பதிவு செய்த நாள்
29 ஜூலை2019
07:17
நிதித்துறைச் செயலர், சுபாஷ் சந்திர கார்க், மின்சார துறைக்கு மாற்றப்பட்ட விஷயம், தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
இவரது மாற்றத்துக்குப் பின்னே சொல்லப்படும் காரணங்கள் தான் முக்கியமானவை. இந்த ஆண்டுக்கான, மத்திய பட்ஜெட் சமர்ப்பித்த போது, நிர்மலா சீதாராமன் ஒரு திட்டத்தைத் தெரிவித்தார். நம் உள்நாட்டு வளர்ச்சிப் பணிகளுக்குத் தேவைப்படும், 7 லட்சம் கோடி மூலதனத்தை, வெளிநாடுகளில், அன்னிய நாட்டு கரன்சிகளில், கடன் பத்திரங்கள் வெளியிட்டு, நிதி திரட்டப்படும் என்று சொன்னார்.
முன்னாள் ஆர்.பி.ஐ., கவர்னர்கள், நிதித்துறை நிபுணர்கள் இந்தத் திட்டத்தைக் கடுமையாக விமர்சித்தனர். இந்த கடன் பத்திர ஆலோசனை மட்டுமல்ல, பட்ஜெட்டையே உருவாக்கியவர்களில் முக்கியமானவர், சுபாஷ். அவர், அரசாங்கத்துக்கு தவறாக வழிகாட்டிவிட்டார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. அதனால் தான், தற்போது மாற்றப்பட்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.இந்தக் கடன் பத்திரம் அவ்வளவு பெரிய பிரச்னைக்உரியதா?ஆமாம். நாம் இதுநாள் வரை, நம் மூலதனத்துக்கு உள்நாட்டிலேயே கடன் பத்திரங்கள் வெளியிட்டு, நிதி திரட்டியிருக்கிறோம். கடைசியாக, வெளிநாட்டு கரன்சிகளில், கடன் பத்திரங்கள் வெளியிட்டது, 1991 மன்மோகன் சிங் காலத்தில் தான்.கடன் பத்திரங்கள், பொதுவாக, 10 ஆண்டு முதிர்வு காலத்தில் வெளியிடப்படும்.
ஒவ்வொரு ஆண்டும், குறிப்பிட்ட சதவீதம் வட்டி வழங்கப்படும். பத்தாண்டுகளின் முடிவில், முதலீட்டுத் தொகை திரும்ப வழங்கப்படும். இதை, அரசு வெளியிட, பெரிய வங்கிகளும் மியூச்சுவல் பண்டு நிறுவனங்களும் வாங்கிக் கொள்ளும். நம்மைப் போன்ற சாதாரணர்கள் நேரடியாக இதில் முதலீடு செய்ய முடியாது.இது, அத்தனையும் இந்திய ரூபாயில் வெளியிடப்படும் கடன் பத்திரங்கள். நிர்மலா சீதாராமன் சொன்னது, வெளிநாட்டு கரன்சியில் கடன் பத்திரங்கள்.
ஜப்பானிய, ‘யென்’ மற்றும் ஐரோப்பாவின், ‘யூரோ’ ஆகிய வற்றை, இந்தியா தன் விருப்பமாகத் தெரிவித்து இருந்தாலும், பெரும் புழக்கத்தில் உள்ளது டாலர் பத்திரங்கள் தான். இங்கே தான் பிரச்னை ஆரம்பிக்கிறது.முதலில் நாம் ஏன் டாலரில் கடன் பத்திரங்கள் வெளியிட வேண்டும்? ஏற்கனவே நம்மிடம், 426.4 பில்லியன் அளவுக்கு டாலர் கையிருப்பு இருக்கும்போது, வெறும், 7.1 லட்சம் கோடி ரூபாய்க்காக, அதாவது, 10 பில்லியன் டாலருக்காக யாரேனும் கடன் கேட்பாரா? இருப்பதில் இருந்து எடுத்துச் செலவழிப்பது தானே புத்திசாலித்தனம்?டாலர் இன்றைக்கு இருக்கும் விலையில் தான், நாளையும் இருக்குமா? உதாரணமாக, 2008 – -10 காலகட்டத்தில், டாலருக்கு இணையான, இந்திய ரூபாயின் மதிப்பு, 37 முதல், 40 வரை இருந்தது.
தற்போது இந்திய ரூபாயின் மதிப்பு, 68.86.அன்றைக்கு இதேபோல் ஒரு கடன் பத்திரம் வெளியிடப்பட்டு இருக்குமானால், இன்றைக்கு எவ்வளவு தொகை கூடுதலாக கொடுத்திருப்போம் என்று யோசித்துப் பாருங்கள்.அடுத்த, 10 ஆண்டுகளில், ரூபாயின் மதிப்பு இப்படியே இருக்கப் போவதில்லை. 80 முதல், 90 வரை கூட போக வாய்ப்புண்டு. ஏற்கனவே, நம் நிதிப் பற்றாக்குறை, 5.8 சதவீதத்தைத் தொட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம், போதுமான ஏற்றுமதிகள் இல்லாதது தான். ஏற்றுமதி பெருக வேண்டுமென்றால், ரூபாயின் மதிப்பைக் குறைத்து ஆகவேண்டும்.
அந்தச் சூழல் வருமானால், வெளிநாட்டு கரன்சியில் வெளியிட்ட கடன் பத்திரங்களின் நிலை என்ன?ரூபாயில் கடன் பத்திரங்கள் வெளியிட்டால், அதன் ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் பாதிப்பு, வாங்குகிறவர்களுக்குத்தான். டாலர் கடன் பத்திரங்கள் விஷயத்தில், ரூபாயின் மதிப்பு விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது நம் கடமையாகி விடும். ஒவ்வொரு முறையும் டாலருக்கு இணையான ரூபாயின் மதிப்பைக் காப்பாற்றுவதற்கு முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.நம் நாட்டில், ஜி.டி.பி.,யில் சரிவுகள் ஏற்படுமானால், டாலர் கடன் பத்திரங்களை வாங்கியவர்கள், உடனடியாக அதை விற்பனை செய்துவிட முனைவர்.
அது மேலும், நம் நாட்டின் மீது கடும் நிதி அழுத்தத்தை அதிகப்படுத்தும். ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர், ஒய்.வி. ரெட்டி சொன்னது இன்னும் முக்கியமானது. டாலர் கடன் பத்திரங்களை வெளியிடுவது போதை போன்றது. வெளிநாட்டுப் பணத்தில் சுவை கண்டுவிட்டால், தொடர்ச்சியாக இதேபோன்ற கடன் பத்திரங்களை வெளியிட்டுக்கொண்டே இருப்போம். நிதிக் கட்டுப்பாடோ, சிக்கனமோ ஏற்படவே ஏற்படாது.மேலும், இந்தியாவில் நிதி நிலைமை மோசமாக இருக்குமானால், அப்போது ரூபாய் கடன் பத்திரங்களை தலைமுழுகிவிடலாம்.
டாலர் கடன் பத்திரங்கள் என்றால், முதலீடு செய்த நாடுகள், மென்னியைப் பிடித்துவிடும். அசலையும் வட்டியையும் திருப்பிக் கொடுத்தே ஆகவேண்டும்.இப்படித்தான் தற்போது அர்ஜென்டினாவும் மெக்சிகோவும் தவித்துக்கொண்டு இருக்கின்றன. தங்கள் கடன்களைத் திருப்பிச் செலுத்த கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது அர்ஜென்டினா. உண்மையில், வெளிநாட்டு கரன்சியில் கடன் வாங்குவது என்பது, நம் கழுத்தை நாமே போய் கசாப்புக் கடைக்காரன் பலகையில் வைப்பது போன்றது தான். இந்த யோசனையையே மொத்தமாக கைகழுவி விடுவதுதான், இந்தியாவின் இறையாண்மைக்கும், ஜனநாயகத்துக்கும் உகந்தது.ஆர்.வெங்கடேஷ்பத்திரிகையாளர்Pattamvenkatesh@gmail.com
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|