பதிவு செய்த நாள்
08 மே2019
23:22
புதுடில்லி:கடன் நெருக்கடியால், விமான சேவையை நிறுத்தியுள்ள, ‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனத்திற்கு, 250 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக, அந்நிறுவனத்தின் நிறுவனர், நரேஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடன் கொடுத்த வங்கிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியதை அடுத்து, நானும், என் மனைவியும், ஜெட் ஏர்வேஸ் இயக்குனர் பொறுப்பில் இருந்து வெளியேறினோம்.நம் ஜெட் ஏர்வேஸ் குடும்பத்தினரின் நலனுக்காக, என்னால் முடிந்தவரை அனைத்து வகை தியாகங்களையும் செய்து உள்ளேன்.
தற்போது, அந்நிறுவனத்திற்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை.எனினும், நிறுவன ஊழியர்களின் ஊதிய நிலுவையை வழங்கவும், மீண்டும் ஜெட் ஏர்வேஸ் விமான சேவையை இயக்கவும், 250 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கிறேன்.இதை, தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை நிர்வகிக்கும், கடன் வழங்கிய வங்கிகள் கூட்டமைப்பிற்கு அளிக்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், 8,000 கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது.இந்நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இருந்து, நரேஷ் கோயல் வெளியேறியதை அடுத்து, கடன் கொடுத்த, எஸ்.பி.ஐ., தலைமையிலான, வங்கிகள் கூட்டமைப்பு வசம், நிறுவனத்தின், 51 சதவீத பங்குகள் வந்தன. புதிய இயக்குனர் குழுவும் அமைக்கப்பட்டது.எனினும், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின், 75 சதவீத பங்குகளை விற்க முடியாததால், வங்கிகள் கூட்டமைப்பு உறுதி அளித்தபடி, 1,500 கோடி ரூபாய் முதலீடு செய்யவில்லை.
இந்நிலையில், குத்தகை நிறுவனங்கள், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு அளித்த பெரும்பாலான விமானங்களை, திரும்பப் பெற்றுக் கொண்டன. இதனால், ஜெட் ஏர்வேஸ் விமான சேவை, ஏப்., 17ம் தேதி நள்ளிரவுடன், தற்காலிகமாக முடிவுக்கு வந்தது. இந்நிறுவனத்தின் ஊழியர்களுக்கு, ஜனவரி முதல் ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது.
நரேஷ் கோயல் உதவியால், அவர்களுக்கு பகுதி ஊதியமாவது கிடைக்கும் என, தெரிகிறது. இதனிடையே நேற்று, ஜெட் ஏர்வேஸ் நிறுவன பங்குகளை வாங்க, முதன் முதலாக, இரு வெளிநாட்டு தொழிலதிபர்கள் அடங்கிய குழு முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|