பதிவு செய்த நாள்
06 மே2019
00:01
இனிமேல், ஈரானில் இருந்து, நாம், கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய முடியாது. மிகப்பெரிய பாதிப்பாக உருவெடுத்திருக்கும் கச்சா எண்ணெய் பிரச்னை, வேறு வாய்ப்புகளை தேடும்படி நம்மை வற்புறுத்துகிறது. கச்சா எண்ணெய்க்கு என்ன ஆச்சு?
ஈரான், அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது. அது, அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை. உலக அரங்கில் ஈரானைத் தனிமைப்படுத்த விரும்பிய அமெரிக்கா, அதனிடம் இருந்து கச்சா எண்ணெயை எந்த நாடும் இறக்குமதி செய்யக்கூடாது என்று தடை விதித்தது.
கடந்த டிசம்பர் மாதம் டிரம்ப் அரசு, இதைக் கடுமையாக வலியுறுத்தியது. இந்தியா உட்பட, எட்டு நாடுகள், ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த ஆறு மாத அவகாசம் கொடுத்தது. மே, 2ம் தேதியோடு ஆறு மாத அவகாசம் முடிந்தது.
இனிமேல் நாம், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாது. நமக்கு சீனா போல் துணிச்சல் இல்லை. அமெரிக்கா முரட்டுத்தனமாக தடை விதித்தாலும், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவேன் என்று மோதுகிறது சீனா.நாம் பணிந்து போய் விட்டோம். ஈரானை விட, நமக்கு அமெரிக்க உறவும், வர்த்தகமும், டாலரும் முக்கியம்.
நம் எரிபொருள் தேவைக்காக, 80 சதவீத கச்சா எண்ணெயையும், 40 சதவீத இயற்கை எரிவாயுவையும் இறக்குமதி செய்கிறோம்.ஈராக், சவுதி அரேபியாவுக்கு அடுத்து, அதிகபட்சமாக கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வது ஈரானிடம் இருந்து தான். அதாவது, இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில், 10 சதவீதம் அளவுக்கு வழங்குவது ஈரான் தான்.
நீண்ட காலமாகவே நமக்கு ஈரானோடு நல்ல உறவு இருந்து வருகிறது. அதனால் தான், அந்நாடு, மற்ற நாடுகளை விட குறைந்த விலையில் கச்சா எண்ணெயை வழங்குகிறது.கச்சா எண்ணெயை சுமந்து வரும் கப்பல்களுக்கு காப்பீட்டுத் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது; போக்குவரத்து கட்டணமும் தள்ளுபடி. மேலும், செலுத்த வேண்டிய தொகைக்கு, 60 நாட்கள் வரை, ‘கிரெடிட்’ காலம் வழங்கப்படுகிறது.இதர நாடுகள், 30 நாட்களுக்குள் பணத்தைக் கொடுக்க வலியுறுத்துகின்றன.
இதன் மூலம், நம் நாட்டு சுத்திகரிப்பு ஆலைகள், வங்கிகளிடம் இருந்து குறைந்த அளவு நடைமுறை மூலதனம் பெறுகின்றன; வட்டி தொகையிலும் மிச்சம் பிடிக்கின்றன.இனி, அந்த பலன்கள் இல்லை. இரண்டு, மூன்று பிரச்னைகள் தலையெடுக்கின்றன.முதலில் தேவையை எவ்வாறு நிறைவு செய்யப் போகிறோம்? ஆறு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டதால், போதிய முன்னேற்பாடுகளை செய்திருக்கிறோம் என்று சொல்கிறது, மத்திய அரசு.
அதாவது, சவுதி அரேபியா, ஈராக் ஆகிய நாடுகளிலிருந்து கூடுதல் கச்சா எண்ணெய் வாங்கிக் கொள்ள முடியும்.புதிதாக எண்ணெய் துரப்பணப் பணியில் பெரும் வாய்ப்புகளை பெற்றுள்ள கயானாவிடம் இருந்து வாங்கிக் கொள்ள முடியும். வேறு பல நாடுகளில் இருந்தும் பெற்றுக் கொள்ள முடியும்.ஆனால், ஈரான் அளவுக்கு நிச்சயம் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கிடைக்கப் போவதில்லை.
நம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், 3,000 கோடி ரூபாய் வரை கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக கூடுதலாக செலவு செய்ய வேண்டியிருக்கும் என, ‘இக்ரா’ என்ற ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது.வேறு நாடுகளில் இருந்து கூடுதலாக இறக்குமதி செய்து கொள்ளலாம் என்று சுலபமாகச் சொல்லி விடலாம். பிரச்னையே அங்கு தான்.
குறிப்பாக, எண்ணெய் வள நாடுகளின் கூட்டமைப்பான, ‘ஒபெக்’ படிப்படியாக கச்சா எண்ணெய் துரப்பணத்தைக் குறைத்துக் கொண்டே வருகிறது. சர்வதேச விலையை நிலைநிறுத்த வேண்டும், தேவையை அதிகரிக்க வேண்டும் என்றே இப்படி செய்து வருகின்றன.இந்நிலையில், நாம் கூடுதல் கச்சா எண்ணெய் கேட்டால், நிச்சயம் கூடுதல் விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
அந்த விலையை அப்படியே, இங்கே வாடிக்கையாளர்களின் தலை மேல் கட்ட வேண்டியது தானே;என்ன பிரச்னை என்று தானே நினைக்கிறீர்கள்?தேர்தல் முடிந்து எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இப்படி ஒரு பெரும் சுமையை மக்கள் மீது சுமத்த விரும்ப மாட்டார்கள். பெட்ரோல், டீசல் மீதான வரிகளைக் குறைத்து, நல்ல பெயர் எடுக்கவே கட்சிகள் விரும்பும். விளைவு, நிதிப் பற்றாக்குறை; பணவீக்க உயர்வு.
எப்படி இருந்தாலும், அடுத்த ஆறு மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை இன்னும் உயரப் போவது நிச்சயம்.ஆனால், பிரச்னை அப்படியே தான் இருக்கப் போகிறது. இன்னும் எத்தனை காலத்துக்கு பெட்ரோல், டீசலையே நம்பி இருக்கப் போகிறோம்?இந்த எரிபொருட்கள், உலக அளவில் தீர்ந்து கொண்டே இருக்கின்றன. துரப்பணம் செய்யக்கூடிய நாடுகளும் ஆர்வம் இழந்து வருகின்றன.
இந்நிலையில், நாம் விரைவாக, மின்சாரத்தை நோக்கி நகர்ந்தாக வேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகளில், மின்சார வாகனங்களுக்கான சந்தையை நாம் விரிவுபடுத்த வேண்டும்.பல மேலை நாடுகள், மின்சார வாகனங்களையும், அதற்கான தொழில்நுட்பங்களை மேம்படுத்த வும், நடைமுறைப்படுத்தவும் முன்னெடுப்புகளை செய்து வருகின்றன; உற்பத்தியை அதிகப் படுத்தி வருகின்றன.கச்சா எண்ணெய் தட்டுப்பாடு, நம்மை இந்த திசையை நோக்கியே தள்ளு கிறது. யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு, நாமும் அதற்குத் தயாராவதே புத்திசாலித்தனம்.
-ஆர்.வெங்கடேஷ்பத்திரிகையாளர்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|