பதிவு செய்த நாள்
10 மார்2020
11:23
கயிறு வாரியம் மூலமாக, தென்னை நார் மற்றும் நார் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வணிகத்துக்கான இலக்கு, ரூ.35 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைய வழிகாட்டுதல்களையும் மத்திய அரசின் கயிறு வாரியம் வழங்கி உதவுகிறது.
இந்தியாவில், தென்னை நார் ஏற்றுமதி வணிகம் அதிகளவு நடக்கிறது. அதில், தமிழகத்தில், பொள்ளாச்சி பகுதியில் இருந்து அதிகளவு ஏற்றுமதி நடப்பதால் பொள்ளாச்சிக்கு, ‘சிறந்த ஏற்றுமதி பொருளாதார நகரம்’ என்ற அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியுள்ளது.வரும், 2025ம் ஆண்டில், தென்னை நார் மற்றும் நார் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வணிக்கத்துக்கான இலக்காக, 35 ஆயிரம் கோடி ரூபாய் நிர்ணயித்துள்ளது.
கயிறு வாரிய உறுப்பினர் கவுதமன் கூறியதாவது:மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கயிறு வாரியம் மூலமாக கடந்த, 10 ஆண்டுகளாக இலக்கு நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த, 2018 – 19ம் ஆண்டில் ஏற்றுமதி, 2,000 கோடி ரூபாய்; உள்நாட்டு வணிகம், 10 ஆயிரம் கோடி ரூபாயாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கினை அடைந்துள்ளோம்.வரும், 2025ம் ஆண்டில் ஏற்றுமதி, 10 ஆயிரம் கோடி ரூபாயாகவும்; உள்நாட்டு வணிகம், 25 ஆயிரம் கோடி என மொத்தம், 35 ஆயிரம் கோடியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப கயிறு பொருட்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மேற்கொள்ள ஊக்கம் அளிக்கும் வகையில், மத்திய கயிறு வாரியம் மூலமாக நடவடிக்கை எடுத்துள்ளது.
உள்நாட்டில் நடக்கும் அனைத்து கண்காட்சிகளிலும் தென்னை நார், நார் சார்ந்த பொருட்களை கண்காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக, அரங்கங்கள் அமைக்க, மத்திய, சிறு, குறு நடுத்தர தொழில் அமைச்சகம் மானியம் வழங்குகிறது. மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க, ஆலப்புழா, பெங்களூரு, தஞ்சாவூர், ராஜமுந்திரி, புவனேஸ்வர் ஆகிய ஐந்து இடங்களிலும் பயிற்சி மையம் உள்ளது.பயிற்சி மையத்தில் பயிற்சி காலத்துக்கு, ஆறாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தங்குமிட வசதியும் உள்ளது.கயிறு வாரியத்தின் உறுப்பினர்களை கொண்டு மூன்று மாதத்துக்கு ஒரு முறை கூட்டம் நடத்தி, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்து இருக்கிறோமா, இல்லையா என மத்திய அமைச்சகத்துக்கு தெரியப்படுத்தப்படும். இதில் உள்ள சிரமங்கள், பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கயிறு வாரியம், சங்கங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து புது பொருட்கள் தயாரிக்க, கூட்டு ஆராய்ச்சி செய்வதற்காக மானியம் வழங்குகிறது. மேலும், புது பொருட்கள் உற்பத்தி செய்வதற்கும், 90 சதவீதம் வரை மானியம் கொடுத்து ஊக்கமளிக்கிறது.மலை சரிவுகள், குளம், குட்டை, நெடுஞ்சாலை சீரமைக்க, பிளாஸ்டிக் ஓவன் ஜியோ டெக்ஸ்டைல்ஸ் பயன்பாடு இருந்தது. மத்திய அமைச்சகம், கயிறு வாரியம் மூலமாக ஆராயச்சி மேற்கொண்டதன் அடிப்படையில், குளம், குட்டை ரோடு போடும் பணி மற்றும் மலை சரிவுகள் சரிவு ஏற்படாமல் இருக்கவும், ‘காயர் ஓவன் ஜியோ டெக்ஸ்டைல்ஸ்’ பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, பல கருத்தரங்கம், விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
நாடு முழுவதும், 30க்கும் மேற்பட்ட ேஷாரூம் ஏற்படுத்தி, கயிறு பொருட்களின் இலக்கை அடைய கயிறு வாரியம் தீவிர முயற்சிகள் எடுத்து வருகிறது. இந்த முயற்சியின் தொடர்ச்சியாக, அடுத்த நான்கு மாதங்களுக்குள் கயிறு வாரியத்தின் மூலமாக, 250க்கும் மேற்பட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்யும் கூட்டுக்குழுமங்கள் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|