பதிவு செய்த நாள்
22 ஆக2019
06:52
புதுடில்லி: நாட்டின், ஜி.டி.பி., எனும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, நடப்பு ஆண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில்,5.7 சதவீதமாக இருக்கும் என, நோமுரா ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதிச் சேவைகள் நிறுவனமான, நோமுராவின் ஆய்வறிக்கையில், மேலும் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேலும் மந்தமடைந்து, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டான, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 5.7 சதவீதமாக குறையும்.
அறிகுறிகள்:
நுகர்வு குறைவும், முதலீடுகள் குறைந்துபோனதும், சேவை துறைகளின் குறைவான செயல்பாடும் இந்நிலைக்கு காரணமாக அமைந்துள்ளன.முதல் காலாண்டில், அதாவது, ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், பொருளாதாரத்தில் வளர்ச்சி குறைந்தாலும், அடுத்த காலாண்டில், அதாவது, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் சிறிது முன்னேற்றம் காணப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. முதல் காலாண்டில், நுகர்வு கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதும், முதலீடுகள் குறைந்துபோனதும், சேவை துறைகளின் செயல்பாடுகள் குறைவும், பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.
இருப்பினும், சில குறியீடுகள், இந்நிலைமையிலிருந்து மீள்வதற்கான ஆரம்ப அறிகுறிகளை காட்டுகின்றன.ஜூலை வரையிலான தரவுகள் அடிப்படையில், 53 சதவீத குறியீடுகள், முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளன. இதுவே, ஜூன் மாதம் வரையிலான காலத்தில், 31 சதவீதமாக குறைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. நோமுராவின், சி.எல்.ஐ., எனும் குறியீடு, முதல் காலாண்டில், 99.8 என்று இருந்த நிலையில், இரண்டாவது காலாண்டில், 99.9 என, அதிகரித்து உள்ளது. இதற்கு தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி அதிகரிப்பு, வெளிநாட்டு பயணியர் வருகை அதிகரிப்பு, பங்குச் சந்தை வளர்ச்சி மற்றும் ரிசர்வ் வங்கியின் வட்டிவிகித குறைப்பு ஆகியவை காரணமாக அமைந்துள்ளன.
கடந்த நிதியாண்டில், ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 5.8 சதவீதமாக இருந்த நிலையில், முதலாவது காலாண்டில், வளர்ச்சி, 5.7 சதவீதமாக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே, இதற்கு அடுத்த காலாண்டில், 6.4 சதவீதமாகவும், அதற்கு அடுத்த காலாண்டில், 6.7 சதவீதமாகவும் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எதிர்பார்ப்பு:
நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கடந்த நிதியாண்டில், 6.8 சதவீதமாக குறைந்தது. இது 2014 – 15ம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட அதிக சரிவாகும். இந்நிலையில், பல்வேறு காரணங்களால், பொருளாதார வளர்ச்சி மேலும் அதிக பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. மேலும், நுகர்வோர் நம்பிக்கை சரிவு, அன்னிய முதலீடு குறைவு, சர்வதேச வர்த்தகம் மற்றும் வர்த்தக போர் உள்ளிட்ட காரணங்களாலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து, பொருளாதார நிலைமையை சரிசெய்யும் விதமாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு துறைகளின் பிரதிநிதிகளையும், அதிகாரிகளையும், தொழிலதிபர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
துறையினரும் நிதி உதவி, வரிச் சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். இதையடுத்து, பல்வேறு ஊக்க சலுகைகள் வழங்கி, பொருளாதார சரிவை, அரசு நிலைப்படுத்தும் என்பதால், அடுத்து வரும் காலாண்டுகளில், வளர்ச்சி திரும்பும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், பொருளாதாரத்தில் வளர்ச்சி குறைந்தாலும், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், சிறிது முன்னேற்றம் காணப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|