பதிவு செய்த நாள்
07 மார்2020
23:40
புதுடில்லி:பொதுத் துறை நிறுவனமான, ‘பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்’ நிறுவனத்தில், தன் வசம் உள்ள அனைத்து பங்குகளையும் விற்பனை செய்யும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கி உள்ளது.
மத்திய அரசிடம், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின், 52.98 சதவீத பங்குகள் உள்ளன. தற்போது, இந்த பங்குகள் அனைத்தையும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது அரசு. இதையடுத்து, இந்த பங்குகளை வாங்க விருப்பம் தெரிவிப்பவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை அரசு வரவேற்றுள்ளது.
ஆர்வமுள்ளவர்கள், வரும் மே மாதம், 2ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என, தெரிவிக்கப் பட்டுள்ளது.இதற்கான விண்ணப்பப் படிவங்களை, முதலீடு மற்றும் பொதுச் சொத்துக்கள் நிர்வாகத் துறையிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
* பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில், அரசின் வசம், 114.91 கோடி பங்குகள் உள்ளன. இது, 52.98 சதவீதமாகும்
* இந்த பங்குகளை முழுமையாக வாங்குபவர்களுக்கு, பங்குகளுடன் நிர்வாகக் கட்டுப்பாடும் சேர்த்து வழங்கப்பட உள்ளது
* பாரத் பெட்ரோலியம் வசமுள்ள, நுமலிகார் சுத்திகரிப்பு நிறுவனமான என்.ஆர்.எல்., நிறுவனத்தின், 61.65 சதவீத பங்குகள், இந்த விற்பனையில் பொருந்தாது. என்.ஆர்.எல்., நிறுவனத்தின் பங்குகள், அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் வாயு நிறுவனத்திற்கு விற்கப்படும்
* பாரத் பெட்ரோலியத்தை தனியார்மயமாக்கும் முயற்சியில், இந்நிறுவனத்தின் பங்குகளை கையகப்படுத்த, பிற பொதுத் துறை நிறுவனங்கள் தகுதியற்றவையாகும்
* 1,000 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள, எந்த ஒரு தனியார் நிறுவனமும் இந்த ஏலத்தில் பங்கேற்கலாம். நிறுவனங்களின் கூட்டமைப்புகள் ஏலத்தில் பங்கேற்கலாம். ஆனால், நான்குக்கு மேற்பட்ட நிறுவனங்களின் கூட்டமைப்பு, இந்த ஏலத்தில் பங்கேற்க இயலாது
* கூட்டமைப்பில் மாற்றங்கள் செய்ய விரும்பினால், 45 நாட்களுக்குள் செய்துகொள்ள அனுமதிக்கப்படும். ஆனால், கூட்டமைப்பின் முன்னணி நிறுவனத்தை மாற்ற இயலாது
* பாரத் பெட்ரோலிய பங்குகளை வாங்குபவருக்கு, இந்தியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு திறனில், 14 சதவீதமும்; எரிபொருள் சந்தை பங்கில், நான்கில் ஒரு பங்கும் வழங்கப்படும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தை மதிப்பு
பாரத் பெட்ரோலியத்தின் சந்தை மதிப்பு, 87 ஆயிரத்து, 388 கோடி ரூபாய். இதில், மத்திய அரசு வசம் இருக்கும் பங்கு மதிப்பு, தற்போதைய விலையில், 46 ஆயிரம் கோடி ரூபாய். இந் நிறுவனத்திடம், 15 ஆயிரத்து, 177 பெட்ரோல் நிலையங்கள் உள்ளன. மேலும், 6,011 எல்.பி.ஜி., வினியோக ஏஜென்சிகளும் உள்ளன.நாட்டின் மொத்த பெட்ரோலியப் பொருட்கள் நுகர்வில், 21 சதவீதத்தை பாரத் பெட்ரோலியம் வினியோகித்து வருகிறது. பாரத் பெட்ரோலியம் நான்கு சுத்திகரிப்பு நிலையங்களை இயக்கி வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|