பதிவு செய்த நாள்
12 மே2019
23:50
இந்திய
பங்குச் சந்தைகளில், தொடர்ந்து இரண்டாவது வாரமாக, சரிவில்
வர்த்தகம் நடைபெற்று முடிவுற்றது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு
எண், சென்செக்ஸ், 2,000 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு
எண், நிப்டி, 400 புள்ளிகளும் கடந்த வாரம் சரிந்தன. கடந்த, ஏழு
மாதங்களுக்குப் பிறகு ஏற்பட்ட மிகப் பெரிய வாரச் சரிவு இதுவே ஆகும்.
நடந்து
கொண்டிருக்கும் லோக்சபா தேர்தலில், ஆறாம் கட்ட ஓட்டுப் பதிவு
முடிவடைந்துள்ள நிலையில், இம்மாதம், 23ம் தேதி, தேர்தல் முடிவுகள்
வெளிவர உள்ளன.கடந்த ஏப்ரல் மாதத்தில் தேர்தல் துவங்கிய
நிலையில், தேர்தலுக்கு முன் வந்த கருத்துக் கணிப்புகளில், ஆளும்
மத்திய, பா.ஜ., அரசு, மீண்டும் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும்
என்ற கருத்து வெளிப்பட்டது. இது, சந்தைகளின் சாதகமான போக்கிற்கு
வழிவகுத்தது.
மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் கட்ட ஓட்டுப்
பதிவுக்குப் பின், தற்போது எதிர்மாறான கருத்து நிலவி வருகிறது.
யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம் என்ற சூழலே உள்ளதாக
கருத்துகள் வருகின்றன. இது, பங்குச் சந்தைகளின் பாதகமான
போக்கிற்கு வழிகோலியது. மேலும், கடந்த பல மாதங்களாக நிலவி வந்த,
அமெரிக்கா – சீனா இடையேயான வர்த்தக மோதல், மேலும் அதிகரிக்கும்
சூழல் உருவாகி உள்ளது.
அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள்
மட்டத்தில், இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற கலந்தாலோசனை
கூட்டத்தில், சுமுக முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.இந்த
சூழலில், கடந்த வெள்ளி அன்று, சீனாவில் இருந்து இறக்குமதி
செய்யப்படும் பொருட்களுக்கான வரியை, அமெரிக்கா, 25 சதவீதம்
அதிகரித்துள்ளது; 200 பில்லியன் டாலர் மதிப்பிலான புதிய
இறக்குமதி வரியை, அமெரிக்கா விதித்துள்ளது.
இந்த அசாதாரண சூழல்
காரணமாக, உலகின் அனைத்து பொருளாதார வளர்ச்சியும் குறையும் என்ற
நிலை உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக பங்குச் சந்தைகள் வீழ்ச்சி
அடைந்து, வர்த்தகம் நடைபெற்று வருகின்றன.கடந்த சில மாதங்களாகவே,
இந்தியாவின் வாகன விற்பனை, கடும் சரிவை சந்தித்து வருகிறது.
பயணியர் மற்றும் கனரக வாகனங்களின் விற்பனை சரிந்து வருகிறது.
நுகர்வோரின் வாங்கும் திறன் குறைந்து, பணவீக்கம் அதிகரித்து,
பொருளாதார மந்தம் ஏற்படக்கூடும் என்ற நிலை தற்போது உள்ளது.
மேலும்,
கடந்த வாரம் வெளியான, நாட்டின் தொழில் துறை உற்பத்தி குறியீடு, 21
மாதங்களுக்குப் பின், முதல் முறையாக சரிவைச் சந்தித்துள்ளது. இது,
நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்த சூழலில் போகிறது என்பதற்கான
குறியீடாகும்.கடந்த மார்ச் மாதத்தின் தொழில் துறை வளர்ச்சி குறியீடு,
0.1 சதவீதம் சரிந்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே
மாதத்தில், 5.3 சதவீதம் உயர்ந்திருந்தது என்பது
குறிப்பிடத்தக்கது.
கடந்த
சில மாதங்களாக, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, உயர்ந்து
வந்தது. ஆனால், கடந்த வாரம், பங்குச் சந்தைகள் சரிவு மற்றும்
அமெரிக்க நாணய மதிப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, இந்திய ரூபாயின் மதிப்பு, 1 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது.இந்த
வாரத்தைப் பொறுத்தவரை, முக்கிய பொருளாதார காரணிகள் சில வெளிவர
உள்ளன. இன்று, ஏப்ரல் மாதத்தின் சில்லரை விலை பணவீக்க விகிதம் வெளிவர
உள்ளது. நாளை, மொத்த விலை பணவீக்க விகிதம் வருகிறது. புதனன்று,
இந்தியாவின் வர்த்தகம் தொடர்பான பொருளாதார காரணி வெளிவர உள்ளது.
மேலும்,
இந்த வாரம் சில முன்னணி நிறுவனங்களின் காலாண்டு நிதி அறிக்கைகளும்
வர உள்ளன. குறிப்பாக, ‘ஐ.டி.சி., பஜாஜ் பைனான்ஸ், டாக்டர் ரெட்டி லேப்,
ஐ.ஓ.சி., – யு.பி.எல்., ஹிண்டால்கோ ஹவுசிங் டெவலப்மென்ட் பைனான்ஸ்
கார்ப்பரேஷன்’ போன்ற நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள்
வருகின்றன.இந்த வாரத்தைப் பொறுத்தவரை, நிப்டி சப்போர்ட், 11,210
மற்றும் 11,160; ரெசிஸ்டென்ஸ் 11,400.
முருகேஷ் குமார்
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|