பதிவு செய்த நாள்
31 ஜூலை2019
05:40
புதுடில்லி: ‘கடன் தருவதாகக் கூறி, தொல்லை கொடுக்கும் தொலைபேசி அழைப்புகளை தடை செய்வது சரியாக இருக்காது’ என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
சமீப காலமாக, தொலைபேசி வாயிலாக, கடன் தருவதாக, வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் அழைப்பு விடுத்து வருகின்றன. இந்நிலையில், இத்தகைய அழைப்புகளை தடை செய்வது குறித்த, ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி, தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ், சுபாஷ் அகர்வால் என்பவர் கேள்விகள் எழுப்பியிருந்தார்.
நிராகரிப்பு:
இதற்கு பதிலளித்த ரிசர்வ் வங்கி, இவ்வாறு வரும் தொலைபேசி அழைப்புகளை தடை செய்வது என்பது சரியாக இருக்காது என, தெரிவித்துள்ளது. தொலைபேசி வாயிலாக கடன் வழங்கும், இத்தகைய நிறுவனங்களின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை, ரிசர்வ் வங்கி ஏற்படுத்தி வருகிறது. ஆனால், இவற்றை தடை செய்வது என்பது, தர்க்க ரீதியாக சரியானதாக இருக்காது. கடன் பெற விரும்புபவர், கடன் பெறுவதற்கு முன், அது குறித்த விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும் என, ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது.
தொலைபேசி அழைப்புகள் குறித்து மட்டுமல்லாமல், இத்தகைய நிறுவனங்களின் வட்டி விகிதங்களை சரி செய்வது, அவற்றுக்கு வங்கிகள் நிதியளிப்பதை தடை செய்வது உள்ளிட்டவை குறித்தும் சில பரிந்துரைகளை வழங்கி இருந்தார், சுபாஷ் அகர்வால்.ஆனால், ரிசர்வ் வங்கி, அவருடைய பரிந்துரைகளையும் நிராகரித்து விட்டது.
வியாபார உத்தி:
முன்தேதியிட்ட காசோலை அல்லது வங்கியின், ‘ஆட்டோ எலெக்ட்ரானிக் கிளியரிங்’ முறையின் அடிப்படையில், இந்த வங்கி சாரா நிதி நிறுவனங்கள், மொபைல் போன் மூலமாக, பாதுகாப்பற்ற கடனுக்கான அனுமதியை வழங்குகின்றன.ஏதேனும் ஒரு காரணத்தால், கடன் பெற்றவர்கள், கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் போனால், அவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என, அகர்வால் தன் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்தார். மேலும், இத்தகைய கடன் குறித்த நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் முறைப்படுத்தப்பட வேண்டும் எனவும், இதன் மூலம், கடனை திருப்பியளிக்க முடியாமல் போகும் கடன்தாரர்கள், தற்கொலை செய்து கொள்வது தடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
இது குறித்து, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாவது: மொபைல் போன் மூலம் கடன் வழங்குவதாக தெரிவிப்பது என்பது, அந்நிறுவனங்களின் மார்க்கெட்டிங் மற்றும் வியாபார உத்தியாகும்.இதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு பலதரப்பட்ட திட்டங்கள் குறித்தும், அதன் சிறப்புகள் குறித்தும் அறிய வாய்ப்பு ஏற்படுகிறது. ஆனால், கடன் வாங்கச் சொல்லி இந்த நிறுவனங்கள் வற்புறுத்தினால், அது விவாதத்துக்கு உரியது.
சாத்தியமில்லை:
பாதுகாப்பற்ற கடன்கள் என்பதை பொறுத்தவரை, இந்த நிதி நிறுவனங்கள் மருத்துவ அவசரத்துக்கும், கல்வி மற்றும் திருமணத்துக்கும் கடன் வழங்குகின்றன. மற்ற கடன்கள், அளவில் மிகவும் சிறியதே.கடன் வாங்குபவர்களுக்கு, கடன்களை பெறுவதற்கான பாதுகாப்பை எப்போதும் வழங்குவது என்பது சாத்தியமில்லாதது. பாதுகாப்பாற்ற கடன்களுக்கான உண்மையான தேவையும் இருக்கவே செய்கிறது. வங்கி சாரா நிதி நிறுவனங்கள், பாதுகாப்பற்ற கடன்களை வழங்கும்போது, அவர்களின் எல்லையையும், கடன் பெறுவோருடைய தகுதியையும் அறிந்து, அதற்கேற்ப கடன் வழங்க வேண்டும்.இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|