பதிவு செய்த நாள்
05 நவ2019
03:24
புதுடில்லி,:தொடர்ந்து இரண்டாவது மாதமாக, கடந்த அக்டோபரிலும் அன்னிய நிறுவன முதலீடு அதிகரித்து உள்ளது.கடந்த அக்டோபரில், இந்திய மூலதன சந்தைகளில், அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள், 16 ஆயிரத்து, 464 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர்.
இதையடுத்து, அன்னிய நிறுவன முதலீடு, இரண்டாவது மாதமாக, தொடர்ந்து அதிகரித்துள்ளது.சமீபத்திய முதலீட்டு தரவுகளின்படி, அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள், பங்குச் சந்தைகளில், 12 ஆயிரத்து, 475 கோடி ரூபாயை, அக்டோபர் மாதத்தில் முதலீடு செய்துள்ளனர்.மேலும், 3,989 கோடி ரூபாயை, கடன் சந்தையிலும் முதலீடு செய்துள்ளனர். இதையடுத்து, மொத்த முதலீடு, 16 ஆயிரத்து, 464 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.
அரசு நடவடிக்கை
இதுவே, செப்டம்பர் மாதத்தில் அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள், பங்கு மற்றும் கடன் சந்தைகளில் மொத்தம், 6,558 கோடி ரூபாயை முதலீடு செய்துஉள்ளனர்.முதலீடுகள் அதிகரித்து வருவது குறித்து, ’மார்னிங்ஸ்டார் இன்வெஸ்ட்மென்ட் அட்வைசர் இந்தியா’ நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவு மேலாளர்,
ஹிமன்ஷு ஸ்ரீவஸ்த்தவா கூறியதாவது:பொருளாதாரத்தை அதிகரிப்பதற்கு தேவைப்படும் ஊக்க நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. பெரும்பணக்காரர்களுக்கான கூடுதல் கட்டணத்தை நீக்குவது, பெருநிறுவனங்களுக்கான வரியை குறைப்பது, கார்ப்பரேட் வரியை குறைப்பது, வங்கிகளுக்கு மறுமூலதனம் வழங்குவது என, பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. இதன் காரணமாக, பொருளாதாரம் குறித்த நம்பிக்கை மேம்பட்டுள்ளது.
மேலும், பங்கு முதலீட்டின் மீதான தற்போதைய வரிவிதிப்பு முறையை மாற்று வதற்கான மறுஆய்வில் அரசு ஈடுபட்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.இவை அனைத்தும் நம்பிக்கையூட்டும் விதமாக இருக்கின்றன. அரசின் இந்த நடவடிக்கைகள் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தாது. இருப்பினும், பொருளாதாரம் வளர்வதற்கான அரசின் முயற்சிகள், சந்தை மீதான நம்பிக்கையை அதிகரிக்க செய்தது. அது வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்த்தது. அதனால் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மேலும் அதிகரிக்கும்எவ்வாறாகினும், உள்நாட்டு பொருளாதாரத்தில் மந்த நிலை தெளிவாக தெரிகிறது. அதனால், வெளிநாட்டு முதலீடுகள் குறித்து இப்போதே கொண்டாட முடியாது; இன்னும் நாட்கள் உள்ளன. இது ஆரம்ப நாட்களே.இவ்வாறு அவர் கூறினார்.அன்னிய நிறுவன முதலீடுகள் வரும் நாட்களில் எப்படி இருக்கக்கூடும் என்பது குறித்து,
குரோவ் நிறுவனத்தின் இணை நிறுவனர், ஹர்ஷ் ஜெயின் கூறியதாவது:கடந்த சில மாதங்களாக, ஏற்றமும் இறக்கமுமாக இருந்து வந்த நிலையில், தற்போது சில வாரங்களாக, முதலீடுகள் வரத்து சீராகி வருகிறது.பொருளாதாரத்தில் எதிர்மறையாக எதுவும் நடக்காமல் இருக்கும் வரை, இந்த போக்கு மேலும் அதிகரித்து வரும் என, கருதலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|