பதிவு செய்த நாள்
04 ஜூன்2019
23:47
புதுடில்லி:ரிசர்வ் வங்கியின், நிதிக் கொள்கை குழு கூட்டத்தின் முடிவுகள் நாளை அறிவிக்கப்பட உள்ளன.
ரிசர்வ் வங்கியின் கவர்னர், சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான, ’ரெப்போ’ வட்டி குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பிலும் ஏற்பட்டுள்ளது.
கடந்த, 2018 ஏப்ரலில், ‘ரெப்போ’ வட்டி, 6 சதவீதமாக இருந்தது. அதன் பின், இரு முறை, தலா, 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டு, 6.5 சதவீதமாக அதிகரித்தது.ரிசர்வ் வங்கி கவர்னராக, சக்திகாந்த தாஸ், கடந்த ஆண்டு, டிசம்பரில் பொறுப்பேற்றார். இந்தாண்டு பிப்ரவரியில், அவர் தலைமையில், முதன் முறையாக, நிதிக் கொள்கை குழு கூட்டம் நடைபெற்றது. அதில், ‘ரெப்போ’ வட்டி, 0.25 சதவீதம் குறைக்கப்பட்டது. அடுத்து, ஏப்ரல் மாதத்தில், மீண்டும், 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு, 6.25 சதவீதத்திலிருந்து, 6 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது.
ஜூலை 5ல், முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என்பதால், வட்டிவிகிதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்கிறார்கள். சில நிபுணர்கள், 0.25 முதல் 0.50 சதவீதம் வரை குறைக்க வாய்ப்பு இருக்கிறது, என்கிறார்கள்.இன்னும் சிலர், வழக்கத்துக்கு மாறாக, இருக்கும் நிலைக்கேற்ப, 0.35 சதவீதம் அளவுக்கு, முதன் முறையாக வட்டி குறைக்கப்படவும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
புளூம்பெர்க் நிறுவனம், 34 பொருளாதார நிபுணர்களிடம் கருத்து கேட்டதில், 23 பேர்கள் வட்டி விகிதம், 5.75 சதவீதமாக மாற வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.பேங்க் ஆப் அமெரிக்கா மெரில்லிஞ்ச் நிறுவனத்தின் பொருளாதார நிபுணர், இந்திரனில் சென் குப்தா, இம்முறை வழக்கபடி இல்லாமல், 0.35 சதவீதம் வட்டி குறைப்புக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதத்தில், வாஷிங்டனில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில், சக்திகாந்த தாஸ் பேசும்போது, 0.25 சதவீதம், என வட்டியை நிர்ணயிக்காமல், இருக்கும் நிலைக்கேற்ப, 10 சதவீதம், 20 சதவீதம் என மாற்றிக்கொள்வது நல்லது என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, ’வட்டி குறைப்பின் பலன் மக்களுக்கு சேர்வதில்லை. ரிசர்வ் வங்கி வட்டியை குறைத்தாலும், வங்கிகள் வட்டியை குறைப்பதில்லை. இதனால் ரிசர்வ் வங்கியின் நோக்கம் நிறைவேறாமல் போய்விடுகிறது’ என்ற குற்றச்சாட்டும் பலமாக இருக்கிறது.
வட்டி குறைப்பினால் வீட்டுக்கடன் உள்ளிட்ட கடன்களை வாங்குபவர் கள் பயன் பெறுவார்கள். நிறுவனங்களும் புத்தெழுச்சி பெறும். வேலைவாய்ப்புகளும் பெருகும். ஆனால் வங்கிகள் வட்டியை குறைக்காவிட்டால், பெரிய பலன் எதுவும் இருக்காது.
ராகேஷ் யாதவ், நிர்வாக இயக்குனர், அந்திரிக்ஷ் குழுமம்
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|