பதிவு செய்த நாள்
20 ஏப்2020
08:41
தங்கம் பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் சூழலில், தங்க சேமிப்பு பத்திரங்கள் ஈர்ப்புடையதாக அமைவதாக கருதப்படுகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கம் காரணமாக, முதலீட்டாளர்கள் இடர் மிகுந்த முதலீடுகளை குறைத்துக்கொண்டு, பாதுகாப்பான முதலீடுகளை நாடத்துவங்கியுள்ளனர். இந்நிலையில், தங்க சேமிப்பு பத்திரங்கள் ஆறு கட்டங்களாக வெளியிடப்படும் என, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த வரிசையில், முதல் கட்ட பத்திரங்கள் இன்று வெளியாகின்றன. எட்டு ஆண்டு முதிர்வு கொண்ட தங்க பத்திரங்கள், காகித வடிவில் தங்கத்தில் முதலீடு செய்ய வழி செய்கின்றன. முதிர்வு காலத்தில், அப்போதைய தங்க விலைக்கு நிகரான பலன் பெறலாம் என்பதோடு, முதலீடு காலத்தில், 2.5 சதவீத வட்டி அளிக்கப்படுவது தங்க பத்திரங்களின் சிறப்பாக அமைகிறது.
பொருளாதார சூழல்
தற்போதைய சூழலில், தங்க சேமிப்பு பத்திரங்கள், முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஓராண்டாக தங்கம், 27.3 சதவீதம் உயர்ந்துள்ளது. சீனா – அமெரிக்கா இடையிலான வர்த்தக போர் மூண்டது, தங்கத்தின் மீதான ஈர்ப்பை அதிகமாக்கியது. இதனிடையே, கொரோனா வைரஸ் காரணமாக உலக அளவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, பொருளாதார மந்த நிலையை உண்டாக்கும் என, கருதப்படுகிறது. எனவே, பலரும் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை நாடுகின்றனர்.
பொருளாதார நிச்சயமற்றத்தன்மை மற்றும் பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கமான போக்கால், தங்கம் பாதுகாப்பான முதலீடாக அமைகிறது. சர்வதேச பொருளாதாரம் மீண்டெழும் வரை, தங்கத்தின் விலை ஏறுமுகமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பங்கு முதலீடு மட்டும் அல்லாமல், ‘டெப்ட் பண்ட்’ முதலீடுகளும் மோசமான பலனை அளித்து வருகின்றன. பங்குகள் போன்ற இடர் மிகுந்த முதலீடுகளை விட, தங்கம் போன்ற பாதுகாப்பான முதலீடுகளை முதலீட்டாளர்கள் நாடுகின்றனர்.தங்க சேமிப்பு பத்திரங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுவதால், இடைப்பட்ட காலத்தில் அவற்றை விற்று வெளியேறுவதும் சாத்தியம்.இவற்றின் பரிவர்த்தனை அளவு குறைவு என்பதால், பணமாக்கும் தன்மையும் குறைவாகவே உள்ளது. எனினும், இந்த நிலை மேம்பட்டு வருவதாகவும் கருதப்படுகிறது. மேலும், தங்க சேமிப்பு பத்திரத்தை அடமானத்திற்கும் பயன்படுத்தலாம்.
முதலீடு வழி
இந்த பின்னணியில், முதலீடு நோக்கில் தங்கத்தை அணுக, தங்க சேமிப்பு பத்திரங்கள் ஏற்றதாக அமைகின்றன. பொதுவாக, ஒருவரது முதலீடு தொகுப்பில் தங்கத்தின் அளவு, 10 சதவீதமாக இருக்கலாம் என, கருதப்படுகிறது.பொருளாதார தேக்கம் நிலவும் சூழலில், மேலும் அதிகரிக்கலாம் என, வல்லுனர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, கடன் சார் முதலீடுகளை அதிகம் நாடும் மூத்த குடிமக்கள், தங்க முதலீட்டை அதிகரித்துக்கொள்ளலாம் என்கின்றனர்.தங்க சேமிப்பு பத்திர முதலீடு ஈர்ப்புள்ளதாக அமையும் நிலையில், ஒரே முறையாக இதில் முதலீடு செய்வதைவிட, ஒவ்வொரு கட்டமாக வெளியிடப்படும் போதும், படிப்படியாக முதலீடு செய்வது ஏற்றதாக இருக்கும் என்கின்றனர். இதனால், ரூபாய் சராசரி பலனை பெறலாம் என்பதோடு, மொத்தமாக முதலீடு செய்ய முடியாதவர்களுக்கும் இது சரியான உத்தியாக அமையும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|