பதிவு செய்த நாள்
21 மார்2020
04:35
மும்பை : கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக, நாட்டிலுள்ள நிறுவனங்களில்
கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்றும், பணப் புழக்கத்திலும் சரிவு உண்டாகும் என்றும், ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்திய வர்த்தக சபைகளின் கூட்டமைப்பான, ‘பிக்கி’ மேற்கொண்ட ஆய்வில், இவ்வாறு தெரிய வந்துள்ளது. மந்த நிலை இது குறித்து, இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கொரோனா பாதிப்புகள் குறித்து, சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் போது, 50 சதவீத நிறுவனங்கள், தங்களின் செயல்பாடுகளில் பாதிப்புகள் ஏற்படும் என தெரிவித்தன. மேலும், 80
சதவீத நிறுவனங்கள், பணப் புழக்கத்தில் சரிவு ஏற்படும் என தெரிவித்துள்ளன.
ஏற்கனவே, நாடு பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலையை சந்தித்து வருகிறது. இப்போது பொருளாதாரத்தில், புதிதாக ஒரு பாதிப்பு கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்டு வருகிறது. இது, தேவை மற்றும் வினியோகம் ஆகியவற்றில் கடுமையான இடையூறுகளை விளைவிக்கும். தொடர்ந்து, வளர்ச்சியில் சரிவை ஏற்படுத்தும் என நிறுவனங்கள் கருதுவது, ஆய்வில் தெரிய வந்துள்ளது. கொரோனா தாக்குதலின் ஆரம்பகட்டமாக இருந்தபோதிலும்கூட, 53 சதவீத நிறுவனங்கள், இதனால் குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளன. மேலும், 80 சதவீத வணிகங்கள், நோய் தொற்றால், பணப் புழக்கத்தில் சரிவு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளன.
பொருட்கள் மற்றும் சேவைகளின் தேவை மற்றும் வினியோகம் ஆகியவற்றின் மீதான நேரடி தாக்கம் ஒருபுறமிருக்க, பொருளாதார செயல்பாடுகள் குறைந்து வருவதால், பணப் புழக்கத்தில் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகி உள்ளது. இதன் விளைவாக, ஊழியர்களுக்கான சம்பளம், வட்டி, கடனை திருப்பிச் செலுத்துவது, வரி செலுத்துவது உள்ளிட்ட அனைத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், ரிசர்வ் வங்கி, நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழில் துறையை ஆதரிக்கும் வகையில், 1 சதவீதம் அளவுக்கு, வட்டி குறைப்பை அறிவிக்க வேண்டும்.
வங்கிகளும், நிறுவனங்கள் செலுத்த வேண்டிய தொகை சம்பந்தப்பட்ட விஷயங்களில், அனுசரணை காட்ட வேண்டும். பணப் புழக்க விஷயங்களில், வங்கிகளும், ரிசர்வ் வங்கியும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
மேலும், அரசும் வரி வருவாய் குறைய வாய்ப்பிருப்பினும், மூலதன செலவுகளை குறைக்கும் முயற்சிகளை மேற்கொள்ளக்கூடாது.கொரோனா தாக்குதலால் அதிகளவில் பாதிப்பு ஏற்படக்கூடிய, சுற்றுலா, விமான துறைகளில், திவால் சட்ட நடவடிக்கைகளை சற்று நிறுத்தி வைக்க வேண்டும்.இந்த ஆய்வில், 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள், வினியோகத்
தொடரில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளன.
மேலும், 42 சதவீத நிறுவனங்கள், இயல்பு நிலை திரும்ப, மூன்று மாதங்கள் ஆகும் என தெரிவித்துள்ளன. 40 சதவீத நிறுவனங்கள், அலுவலகத்திற்கு வருவோரை பரிசோதிக்கின்றன. 30 சதவீத நிறுவனங்கள், வீட்டிலிருந்து வேலை செய்யும் திட்டத்தை அமல் செய்துள்ளன.
இவ்வாறு, பிக்கி தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|