பதிவு செய்த நாள்
01 ஆக2019
23:54
புதுடில்லி:நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலை மாதத்தில் அதிகரித்துள்ளது. புதிய ஆர்டர்கள், அதிக உற்பத்தி ஆகியவை காரணமாக இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த, ’ஐ.எச்.எஸ்., மார்கிட்’ எனும் நிறுவனம், உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி என பல பிரிவுகளைச் சேர்ந்த நிறுவனங்களின், ஜூலை மாத தயாரிப்பு நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தாண்டு, ஜூலை மாதத்தில், தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி அடிப்படையிலான, ‘பி.எம்.ஐ.,’ குறியீடு, 52.5 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஜூன் மாதத்தில், 52.1 புள்ளிகளாக இருந்தது.
வேகம்
இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியைக் குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவைக் குறிக்கும்.ஜூலை மாதத்தில், இக்குறியீடு, 52.5 புள்ளிகளுக்கு உயர்ந்ததன் மூலம், இதற்கு முந்தைய, ஜூன் மாதத்தை விட சிறியமுன்னேற்றத்தை உணர்த்தியுள்ளது.
கடந்த, 24 மாதங்களாகத் தொடர்ந்து, பி.எம்.ஐ., குறியீடு, 50 புள்ளிகளுக்கு மேலாக இருந்து வருவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.நடப்பு நிதியாண்டின், முதல் காலாண்டில், வளர்ச்சி மந்தமாக இருந்தது. ஆனால், இரண்டாவது காலாண்டின் துவக்க மாதமான ஜூலையில், வளர்ச்சி, வேகம் காட்ட துவங்கி இருக்கிறது.புதிய வேலைகளுக்கான வரத்து தொடர்ச்சியாக அதிகரித்து வந்ததன் காரணமாக, உற்பத்தி அதிகரித்துள்ளது என்பது, ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், உள்நாட்டு சந்தை விற்பனை, ஜூலை மாத வளர்ச்சிக்கு தேவையான உத்வேகத்தை அளித்துள்ளது. உலக வர்த்தக நிலவரம் மந்தமாக இருந்த காரணத்தால், 2018 ஏப்ரல் முதலே, வெளிநாட்டு சந்தை விற்பனை, அதிக வளர்ச்சி பெறவில்லை.
வட்டி
விலைகளின் அடிப்படையில், ஒட்டுமொத்த பணவீக்க விகிதம், மூன்று மாத குறைந்த அளவிலும், அதன் நீண்ட கால சராசரியை விட குறைவாகவும் உள்ளது.ஜூலை மாத, பி.எம்.ஐ., ஆய்வின்படி, உள்ளீட்டு செலவுகள் மற்றும் வெளியீட்டு கட்டணங்களில் ஒப்பீட்டளவில் மிகக் குறைவான அதிகரிப்பே காணப்பட்டது.
இதன்படி பார்த்தால், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் முயற்சியில் ஒருபகுதியாக, ரிசர்வ் வங்கி, முக்கிய வட்டி விகிதத்தை மேலும் குறைக்கக்கூடும்.ரிசர்வ் வங்கியின், அடுத்த நிதிக் கொள்கை குழு கூட்டம், 5ம் தேதியன்று துவங்குகிறது.ஜூன் மாதத்தில் நடைபெற்ற, நிதிக் கொள்கை கூட்டத்தில், ரிசர்வ் வங்கி, அதன் வட்டிவிகிதத்தை, 0.25 சதவீதம் குறைத்தது.
ரிசர்வ் வங்கி, இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக, 0.25 சதவீதம் அளவுக்கு வட்டியை குறைத்துள்ளது. இதன்படி மொத்தம், 0.75 சதவீதம் அளவுக்கு வட்டி விகிதம் குறைக்கப் பட்டுள்ளது.
ஜூலை மாதத்தில், தொழிற்சாலை ஆர்டர்கள், உற்பத்தி மற்றும் வேலை வாய்ப்புக்கான நடவடிக்கைகளில் முன்னேற்றம் காணப்பட்டது. இருப்பினும் மதிப்பீட்டு காலத்தில் விரிவாக்க விகிதங்கள் குறைவாகவே இருந்தன.
பாலியானா டி லிமா,
தலைமை பொருளாதார வல்லுனர்,
ஐ.எச்.எஸ்., மார்கிட்
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|