பதிவு செய்த நாள்
30 டிச2019
05:34
புத்தாண்டு ஆரம்பிக்கப் போகிறது. இந்திய தொழில்களும், பொருளாதாரமும், வேலைவாய்ப்புகளும் எப்படிப்பட்ட பாதையில் பயணம் செய்யப் போகின்றன? ஒவ்வொரு புது ஆண்டும், புதிய எதிர்பார்ப்புகளோடு தொடங்கும். 2019ம் ஆண்டு தொடங்கியபோது கூட, மிதமான உற்சாகம் தெரிந்தது.
சிறு, குறு, நடுத்தரத் தொழிலக முதலாளிகள் முதற்கொண்டு, அரசுப் பணியாளர்கள், முதியவர்கள், தனியார் துறை ஊழியர்கள், ஏழை, எளியவர்கள் வரை அனைவரும் ஒருவித நம்பிக்கையோடு இருந்தனர்.ஆனால், அடுத்து வந்த ஆறு மாத காலத்தில், தொடர்ச்சியாக ஒவ்வொரு துறையிலும் சரிவு தென்படத் தொடங்கியது. டிசம்பருக்குள், பல துறைகள் ஒருவிதமான நிலையை அடைந்துவிட்டன.
அதைத்தான் 4.5 சதவீதம் என்ற, ஜி.டி.பி., எண் தெரிவித்தது.உடனடியாக, மத்திய நிதி அமைச்சகம், பல்வேறு சீர்திருத்த மற்றும் மாற்று நடவடிக்கைகளை முன்வைத்தது. இந்தப் பின்னணியில் இருந்துதான், 2020ம் ஆண்டை அணுக வேண்டும்.வலிமை மேம்பட்டுள்ளதுமுதலில் சில அடிப்படையான விஷயங்கள்:தற்போது ஏற்பட்டிருக்கும் தேக்கநிலை என்பது, 1991ல் ஏற்பட்டதைப் போன்றது அல்ல. அதாவது, அந்நிய செலாவணி சிக்கல் இல்லை. கையில், 3.24 லட்சம் கோடி ரூபாய் (455 பில்லியன் டாலர்) உள்ளது.அந்நிய நேரடி முதலீடும் கடந்த ஆண்டை விட அதிகமாகவே வந்து உள்ளது. ஏப்ரல் முதல் அக்டோபர் வரையான காலகட்டத்தில், 2,386 கோடி டாலர் வந்துள்ளது.
சென்ற ஆண்டு இதே காலக்கட்டத்தில் வந்தது, 904 கோடி டாலர்களே.நடப்பாண்டின் முதல் ஆறு மாதங்களில், அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேறியபோது, உள்நாட்டு முதலீட்டாளர்களே இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்துள்ளனர். அவர்களுடைய வலிமை மேம்பட்டுஉள்ளது.எல்லாவற்றுக்கும் மேல், சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலை மிகப்பெரிய அளவுக்கு உயராமல் உள்ளது. அதனாலும், நமக்கு, 2019ல் பெரும் பிரச்னைகள் ஏற்படவில்லை.இவையெல்லாம் ஒரு விஷயத்தைத் தான் சொல்கின்றன. அதாவது, நாம் வெளிநாடுகளிடம் கையேந்தி நிற்க வேண்டியதில்லை. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சரிவு நம்மை பாதிக்காமல் இல்லை. ஆனால், அதற்கான பரிகாரங்களை வெளிநாடுகளிடம் உதவி பெற்றுத்தான் தீர்க்க வேண்டும் என்ற அவசியமில்லை.பொதுவானவைஇன்னொன்று, நாம் மட்டும்தான் தேக்கநிலையைச் சந்தித்துக்கொண்டு இருக்கிறோம் என, அர்த்தமல்ல. 2009ல் 14.2 சதவீதமாக இருந்த சீனப் பொருளாதாரம், 2019ல், 6.2 சதவீதமாகி உள்ளது.நமது சரிவுக்கு சப்பைக்கட்டு கட்டும் விதமாக இதைச் சொல்கிறேன் என, நினைக்கவேண்டாம்.
இரண்டு நாட்டு பொருளாதாரங்களுக்கும் இடையே, மலைக்கும், மடுவுக்கும் இடையே உள்ள வித்தியாசம் உண்டு என்பதை உணர்ந்தே சொல்கிறேன். காரணங்கள் வெவ்வேறானவை என்றாலும், தேக்கமும், சரிவும் பொதுவானவை. ஆக, இதிலிருந்து மீண்டாக வேண்டும். 2020 எப்படி இருக்கும்?ஆங்கில எழுத்தான ‘வி’ வடிவில், திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கை பல பொருளாதார அறிஞர்களுக்கு இல்லை. அடுத்து வரும் இரண்டு காலாண்டுகளிலும் தேக்கம் தொடரக்கூடும். அதன் பின், 2021 நிதியாண்டில், முதல் இரண்டு காலாண்டுகளில், ஒருவித நிதானம் தென்படும்.இதற்குள் வேறு சில பிரச்னைகள் ஏற்பட்டுவிடக் கூடாது. அதாவது, கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவிடக் கூடாது. அது நேர்ந்துவிடுமானால், அதன் தாக்கத்தை இந்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். அல்லது மக்கள் தலைமீது சுமத்திவிட வேண்டும்.அரசாங்கத்தால், இன்றைய நிலையில், வரிகளைக் குறைத்து, செலவுகளை ஏற்றுக்கொள்ள இயலாது. மக்கள் தலைமீதுதான் வந்து விழும். அது, விலையேற்றத்தையும், பணவீக்கத்தையும் அதிகப்படுத்திவிடும்.
இன்னொரு பிரச்னை, மக்கள் இன்னும் கஞ்சர்களாகி விடக் கூடாது. தாராளமாக செலவு செய்து, பொருட்களை வாங்கி, உள்நாட்டு பொருளாதார சுழற்சிக்கு வழிசெய்யவேண்டும். தேக்க காலத்தில் மக்கள், குடும்ப செலவுகளை இழுத்துப் பிடிக்கவே செய்வார்கள். இது நேருமானால், தேக்கம் இன்னும் மோசமாகவே செய்யும்.கடன் வாங்க வரமாட்டேன்இன்னொரு பக்கம், தொழிலக முதலாளிகள், வங்கிகளிடம் கடன் வாங்கவே வரமாட்டேன் என்கிறார்கள். வங்கிகளில் பணம் இருக்கிறது; வாங்குவதற்கு ஆளில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. துணிந்து கடன் வாங்கி, முதலீடு செய்து, தொழிற் சக்கரத்தை சுழலவிட வேண்டிய கடமை தொழிலதிபர்களுக்கு இருக்கிறது.நடப்பு, 2019 கடைசியில், ஒருசில துறைகளில் பொருளாதாரம் துளிர்விடத் தொடங்கியிருப்பதாகச் செய்திகள் வருகின்றன. எதிர்பார்ப்புமீண்டும் வாகனங்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். 45 லட்ச ரூபாய்க்குட்பட்ட சகாய விலை வீடுகள், மற்றும் 75 லட்ச ரூபாய்க்கு உட்பட்ட மத்திய ரக வீடுகளை வாங்குவதில் விருப்பம் ஏற்பட்டுள்ளது.
இவை, 2020ல் மேலும் பல்கிப் பெருகும் என, நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.அரசாங்கம் அமல்படுத்தியிருக்கும் பல்வேறு நிதித் துறை சீர்திருத்த நடவடிக்கைகளும், 2020ல் பலன் தரவேண்டும்.மொத்தத்தில் இவை நடைபெறவேண்டும் என்பதைவிட, இவையெல்லாம் நடைபெற்றுவிடக் கூடாதே என்ற பதற்றம் தான் தற்போது மேலோங்கிஇருக்கிறது. வரும், 2020ல், தினசரி சுபச் செய்திகள் இல்லையென்றாலும் பரவாயில்லை, அசுபச் செய்திகள் வந்துவிடக்கூடாது என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
ஆர்.வெங்கடேஷ், பத்திரிகையாளர், pattamvenkatesh@gmail.com
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|