பதிவு செய்த நாள்
12 ஜூலை2019
23:32
புதுடில்லி:ஜூன் மாதத்தில், நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், 3.18 சதவீதமாக அதிகரித்துள்ளது. உணவு விலை அதிகரித்ததன் காரணமாக, கடந்த மே மாதத்தை விட, சில்லரை விலை பணவீக்கம் சிறிதளவு அதிகரித்துள்ளது. குறிப்பாக, மதிப்பீட்டு மாதத்தில், இறைச்சி, முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விலை அதிகரித்திருந்தது.
மே மாதத்தில், சில்லரை பணவீக்கம், 3.05 சதவீதமாக இருந்தது. இதுவே, கடந்த ஏப்ரலில், அதற்கு முந்தைய ஆறு மாதங்களில் இல்லாத வகையில், 2.92 சதவீதமாக அதிகரித்து இருந்தது.மார்ச் மாதத்தில், இது, 2.86 சதவீதமாக இருந்தது.இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்தே, தொடர்ந்து, சில்லரை விலை பணவீக்கம் அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து, மத்திய புள்ளியியல் அலுவலகம், மேலும் தெரிவித்துள்ளதாவது:உணவு பணவீக்கம் மதிப்பீட்டு மாதத்தில், அதற்கு முந்தைய மாதமான, மே மாதத்தில் இருந்ததை விட, 1.83 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 2.17 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுவே, ஜூன் மாத சில்லரை விலை பணவீக்க அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
புரதச் சத்து அதிகம் கொண்ட உணவுகளான, முட்டை, இறைச்சி, மீன் உள்ளிட்டவற்றின் விலை, மே மாதத்தை விட ஜூன் மாதத்தில் அதிகரித்திருந்தது.இறைச்சி, முட்டை உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்திருந்தாலும், பழங்கள் மற்றும் காய்கறிகள் விலை அந்த அளவுக்கு அதிகரிக்கவில்லை.சில்லரை விலை பணவீக்கத்தின் அடிப்படையில் தான், ரிசர்வ் வங்கி, அதன் நிதிக் கொள்கையை உருவாக்குகிறது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூடி, அதன் நிதிக் கொள்கையை அறிவிக்கிறது.
சில்லரை விலை பணவீக்க அடிப்படையில், வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான, ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை, ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கிறது.அதுபோல, வங்கிகளிடம் இருந்து, ரிசர்வ் வங்கி பெறும், குறுகிய கால கடனுக்கான, ‘ரிவர்ஸ் ரெப்போ’ வட்டி விகிதமும் நிர்ணயிக்கப்படுகிறது.
தொழில் துறை உற்பத்தி சரிவு
நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, மே மாதத்தில், 3.1 சதவீதமாக, சரிவை சந்தித்துள்ளது. இந்த சரிவுக்கு, சுரங்க துறை மற்றும் தயாரிப்பு துறையில் ஏற்பட்ட மந்த நிலையே காரணம்.தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஆண்டு, மே மாதத்தில், 3.8 சதவீதமாக இருந்தது. நடப்பாண்டு, ஏப்ரலில், 4.3 சதவீதமாக இருந்தது.சுரங்க துறையில், மே மாதத்தில், தொழில் துறை உற்பத்தி, 3.2 சதவீதமாக உள்ளது.
இது, கடந்த, மே மாதத்தில், 5.8 சதவீதமாக அதிகரித்திருந்தது.இதேபோல், தயாரிப்பு துறையில், கடந்த ஆண்டு, மே மாதம், 3.6 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பாண்டு, மே மாதத்தில், 2.5 சதவீதமாக பின்னடைவை சந்தித்துள்ளது.இருப்பினும், மின்சார உற்பத்தி, 7.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, மே மாதத்தில், இது, 4.2 சதவீதமாக குறைந்து இருந்தது.ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட, 23 தொழில் துறைகளில், 13 துறைகளின் உற்பத்தி அதிகரித்துள்ளது என, மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|