கின்றனர். ஐந்தில், நான்கு பேர், அதாவது, 81 சதவீதத்தினர், தங்கள் தனிப்பட்ட விபரங்களின் பாதுகாப்பு குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாக தெரிவித்துஉள்ளனர்.புகார்களுக்கு விரைவாக தீர்வு காணவும், தகவல் மோசடி தொடர்பாகவும், வங்கி, காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றுடன், பலர் சுய விபரங்களை பகிர்ந்து கொள்கின்றனர்.
வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ளவும், குறிப்பிட்ட சேவைகள் மற்றும் சலுகைகளை எதிர்பார்த்தும், இந்திய நுகர்வோர், தங்களை பற்றிய தகவல்களை வழங்குவது ஆய்வில் தெரியவந்துள்ளது.நுகர்வோரில், 92 சதவீதம் பேர், எதிர்பாராத இழப்பினால் ஏற்படும் பாதிப்பு குறையும் என்ற நோக்கத்தில், தங்கள் வருவாய், இருப்பிடம், வாழ்க்கை பாணி உள்ளிட்ட தனிப்பட்ட விபரங்கள் அனைத்தையும், காப்பீட்டு நிறுவனங்களுக்கு தெரிவிக்கின்றனர்.
தள்ளுபடி சலுகை
அதுபோல, 93 சதவீதம் பேர், கடன் விண்ணப்பங்களுக்கு விரைவாக அனுமதி பெறுவதற்காக, வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவற்றிடம், தங்கள் வருவாய், இருப்பிடம், வாழ்க்கை பாணி உள்ளிட்ட விபரங்களை வழங்குகின்றனர்.தங்கள் இருப்பிடம் சார்ந்த, பிரத்யேக சேவைகளை பெறவும், சில்லரை விற்பனையாளரிடம் தள்ளுபடி சலுகைகளை கோரவும், 91 சதவீதம் பேர், தங்கள் வருவாய், இருப்பிடம் உள்ளிட்ட விபரங்களை தருகின்றனர்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலகளவில், 27 நாடுகளைச் சேர்ந்த, 47ஆயிரம் நுகர்வோரிடம், தனி நபர் தகவல் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவில், 2,000 நுகர்வோர்கள், இந்த ஆய்வில் பங்கேற்று, கருத்து தெரிவித்தனர்.
ஆக்செஞ்சுர் சர்வதேச நிதிச் சேவைகள் நுகர்வோர் ஆய்வறிக்கை
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|