பதிவு செய்த நாள்
20 ஏப்2020
08:39
'கிரெடிட் கார்டு' பயன்பாட்டில் எச்சரிக்கை தேவை என்பது தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. கிரெடிட் கார்டு என்பது குறுகிய கால வசதி என்பதை மனதில் கொள்ளாமல் செயல்பட்டால், கார்டு பயன்பாடு கடன் சுமையாக மாறிவிடும். தற்போது கொரோனா லாக்டவுனால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பாதிப்பு சூழலில், கிரெடிட் கார்டு கடனை சமாளிப்பதற்கான வழிகள்:
கடன் தவணை: கொரோனா பாதிப்பால், கடன்களுக்கு மாதத்தவணையை மூன்று மாத காலம் தள்ளி வைக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது கிரெடிட் கார்டுக்கும் பொருந்தும். மற்ற கடன்களை விட, கிரெடிட் கார்டு கடனுக்கு இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள யோசிக்க வேண்டும். ஏனெனில் வட்டி விகிதம் அதிகமானது.
வட்டி அதிகம்: கிரெடிட் கார்டு பில் தொகையை ஏப்ரல், மே மாதம் செலுத்தாமல் தள்ளி வைக்கலாம் என்றாலும், இந்த காலத்திற்கு வட்டி உண்டு. நிலுவையில் உள்ள தொகையுடன் சேர்த்து இதை செலுத்த வேண்டும். நிலுவை தொகை மீதான கூட்டு வட்டி, வழக்கத்தைவிட கணிசமாக அதிகரிக்கலாம்.
கூடுதல் சுமை: கடன் தவணையை தள்ளி வைப்பது, மாதந்தோறும் குறைந்த பட்ச தொகையை செலுத்துவதற்கு நிகரானதாக தோன்றலாம். ஆனால், இந்த காலத்தில் கார்டில் புதிய பொருட்களை வாங்கினால், அவற்றின் மீது, வாங்கிய நாள் முதல் வட்டி சேரும். இது, கடன் சுமையை அதிகரிக்கும்.
தனி நிபந்தனைகள்: இந்த சலுகைக்கான நிபந்தனைகளை கவனிக்க வேண்டும். ஒரு சில தனியார் வங்கிகள், சலுகை காலத்தில் புதிய பொருட்களை கார்டில் வாங்க கட்டுப்பாடு விதிக்கின்றன என்கின்றனர். எனினும்,தேவையான நேரத்தில் கார்டை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படலாம்.
கடன் சுமை: கார்டு கடனுக்கு வட்டி விகிதம் அதிகம் என்பதால், உரிய காலத்தில் தொகையை செலுத்தா விட்டால் பாதிப்பு ஏற்படும். இது, கடன் வலையில் சிக்க வைக்கலாம். எனவே, பணமுடையை சமாளிக்க முடியும் என்றால், கடன் தவணையை தள்ளிப்போடாமல் தொடர்ந்து, 'பில்' தொகையை செலுத்துவது சிறந்தது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|